Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு கலகம் !

மின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு கலகம் !

-

மின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கணிப்பு நாடகத்தை கண்டனக் கூட்டமாக மாற்றிய ம.க.இ.க.

திருச்சியில், மின் கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒன்று மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் 08.05.2013 அன்று நடத்தப்பட்டது. ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதன் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்த தீர்மானித்தோம்.

trichy-pala-photo-1கடந்த ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மின் வாரிய ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள், நுகா்வோர் அமைப்புகள், ஓட்டுப் பொறுக்கி கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஜால்ரா கோஷ்டிகள் புடை சூழ நாடகம் நடத்தி ரூ 7784 கோடி கட்டண உயர்வு அறிவித்தது. கடந்த ஆண்டு போல நேரடியாக மக்கள் தலையில் சுமத்தாமல் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் பொறுக்க வேண்டியிருப்பதால் விவசாயத்திற்கும், குடிசை இணைப்புகளுக்கும் மட்டும் கட்டணத்தை உயர்த்தி, அவ்வாறு உயர்த்தப்பட்ட ரூ 973 கோடி கட்டணத்தையும் அரசே மானியமாக செலுத்துவதாகவும் தீர்மானித்துள்ளார்கள். அவ்வாறு முன்கூட்டியே தீர்மானித்து விட்டு கருத்துக் கேட்டுதான் கட்டண உயார்வை அமல்படுத்தப் போகிறோம் என்று நாடகமாடினர்.

இலவச புழுத்த அரிசி வழங்குவதை நாளிதழ்களில் பத்துப் பக்கம் விளம்பரம் போடும் அரசு மக்களின் உயிராதாரமான பிரச்சனையான மின் கட்டண உயார்வு பற்றிய கூட்டத்திற்கு கண்ணுக்கே தென்படாத அளவுக்கு செய்தி வெளியிட்டிருந்தது. தலை கணக்குக்கு மின் வாரிய ஊழியர்களையே கொண்டுவந்து மண்டபத்தை நிரப்பியிருந்தார்கள். போதாக் குறைக்கு போலீஸ் வேறு. கடந்த ஆண்டைப் போல ஜால்ராக் கோஷ்டியினரும் தயாராக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஆரம்பத்தில் பேச அழைக்கப்பட்ட ஒருவர், ”எல்லாப் பொருட்களும் விலை உயார்ந்துவிட்டது. அதனால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க முடியாது. படித்த அதிகாரிகளான தாங்கள் மக்களை ரொம்ப பாதிக்காமல் மின் கட்டணத்தை உயர்த்துங்கள்”, என்று பிள்ளையார் சுழி போட்டு (மின்சார ஒழுங்கு முறை ஆண்டைகளிடம் பிச்சை கேட்டு) ஆரம்பித்துவைத்தார். அதன் பின்னர் பேசிய மின்சார வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர்,”மின் கட்டணத்தை உயர்த்தி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்க வேண்டும் ”,என்று கேட்டுக்கொண்டார். இப்படியாக மின் கட்டண உயர்வுக்கு ஆதரவான கருத்துக் கேட்புக் கூட்டம் ஆரம்பித்தது .

அடுத்து மனித உரிமைப் பாதுகாப்பு மைய திருச்சி மாவட்ட தலைவர் காவிரிநாடன் பேச அழைக்கப்பட்டார். அவர், ” ஊழியர்கள் ரிடையர்மெண்ட் ஆகும் போதுதான் இவ்வளவு ஊழியர்கள் ஒன்றாக திரள்வார்கள். இந்த கருத்துக் கேட்பு கூட்டம் பணிநிறைவு விழாக் கூட்டம் போலத்தான் உள்ளது”, என்று நக்கலாக ஆரம்பித்தார். வந்திருந்த ஆணைய உறுப்பினர்கள் முதல் அனைவரும் சிரித்துவிட்டனர். தொடர்ந்து பேசிய காவிரிநாடன் வந்திருந்த மின்சார வாரிய ஊழியர்களைப் பார்த்து, ”2003 வரையில் நம்முடைய மின்சார வாரியம் லாபகரமாகத்தான் இயங்கி வந்தது. அதற்கு காரணம் உங்களுடைய உழைப்புதான்” என்று கூறியவுடன் அரங்கத்தில் மின்சார வாரியம் தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக திரட்டி வைத்திருந்த மின் வாரிய ஊழியர்களின் கைதட்டல் அடங்க நீண்ட நேரமானது. அதிகாரிகளோ சேம்சைடு கோல் காரணமாக அதிர்ந்து போயினர். பின்னர் மின்வாரியம் நட்டத்தில் இயங்குவதற்கு காரணம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைகளை நம் அரசுகள் அமல்படுத்தி அரசுத் துறை மின் திட்டங்களைத் தடுத்து தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஆரம்பித்த பின்னர்தான் நட்டம் ஏற்பட்டது என்று ஆதாரபூர்வமாக விளக்கினார்.

