Tuesday, April 22, 2025
முகப்புஉலகம்ஈழம்பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்...!

பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்…!

-

பிணத்தைப் பார்த்து தான்
உணர்ச்சிவரும் — எனும் நிலைக்கு
மரத்துப் போனவர்களே பாருங்கள்!

நீங்கள் பார்ப்பதற்கு
இன்னுமொரு பிணம்…

புத்தக மூட்டைகளுக்கிடையே
தன் பிள்ளைமுகம்
சற்று காணத் தாமதித்தாலும்
பதறும் தாயுள்ளங்களே
பாருங்கள்…

பாலச்சந்திரன் - 2மணல் மூட்டைக் குழியில்
தான் கொலை செய்யப்படுவோம்
என்பது கூட தெரியாமல்…
சாவின் தீனியை
வாயில் வைத்தபடி
தவித்திருக்கும் பாலகனை!

என்ன நடக்கப் போகிறது
என அறியாத தனிமை…
எதையோ எதிர்நோக்கி
பீதியில் பார்வை…
கடைசிவரை நம்பியிருந்து
கைவிடப்பட்ட ஈழத்தின் சோகம்
அவன் கண்களில் தெரிகிறதா?

அதண்டு பேசினாலே
துவண்டுபோகும் வயதுடைய பிள்ளையை
ஒவ்வொரு இடமாய் நிதானமாக
வெற்றுடம்பில்
ஓட்டையிட்டிருக்கும்
துப்பாக்கி மிருகங்கள்.

அடையாளம் காணமுடியாத படி
உடல் சிதறிய
ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின்
படுகொலைத் தடயத்தை
பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்…

சத்தமே இல்லாமல்
பெண்களை வல்லுறவில் சிதைக்கவும்,
ரத்தமே இல்லாமல்
பிணங்களைத் துடைக்கவும்,
இந்திய இராணுவப் பயிற்சியின் தீவிரம்
சிங்கள இனவெறிச் செய்கையில் மொத்தமாய் தெரியுது.

கண்டிக்கத்தக்க இந்த அநீதிக்கு
காவல் இருக்குது இந்திய அரசு.
காரியவாத மவுனம் உடைத்து
தமிழகமே!
ஈழக்குரலை வெடித்துப் பேசு!

– துரை.சண்முகம்