கேள்வி:
ஒரு தலைவர் தகவல் அறியும் கடிதம் வாங்க மறுத்து விட்டார். நான் எந்த விதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்?
– சுப்புராஜு
__________
அன்புள்ள சுப்புராஜு

உங்கள் கேள்வி முழுமையாக புரியவில்லை. எனினும் தகவல் அறியும் என்ற வார்த்தைகளை வைத்து பதிலளிக்கிறோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள், அவற்றின் துறைகள் மட்டுமே வருகின்றன. அதன்படி இந்தத் துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி நாம் தகவல்களை கேட்டு வாங்க முடியும். இதிலும் இராணுவம், உளவுத்துறை, அணுசக்தி போன்ற துறைகள் விதிவிலக்கு. இவற்றை நாம் கேட்கவே, தகவல் பெறவோ முடியாது. இது போக தனியார் நிறுவனங்களும், தனிநபர்களும் இச்சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள்.
வெளிப்படையான ஆட்சி, ஊழலற்ற ஆட்சி, ஜனநாயகம் போன்றவற்றை மேம்படுத்த வந்ததாக கூறப்படும் இச்சட்டத்தின் கீழ் சில பல தகவல்கள் வெளிவந்துள்ளன என்றாலும் இதை வைத்துக் கொண்டு மட்டும் நாம் மக்கள் பிரச்சினைகளில் வென்று விட முடியாது. மேலும் பாதுகாப்பு, நாட்டின் நலன் போன்ற வார்த்தைகளை வைத்து முக்கியமான பல கொள்ளைகள் இச்சட்டத்தினை கேலி செய்து விட்டு தொடருகின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனம் இங்கே அரசுகளுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தையெல்லாம் நாம் இச்சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியாது.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அரசியல் தலைவரிடம் இச்சட்டப்படி எந்த தகவலையும் கோர முடியாது. மற்றபடி எல்லா ஓட்டுக்கட்சி தலைவர்களிடமும் மக்கள் விரோத, சுரண்டல், கொள்ளை தொடர்பான ஏராளமான தகவல்கள் பதுங்கிக் கிடக்கின்றன. முக்கியமாக இந்த தகவல்களின் முழு சூத்திரதாரிகளான தரகு முதலாளிகளின் முழு நடவடிக்கைகளும் மர்மம் நிறைந்தவை. சொல்லப் போனால் அரசுத் துறைகளோடு கூடவே தனியார் நிறுவனங்களையும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தால்தான் உண்மையிலேயே பலனிருக்கும்.
அதுவரை அவர்களை நாம் மக்கள் மன்றத்தில் வீழ்த்தும் போதுதான் அந்த தகவல்கள் வெளிவருவதோடு அதற்கான தண்டனையையும் வாங்கித் தரமுடியும். தகவலை வெளிக் கொண்டு வருவதை விட அதன் மீதான நடவடிக்கைதான் முக்கியம். அதை மக்களைத் திரட்டித்தான் சாதிக்க முடியும்.
கீழே தொடர்புடைய ஒரு கட்டுரையை படியுங்கள். இச்சட்டம் ஒரு பாமரனை எப்படி பந்தாடியது என்பதை புரிந்து கொள்ளலாம்.