பின்னர் பேசிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருச்சிக் கிளை செயலாளர் ஆதிநாராயணமூர்த்தி, ”கடந்த ஆண்டு நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய அனைவரும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றுதான் சொன்னார்கள். ஆனால் 33 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்தினீர்கள். அதே போலத்தான் இந்த ஆண்டும் நடக்கிறது இந்த கருத்துக் கேட்பு நாடகம். இப்போதும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று மக்கள் கருத்தாக நாங்கள் சொல்கிறோம். கேட்பீர்களா நீங்கள்? மின் கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்துவிட்டு இங்கு எதற்கு இந்த ஜனநாயக நாடகம்? அரசு மின்னுற்பத்தி நிலையங்களை முடமாக்கிவிட்டு தனியாரிடம் மின்சாரம் வாங்கிய பின்னர்தானே நட்டம் ஏற்பட்டது. அதனால் தானே மின்கட்டண உயர்வு. அதுவும் குடிசைகளுக்கும், விவசாயத்துக்கும் மின்கட்டண உயர்வு. நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் பொறுக்க மின்கட்டண உயர்வை மானியம் என்ற பெயரில் அரசே ஏற்றுக் கொள்கிறது. அந்த மானியப் பணம் மட்டும் யாருடையது நம் வரிப் பணம்தானே? நம் கையை வெட்டி நமக்கே சூப்பு வைத்து தரும் கொடுமை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம். நமக்கு 16 மணிநேர மின்வெட்டு. சமச்சீர் மின்வெட்டை அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அதிகாரம் உண்டுதானே, அமல்படுத்துங்கள் பார்ப்போம். தனியார்மயத்தை, உலகமயத்தை ஒழிக்காமல் இந்த கொடுமையிலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு. பவரை கையிலெடுத்தால் உடனடியாக பவர் வரும் ”என்று கூறியவுடன் அரங்கு முழுவதும் நம் கருத்தை ஆதரிக்கும் வகையில் கைத்தட்டி ஆதரித்தார்கள்.

அடுத்து பேசிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன்,”நான் இந்த மேடையில் பேசும் பொழுது ஜாக்சன் துரைக்கு எதிராக கட்டபொம்மன் பேசுவது போல உணர்கிறேன். தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கொள்முதல் விலை என்ற பெயரில் அள்ளி கொடுத்துவிட்டு எங்களுக்கு ஏன் மின்கட்டணத்தை உயர்த்துகிறீர்கள். இந்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு அல்ல. ஓட்டு பொறுக்க வீடுவீடாக வந்தவனெல்லாம் எங்கே போனார்கள். மின்கட்டண உயர்வை மாற்றி அமைப்பதற்கான இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பதே பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது. மக்கள் மத்தியில் இந்த கூட்டத்தை நடத்தி பார்க்கட்டும். உயிரோடு ஒருவனும் திரும்ப முடியாது”, என்று உரையாற்றினார். ஆணையர்கள் வாயடைத்து போயினர்.

தொடர்ந்து சி.பி.எம்–ஐ சேர்ந்த வயதான ஓருவர், ”இதற்கு முன்னர் கட்டபொம்மன் பேசினார். இப்பொழுது பாரதியாக நான் பேசுகிறேன்”, என்று அவரும் நம் கருத்தையே வழிமொழிந்தார்.

பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்ட தலைவர் நிர்மலா, ”வீட்டில் கணவன், குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்துவிட்டு, விலைவாசி உயர்வை சமாளிக்க வேறு வழியின்றி வேலைக்கு போகும் உழைக்கும் பெண்களிடம் போய் கேளுங்கள் மின்வெட்டைப் பற்றி… கட்டண உயர்வைப் பற்றி. அவர்கள் என்ன சொல்வார்கள். அவர்கள் மின் கட்டணத்தை குறைக்க சொன்னால் குறைப்பீர்களா? விவசாயிகள் பாசன நீரும் இல்லாமல் நிலத்தடி நீரை பயன்படுத்த மோட்டாருக்கு கரண்டும் இல்லாமல் பட்டினி சாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்”, என்று நிலையை விளக்கினார்.

