Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தருமபுரி, சிவகங்கை: போலீஸ், ரவுடிகளை எதிர்த்து போராட்டங்கள்!

தருமபுரி, சிவகங்கை: போலீஸ், ரவுடிகளை எதிர்த்து போராட்டங்கள்!

-

1. பென்னாகரம் வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளூர் ரவுடியை எதிர்த்து நடத்தும் போராட்டம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டத்தில் உள்ள மணல் பகுதி கிராமம் காவாக்காடு. இக்காவாக்காடு கிராம மக்கள், காவாக்காடு பாப்பாங்கிணறு அருகில் உள்ள இட்டேடி வழித்தடம் மூலமாக தலைமுறை தலைமுறையாக காடுகளுக்கு சென்றுவரவும், மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று வரவும், விறகு பொறுக்கவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த பொதுவழிப்பாதையை தடுத்து போலீஸ் துணையுடன் அராஜகம் செய்து வரும் முன்னாள் சாராயவியாபாரியும், இன்னாள் நில மோசடித் திருடனுமான செயண்ணன் மகன் குமாரசாமியை எதிர்த்து விவசாயிகள் விடுதலை முன்னணி பிப்ரவரி 11ம் தேதி பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பெரும்பாலை பேருந்து நிலையத்தில் விண்ணதிரும் முழக்கங்களுடன் செஞ்சட்டையுடன், செங்கொடிகள் விண்ணில் பறக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தவுடன் ”நாம் வருவோம் என்று காத்துக் கொண்டிருந்த போலிசு தோழர்களையும், மக்களையும் கைது என்று அறிவித்து, ‘அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை’ என்று கூறி பேனரை பிடுங்க முயற்சித்தனர்.

தோழர்களும், மக்களும் ”அரெஸ்ட்ன்னு சொல்லிட்டிங்கள்ளே வர்றோம் போங்க, பயந்து ஓடிட மாட்டோம் பேனரை விட்டு கைய எடுங்க” என்று போராடி அதனை முறியடித்தனர். பெரும்பாலையில் 200-க்கும் மேற்பட்ட மக்களை இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அனைவரும் ஆதரித்து உற்சாகமூட்டினர்.

தோழர்கள் போலிஸ் நிலையம் செல்லும்வரை விண்ணதிர முழக்கமிட்டு சாராய ரவுடி, நில மோசடித் திருடனையும், அதற்கு துணையாக இருக்கும் மாமூல் போலிசையும் மக்கள் மத்தியில் காறி உமிழும்படி அம்பலப்படுத்தி முழக்கமிட்டனர். இது அப்பகுதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முழக்கமிட்டுக் கொண்டு செல்லும்போது மீண்டும் வந்து பேனரை பிடுங்கி மடிக்க முயற்சித்தது போலிசு. தோழர்கள் மீண்டும் அதனை முறியடிக்க வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவை நோக்கிப் போராட்டம் போனதைப் பார்த்த பொதுமக்களுக்கு உற்சாகமாகவும், போராட்ட உணர்வூட்டுவதாகவும் அமைந்தது. போலிசுக்கோ மூக்கறுபட்டு போனது. தோழர்களுக்கு இப்போராட்டம் புதுரத்தம் பாய்ச்சியது போல் உற்சாகமாக இருந்தது.

பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலிசு 10 பேர்மீது வழக்குப் பதிவு செய்து தனிநபர் ஜாமீனில் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

இந்த வழித்தட உரிமை சம்பந்தமாக மனித உரிமை பாதுகாப்பு மையம் உதவியுடன் வி.வி.மு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதில் மாவட்ட ஆட்சியரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். 14.2.13 அன்று காவாக்காடு இட்டேரி வழித்தடத்தை பார்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், சர்வேயர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் என அரசு அதிகாரிகளின் பட்டாளமே வந்திறங்கியது.

வழித்தடத்தை பார்வையிட்ட அரசு படை ”வழித்தடம் பயன்பாட்டிலும், பட்டாவிலும் இருக்கிறது, அதனால் பட்டாவில் 13 அடி வழித்தடம் உள்ளது. நாங்கள் தேவைப்பட்டால் 15 அடிகூட கேட்போம்” என்றும் இரண்டு நாட்களுக்கு இடத்தை அளந்து கொடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பொதுவழித்தடத்தை மறைக்க ஜேசிபி இயத்திரம் மூலம் அரசு நிலத்தில் மண் அள்ளியதிற்காக ரூ 1 லட்சம் அபராதத்தை குமாரசாமி அரசுக்கு கட்டவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார். அரசுப்படையை அடிப்படை வசதிகளற்ற கிராமத்திற்கு வரவழைத்தது வி.வி.மு-வின் போர்க்குண மிக்க போராட்டம்தான் என்றால் அது மிகையல்ல.

அரசு அதிகாரிகளின் உத்திரவை அமல்படுத்தச் சென்ற சர்வேயர், கிராம நிர்வாக அதிகாரிகளை குமாரசாமி ரவுடி கும்பல் பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளது. போலிசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மோசடிப் பேர்வழி குமாரசாமியை கைது செய்து சிறையிலடைக்காமல் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி மக்களுக்கு சேவை செய்வதை விட மாமுல் லஞ்சப் பணத்திற்கு விசுவாசமாக தங்களது சேவையை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றது. இதில் வெற்றியை ஈட்டுவதற்கு, நியாயத்தை நிலைநாட்டுவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

தகவல்: செய்தியாளர், புதிய ஜனநாயகம், தரும்புரி.

2. சிவகங்கை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அனுப்பிய செய்தி

சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேசனில் லஞ்சப் பெருச்சாளிகள்!  ரைட்டர் ராஜகோபாலின் ‘ராங்’கான வேலைகள்!

  • தமிழக அரசே! போலீஸ் துறையே!
  • கவனிச்சிட்டுப் போங்க! செலவுக்குக் கொடுங்க! என்ற பிச்சையெடுப்பது போல வருகின்ற அனைவரிடமும் கூச்சப்படாமல் கைநீட்டி லஞ்சம் வாங்குகிற கேவலமான வேலையை ‘டூட்டி’யாகப் பார்க்கும் சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் ராஜகோபால், மற்றும் போலீஸ் புரோக்கர் கூட்டாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடு!
  • உழைக்கும் மக்களே!
  • அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் பொறுக்கித் தின்னும் மானங்கெட்ட லஞ்சப் பெருச்சாளிகளைக் கண்ட இடத்தில் அடிக்க அணி திரள்வோம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு
சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 94431 75256, 99522 02916

130221-sivagangai