Monday, April 21, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 11/02/2013

ஒரு வரிச் செய்திகள் – 11/02/2013

-

செய்தி: அகமதாபாத் ரெயில் நிலைய நெரிசலில் இறந்த 36 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 இலட்சம் இழப்பீடு மற்றும் இறந்தவர் குடும்பத்தினர் அலகாபாத் சென்று வர ‘இலவச ரெயில் பாஸ்’ வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார்.

நீதி: இனி கும்பமேளாவுக்கு வருபவர்கள் பாத யாத்திரை மூலம்தான் வரவேண்டும் என்று சட்டம் போடுங்கள் பாஸ்! இலவச பாஸெல்லாம் வேலைக்காகாது!

______

செய்தி:  அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அறிந்து தேசமே நிம்மதி பெருமூச்சு விடும் வேளையில் பொறுப்பு மிக்க முதல் மந்திரி பதவியில் இருக்கும் உமர் அப்துல்லாவின் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

நீதி: துணிவிருந்தால் இதே கருத்தை ஸ்ரீநகர் சென்று பாஜக பொதுக்குழுவை கூட்டி மக்களிடம் சொல்லிப்பாருங்களேன்! பிறகு பார்ப்போம் நிம்மதி பெருமூச்சு எப்படி வருமென்று?

_____

செய்தி: அப்சல் குருவின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட பிறகு அவரை தூக்கிலிடும் அரசின் முடிவு பற்றிய கடிதம், அப்சல் குருவின் மனைவியிடம் இன்று காலையில் ஒப்படைக்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் தபால் துறை தெரிவித்துள்ளது.

நீதி: இந்திய அரசின் பயங்கரவாதத்திற்கு காஷ்மீர் மக்கள் எழுதும் முடிவுரை விரைவில் தெரிவிக்கப்படும், காத்திருங்கள். அதற்கு ஸ்பீட் போஸ்ட்டெல்லாம் தேவையில்லை.

______

செய்தி: கேரளாவில் தமிழக ரேசன் அரிசிக்கு கடும் கிராக்கி: கொழிஞ்சாம்பாறைக்கு தினமும் 5 டன் கடத்தல் !

நீதி: அவ்வளவு ருசியாக இருக்கும் தமிழக ரேசன் அரிசி தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் முல்லைப் பெரியார் அணை நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

_____

செய்தி: அப்சல் குரு தூக்கை கண்டித்து காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த வாட்டகாம் கிராம மக்கள் போராடிய போது போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 12 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

நீதி: காஷ்மீர் மக்கள் மன்றத்தில் இந்திய அரசின் பயங்கரவாதம் முறியடிக்குப்படும் வரை போலீஸ் தாராளமாக யாரை வேண்டுமானாலும் சுடலாம்.

_____

செய்தி: அப்சல் குரு தூக்கிலடப்பட்டதை தொடர்ந்து புது தில்லியில் பிரபல பத்திரிகையாளரான இப்திகார் ஜிலானி வீட்டுக்கு சென்ற போலிசார் அவரை வீட்டை விட்டு வெளியாறாமல் வைத்திருந்தனர். இது தொடர்பான புகாரை வைத்து பத்திரிகையாளர் கவுன்சிலின் தலைவரான முன்னாள் நீதிபதி மார்க்ண்டேய கட்ஜூ சம்பந்தப்பட் போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நீதி: கட்ஜூ ஐயா இதெல்லாம் கடிதம் எழுதி தீர்கிற விசயமா? ஒரு தபால் கார்டு எழுதி ஹிட்லரை தண்டிக்க முடியாது என்பது இந்திய அரசின் பயங்கரவாதத்திற்கும் பொருந்தும்.

_____

செய்தி: மணிப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் 63 கிலோ பிரிவில் பங்கேற்று முதல் பரிசான தங்கப்பதக்கத்தை பெற்றுள்ள 23 வயது மகேந்திர குமார் தனது ஏழை பெற்றோருடன் ஈரோடு மூலப்பாளையம் முத்துச்சாமி காலனியில் ஒரு குடிசையில் வசிக்கிறார்.

நீதி: டெண்டுல்கரின் மகனாக பிறக்காத வரை குடிசையில் இருந்துதான் தங்கப்பதக்கத்திற்கு போராட முடியும்.

_____

செய்தி: அங்கீகாரம் கோரும் நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பொன்னேரியல் நடைபெற்ற தமிழ்நாடு நர்சரி, பிரைமரி,  மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளிகள் சங்க திருவள்ளூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

நீதி: கொள்ளையடிப்பதற்கு எந்த தடையும் கூடாது என்று கல்வி மாஃபியாக்கள் வெளிப்படையாக கோருவதுதான் நமது ஜனநாயகத்தின் தரம்.

_____

செய்தி: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதற்கு கமல் மீது ஜெயலலிதா வின் தனிப்பட்ட விரோதம் காரணம் என்ற செய்தி வெளியாகி இருந்தது. எனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்து பத்திரிகை ஆசிரியர், வெளியிட்டாளர் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதி: இவ்வளவு அவதூறு வழக்கு போட்டும் இதை எந்தப் பத்திரிகையும் கண்டித்து ஒரு துணுக்குச் செய்தி கூட போடவில்லை என்பதுதான் அல்லி ராணியின் ஆட்டத்திற்கு காரணம்!

_____