Saturday, April 19, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!

சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!

-

அன்பார்ந்த நண்பர்களே,may-day-2011

மே தினம்! இந்த உலகில் மனித குலத்தின் ஆகப் பெரும்பான்மையினருக்கு,  உரிமைகளை பெற்றுத் தந்த தினம். செந்நீர் சிந்தி, தியாகம் புரிந்து போராட்டத்தின் மூலமே மறுக்கப்பட்ட நமது உரிமைகளை கைப்பற்ற முடியும் என்று நிரூபித்த தினம்!

இது ஏதோ தொழிலாளர் தினம் என்று மட்டும் சிலர் நினைக்கிறார்கள். இல்லை நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் உங்களுக்கு கிடைத்திருக்கும் எட்டுமணி நேர வேலை, ஓய்வு, விடுமுறை, பணிப்பாதுகாப்பு, இதர உரிமைகள் அத்தனையும் முதலாளிகளின் கருணையால் கிடைத்து விடவில்லை. அவை ஒவ்வொன்றும் முதலாளிகளை அடி பணியவைத்து தொழிலாளர் வர்க்கம் கொண்டு வந்த அடிப்படை உரிமைகள்.

தனது தொழிற்சாலையில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்த தொழிலாளி வர்க்கம்தான் பின்னர் அனைத்து மக்களின் விடுதலைக்காக சோசலிசப் புரட்சிகளையும் நடத்தியிருக்கிறது. இன்று உலகில் சோசலிச முகாம் இல்லை என்பதால் அதன் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை, முன்பை விட அதிகமாயிருக்கிறது.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும், மறுகாலனியாக்கமும் முழு உலகையும் அரசியல், சமூக, பொருளாதாரம் அத்தனையிலும் சுரண்டி ஆதிக்கம் செய்கிறது. மேலாதிக்க வெறி பிடித்தலையும் அதன் ஆக்கிரமிப்பு போர்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கான், ஈராக், லிபியா, பாக்கிஸ்தான் என்று பல நாடுகளில் அதன் ஆதிக்க வெறிக்காக அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனங்கள், அமெரிக்காவின் ஆசிபெற்ற தரகு முதலாளிகள் சேர்ந்து ஒட்டச் சுரண்டுகின்றனர். தேசத்தின் தலைவிதியே இவர்களது லாபவெறிக்காக திருத்தி எழுதப்படுகிறது. சமீப காலமாக இருந்து வந்த குறைந்த பட்ச உரிமைகள் கூட இன்று தொழிலாளி வர்க்கத்திற்கு கிடையாது. சிறப்பு பொருளாதா மண்டலங்கள் என்ற பெயரில் அடிமைகள் மட்டும் வசிக்கும் முதலாளிகளின் சமஸ்தானங்கள் அதிகரித்து வருகின்றன.

நாடு வல்லரசாகிறது என்ற பெயரில் டாடா, அம்பானி, மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், மேற்குறிப்பிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையை சட்டப்படியே நடத்த அரசே கொள்கை வகுத்துத் தருகிறது.

நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் இலவசங்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிவித்தார்களே ! எந்த கட்சியாவது (பெயரளவில் இருக்கின்ற) “தொழிலாளர் சட்டப்படி, ஊதிய உயர்வு, போனஸ் பிற உரிமைகள் வழங்க உத்திரவாதப்படுத்துவோம் ! 1926 தொழிற்சங்க சட்டப்படி சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை அங்கீகரிப்போம். இதை மீறும் முதலாளிகளை தண்டிப்போம்” என்று சொன்னார்களா ? யாரும் சொல்லவில்லை. ஆக… உரிமைகளற்ற இலவசம் என்பது உயிரற்ற உடலுக்கு சமமானது. அந்த வகையில் இன்றைக்கு தொழிலாளர்கள் மட்டுமல்ல, இதரப் பிரிவு உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் சூறையாடப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டிருக்கிறார்ள். இந்த கொடுமைகளுக்கு காரணமான, கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையையும், இதற்கு அடிப்படையாக இருக்கும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

இந்த மே தினத்தில் இந்த கடமையினை அறைகூவலாக விடுத்து ம.க.இ.க வும் தோழமை அமைப்புகளும் தமிழகம் முழுவதும் மே தினத்தை போராட்ட நாளாக கடைபிடிக்கின்றன. நுகர்வு கலாச்சார பண்டிகைகளையே கொண்டாடும் நாம் உண்மையில் கடைபிடிக்க வேண்டிய நாள் மே தினமாகும்.

மே நாள் என்ற உரிமைக்கு வித்திட்ட நாளில், அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும் போராட்டத்திற்கு அறைகூவும் விதமாக நடைபெறவிருக்கும் பேரணியில் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நமது அரசியல், சமூக கடமைகளை நினைவுபடுத்தும் இந்த நாளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கலாம். வாருங்கள், விடுதலைப்பணியில் சேருங்கள்!!

________________________________________

மே நாள் பேரணி

மே 1, 2011

பேரணி துவங்குமிடம்: கல்லறை பேருந்து நிறுத்தம், ஜேம்ஸ் தெரு அருகில், பூந்தமல்லி

நேரம்: காலை 9.30 மணி

தலைமை: தோழர் முகுந்தன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

முழக்கங்கள்:

மே நாள் வாழ்க!

சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக!

அமெரிக்க உலக மேலாதிக்கத்தையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிப்போம்!

சட்டபூர்வமாக அரசு சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பகற்கொள்ளை அடிக்க வழி வகுக்கும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தை முறியடிப்போம்!

கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு பாதை வகுத்துக் கொடுத்து லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கொட்டத்தை ஒடுக்குவோம்!

ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி என்று பேசி கார்ப்பரேட் பகற்கொள்ளையை மூடிமறைக்கும் ஊடகங்கள், ‘உத்தமர்கள்’, தன்னார்வக் குழுக்களின் முகமூடிகளைக் கிழித்தெறிவோம்!

கார்ப்பரேட் கொள்ளையர்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளை நாமே தண்டிக்க, நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம்!

_____________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை, அலைபேசி: 94448 34519

வினவு: 97100 82506

__________________________

வினவுடன் இணையுங்கள்