அடுத்து பேசிய தோழர் ஒருவர், ”சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் பார்த்து விஜயகாந்த் கேட்கிறார் மின்வெட்டை குறையுங்கள் என்று. அதற்கு பதிலளித்து பேசிய ஜெயலலிதா, மின் கட்டணத்தை உயர்த்துவது மாநில அரசு அல்ல. அந்த அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மின்சார ஒழுங்கு முறை ஆணையம்தான் மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் கொண்டது. அதில் மாநில அரசு தலையிட முடியாது. இது கூட தெரியவில்லை விஜயகாந்துக்கு -என்று கிண்டலடித்தார். மாநில முதலமைச்சருக்கே கட்டுப்படாத மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எங்கள் கருத்துக்களையெல்லாம் கேட்டு அமுல் படுத்தும் என்ற நம்பிக்கை இல்லை. நாங்கள் பன்னிரண்டு மணி நேரம் வேகாத வெயிலில் உழைத்துவிட்டு இரவு வீட்டில் வந்து படுத்தால் மணிக்கு ஒருமுறை கரண்டை கட் பண்ணுறீங்க. தூங்க கூட முடியாமல் வியர்வையிலும் கொசுக்கடியிலும் நாங்க சாகிறோம். ஆனால் மின்சார ஒழுங்கு முறை ஆணைய ஆணையர்களுக்கு தலைக்கு மேலே இரண்டு ஃபேன், பக்கத்தில் இரண்டு ஃபேன், உங்களை சுற்றி ஐந்து ஏர் கூலர்கள். உங்களுக்கெல்லாம் எங்க கஷ்டம் எப்படி தெரியும்”, என்று சொன்னவுடன் நெளிய ஆரம்பித்துவிட்டார்கள். பின்னர், ”மின்சார வாரியமே கட்டணத்தை உயர்த்தவில்லையென்றாலும் மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் உயர்த்தத்தான் போகின்றீர்கள்”, என்று சாடினார்.

இடைமறித்த ஆணைய உறுப்பினர் மட்டம் தட்டும் நோக்கில், ”மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு மின்சார கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் இல்லை”, என்று சொன்னார். மற்றொரு தோழர் குறுக்கிட்டு, ” பொய் சொல்லாதீர்கள். மின்சார ஒழுங்கு முறை ஆணைய சட்டம் 2003-ன் படி மின் கட்டணத்தை வாரியம் உயர்த்தாத போது ஒழுங்கு முறை ஆணையமே மின் கட்டணத்தை உயர்த்தலாம் என்று அதிகாரமளிக்கிறதா இல்லையா?” என்று ஆணையரின் பொய்யை கூட்டத்தினர் முன் போட்டுடைத்த பின் அமைதியானார்.

ம.உ.பா.மையத்தின் செயற் குழு உறுப்பினர் கிளர்ச்சியாளன் தனது பேச்சில் மின் வாரிய, மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளைக் காட்டி, ”தோழர் லெனின் அப்போதே சொன்னார். அரசு அதிகாரிகள், ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மக்களின் துயரத்தை உணரமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் எருமைத் தோல் கொண்டவர்கள்.” என்று அம்பலப்படுத்தினார். சிரிப்பலை எழுந்தது.

பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த மணிமாலை, ”விவசாயிகளான எங்களுக்கு மூன்று மணி நேரம்தான் கரண்ட் வருது. அதுவும் ராத்திரியில்தான் கரண்ட் வருது. மோட்டார் போடப் போய் நாங்களெல்லாம் பாம்பு கடிச்சு சாகிறோம். நீங்க இங்க உட்கார்ந்து சவடால் பேச்சு பேசுறீங்க. மின்சாரத்தை ஒழுங்கா கொடுங்க. அப்புறம் மின் கட்டணத்தை உயர்த்துவதைப் பற்றி பேசுங்க”, என்று கூறினார்.

அடுத்து பேசிய பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த பவானி மின்சார ஊழியர்களைப் பார்த்து, ”மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்று அமைத்து மின்னுற்பத்தியை தனியாருக்கு தாரை வார்க்குது அரசு. மின்சார வாரியத்தை மூன்றாக பிரித்து நட்டமுன்னு சொல்லி தனியாருகிட்ட கொடுக்கப் போகிறான். அதிக விலை கொடுத்து தனியாருகிட்ட மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையில்லாம கொடுக்கிறான். மக்களை மின்வெட்டு செஞ்சு கொல்லுறானுங்க. நீங்களும் மக்கள்தானே வாயை மூடிக்கிட்டு சும்மா உட்கார்ந்திருக்கீங்க. நீங்களும் போராட வாங்க” என்று இடித்துரைத்து போராட அழைத்தார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் அப்பு, ஓவியா இரண்டு பேரும், “ஷாப்பிங் மால்களுக்கு பட்டப்பகல் போல மின் விளக்கு அலங்காரம், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஐ.டி நிறுவனங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கும் மின் வாரியமும், மின்சார ஒழுங்கு முறை ஆணையமும் மக்களுக்கு மின்சாரத்தை வெட்டுகிறது, மாணவர்களுக்கு இரவு நேரங்களில் படிப்பதற்கு முடியவில்லை. சின்னஞ்சிறு குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும், முதியவர்களும் தூக்கமின்றி நோயுற்றுள்ளனர். இந்த நிலை மேலும் மோசமாகும் பட்சத்தில் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை”, என்று கூறினார்கள்.

அதிகாரிகளிடம் மிகவும் மரியாதையாகவும், பணிவுடனும் பேச வேண்டும் என்று கலந்து கொண்டவர்கள் கருதியிருக்க கூடும். ஆனால் நம் தோழர்கள் மின் வாரியம் மீதும் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மீதும் அரசு மீதும் தனியார்மய, உலகமயக் கொள்கைகள் மீதும் தொடுத்த விமர்சனங்கள், தாக்குதல்கள் அந்த கருத்தை மாற்றிவிட்டது. கலந்துகொண்ட ஏனைய மக்களும் கட்சி, சங்க பிரதிநிதிகளும் மின்வாரியத்தையும், ஒழுங்குமுறை ஆணையத்தையும் அரசையும் தங்களால் இயன்ற அளவுக்கு காய்ச்சி எடுத்தனர். சிலர் மட்டுமே டிரான்ஸ்பார்மர் ரிப்பேரை சரிசெய்ய சொல்லியும், மும்முனை மின்சாரம் வழங்க சொல்லியும் கேட்டுக்கொண்டனர். மற்றபடி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை கலைக்க வேண்டும் என்றும் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று தான் அனைவரும் கோரினார்கள்.

மின்சார ஒழுங்கு முறை ஆணையர் நாகல்சாமி, ”இது ஒரு கோர்ட். மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்த மனு கொடுத்துள்ளது. அதில் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் கூறலாம். மற்றபடி யாரையும் குறை கூறுவது கூடாது” என் பலமுறை கூறியதை யாரும் ஏற்கவில்லை.

மின்சார வாரியத்தின் சார்பில் பேசிய நிதித்துறை இயக்குநர் ராஜகோபால் இந்த வருடத்திற்குள் மின் வெட்டு சரிசெய்யப்படும் என்று கூறினார். நம் தோழர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்வியெழுப்பினோம்.

2003ம் ஆண்டுக்கு முன்பெல்லாம் நட்டமின்றி நடந்த மின்சார வாரியம், இப்பொழுது ஏன் நட்டத்தில் இயங்குகிறது? அரசு மின் உற்பத்தி நிலையங்களை இயக்காமல் முடக்கிவிட்டு கூடுதல் விலை கொடுத்து உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் மின்னுற்பத்தி நிலையங்களிடமிருந்த பன்மடங்கு விலை அதிகமாக மின்சாரம் வாங்குவதன் மர்மம் என்ன? மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்சார வாரியத்திற்கு ஜி.எம்.ஆர்., சாமல் பட்டி., பி.பி.என்., மதுரை ஆகிய தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கக்கூடாது என்று உத்திரவிடப்பட்டுள்ளதே, அதனை ஏன் மின்வாரியம் மீறியது? அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பிள்ளைப் பெருமாள் நல்லூரிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரமே வாங்காமல் நாளொன்றுக்கு 1 கோடி ரூபாய் வீதம் சுமார் ஒரு வருட காலத்திற்கு நிலைக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதே, ஏன்? உள்நாட்டு மக்கள் சாகும் போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை காட்டப்படுகிறதே ஏன்? என்றெல்லாம் கேள்வி கேட்ட போது பதிலளிக்க முடியாமல் அவர் திணறினார். சில பொய்யான புள்ளிவிபரங்களை சொன்ன போது தோழர்கள் பொய் சொல்லாதீர்கள் என்று சொல்லி சரியான புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டினார்கள்

மொத்தத்தில், மின்சார ஒழுங்கு முறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டம் நம் அமைப்புகளின் பிரச்சாரக் கூட்டமாக மாறியிருந்தது. இனி வரும் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு ஆணையம் பிரச்சாரம் செய்யவில்லையென்றாலும் நாம் பிரச்சாரம் செய்யலாமென தீர்மானித்துள்ளோம். மண்டப வாடகை, மைக்செட் செலவில்லாமல் பிரச்சாரம் செய்யவும் அதிகாரிகளை எதிர்க்கும் போர்க்குணத்தை மக்களிடம் பரப்பவும் வாய்ப்பாக அமையும் அல்லவா?

தகவல்: மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி.