Saturday, April 19, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபசுமை வீடுகள்: 'அம்மாவின்' கருணையா, அதிமுகவின் கொள்ளையா ?

பசுமை வீடுகள்: ‘அம்மாவின்’ கருணையா, அதிமுகவின் கொள்ளையா ?

-

பசுமை வீடு
பசுமை வீடு : நன்றி தினமலர்

சுமை வீடு எனும் திட்டத்தை, கிராமப்புற மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த கொண்டு வந்ததாக சொல்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

2011-ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா பசுமை வீடு திட்டத்தை அறிவிக்கும் போது, ‘‘கிராம ஊராட்சிகளும், ஊராட்சி ஒன்றியங்களும் இந்திய மக்களாட்சியின் அடித்தளமாக அமைந்துள்ளன. கிராம ஊராட்சிகளையும், ஊராட்சி ஒன்றியங்களையும் நாம் வலுப்படுத்தவில்லை எனில், நமது மக்களாட்சி அமைப்பு வலுவானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்க முடியாது என்று எனது தலைமையிலான அரசு ஊரக பகுதி வாழ் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது இந்த பசுமை வீடு திட்டம்” என்று கூறினார்.

ஒவ்வொரு பயனாளிக்கும் பசுமை வீடு கட்டுவதற்காக ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில் ரூ 1.50 லட்சம் பணமாகவும், ரூ 30,000 சூரிய ஒளி மின்சாரம் அமைக்க தகடுகளாகவும் கொடுக்கப்பட்டது. கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் இந்த தொகை ரூ 2.10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட காத்திருப்போர் பட்டியலில் இருந்து ஏழைகளிலும் ஏழையை தேர்வு செய்ய வேண்டும்; கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; எச்.ஐ.வி எய்ட்ஸ் / காசநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் (துணை இயக்குநரிடம் சான்று பெற வேண்டும்), தீ, வெள்ளம் போன்ற சீற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் வீடு பெறுவதற்கு தகுதிகளாக, ஊராட்சி பகுதியில் குடியிருக்க வேண்டும்; வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்; 300 சதுர அடிக்கு குறையாமல் இடம் இருக்க வேண்டும்; குடும்பத் தலைவர் பெயரில் (அ) குடும்ப உறுப்பினர் பெயரில் தெளிவான பட்டா இருக்க வேண்டும்; வேறு எங்கும் கான்கிரீட் வீடு இருக்க கூடாது; வேறு வீடு கட்டும் அரசு திட்டத்தில் பயனடைந்திருக்கக் கூடாது; என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்; அந்த தீர்மானத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; பயனாளிகள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுக்க வேண்டும்; திட்டத்தின் கீழ் பலன் பெறுவது உறுதி செய்யப்பட்ட பின் பயனாளியே வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும்; வீடு கட்டப்படுவதன் வளர்ச்சி ஆய்வு செய்யப்பட்டு நான்கு தவணையாக பணம் வழங்கப்படும். இதுதான் திட்டத்தின் செயல்பாடு.

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

எங்கள் ஊரில் பயனாளர்களின் பட்டியலில் தனது பெயரை சேர்ப்பதற்கு பஞ்சாயத்து தலைவருக்கு அல்லது பஞ்சாயத்து உறுப்பினருக்கு ரூ 75,000 வரை கொடுக்க வேண்டும். ஊருக்கு ஊர் இந்த தொகை வேறுபடுமென்பதால் ஐந்தாயிரம், பத்தாயிரம் கூட குறைய இருக்கலாம். அரசு அறிவித்துள்ள ஏழைகள், ஆதரவற்றோர், பாதிக்கப்பட்டவர்கள் போன்ற வழிகாட்டல்களுக்கெல்லாம் இங்கு இடமே இல்லை. காசுதான் எல்லாம்.

பயனாளிகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகள் அடிப்படையிலும் பசுமை வீடு திட்டம் செயல்படுவது இல்லை. ஏற்கனவே வீடு வைத்துள்ளவர்கள் மறுபடியும் இந்தத் திட்டத்தில் வீடு கட்டுகிறார்கள். முறையான பட்டா இல்லாதவர்கள் ஊராட்சித் தலைவரை உரிய முறையில் கவனித்து பயனடைகிறார்கள்

எப்படியோ முட்டி மோதி, காசு கொடுத்து விவசாயக் கூலிவேலை செய்யும் ஏழை திட்டத்தில் ஒருவர் தனது பெயரை சேர்த்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மேல் வீட்டுக்கு மின்சார ஒயரிங், தண்ணீர் குழாய் அமைப்பு இவற்றுக்கு பொருள் வாங்கிக் கொடுக்க வேண்டும். நிலைவாசல், கதவு, ஜன்னல், அலமாரி, ஸ்லாம் இவற்றிற்கு கம்பி, மரம் வாங்கிக் கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் பிறகு குடும்ப உறுப்பினர்கள் கட்டிடம் கட்டுவதற்கு சித்தாள் வேலை செய்ய வேண்டும்.

பட்டியலில் சேர்ப்பதற்கான ‘கட்டணத்தை’ ஊர் பஞ்சாயத்து தலைவர் முதலிலேயே மொத்தமாக வாங்கி கொள்கிறார். தவணையில் வாங்குவதாக இருந்தால் பணம் கொடுக்க முடியாத நிலை வந்தால் வீடு பாதியிலேயே நின்றுவிடும். முழு பயனையும் அடைய முடியாது இல்லையா?

இதற்கு மேல், வீடு கட்டுவதில் பயன்படுத்தப்படும் பொக்லைன், டிராக்டர், மண் அள்ளும் இயந்திரம், எல்லாம் பஞ்சாயத்து தலைவரே வைத்துள்ளார். இத்தகைய திட்டங்களுக்கு வாடகைக்கு விடுவதற்காக சொந்தமாக வாங்கியிருக்கிறார். பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வெளியில் யாரிடமிருந்தும் இவற்றை வாடகைக்கு எடுக்க முடியாது. பசுமை வீடு கட்ட அரசு கொடுக்கும் பணத்திலிருந்து உத்தரவாதமான தனது வியாபாரத்தை நடத்திக் கொள்கிறார்.

இந்த பஞ்சாயத்து தலைவர் ஆளும் கட்சியை சேர்ந்தவர். பசுமை வீடு திட்டத்தை அருகில் இருந்து செயல்படுத்துவதாக வீடு கட்டி முடியும் வரை ‘பயனாளிகளை’ விட்டு விலகுவதில்லை.

பக்கத்து ஊரில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் ஊராட்சித் தலைவர். அவர் கொஞ்சம் அடக்கமாக பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கமிஷன் தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு விலகி விடுகிறார். வீடு கட்டுபவர்களை சுரண்டுவதற்கு மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த அளவில் எதிர்க்கட்சி ஆளும் கிராமத்தில் ‘ஜனநாயகம்’ கொஞ்சம் அதிகம்தான்.

26.4.2013 அன்று தினமலரில் வந்த செய்தியில், “இடைப்பாடியில் தமிழக அரசு வழங்கும் பசுமை வீடுகள், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கொங்கணாபுரம் ஒன்றியத்தில், பசுமை வீடுகளுக்காக ஓராண்டுக்கு முன்பே பணம் கொடுத்து, அப்பாவி மக்கள் ஏமாந்து வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது. அதை படித்த பிறகுதான் நம்ம ஊர் மட்டுமில்லை, தமிழ்நாடு முழுவதும் இதே நடைமுறைதான் என்று புரிந்து கொண்டேன்.

கிராமங்களையும், ஏழை மக்களையும், வளமை பெற செய்வதாக சொல்லும் இந்தத் திட்டம் உண்மையில் ஏழை மக்களை மேலும் வறுமையிலும், கஷ்டத்திலும் தள்ளுகிறது. ஆரம்பத்தில் கப்பம் கட்டுவதற்கும், கட்டிட பொருட்கள் வாங்கி கொடுப்பதற்கும் உள்ளூர் பணக்காரர்களிடம் வட்டிக்கு வாங்கி அந்த கடனை அடைக்க அவர்களிடமே அடிமைகளாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தினக் கூலியான ஒருவர் ஒரு லட்ச ரூபாய் கடனை 5 பைசா வட்டி போட்டு எப்போது அடைக்க முடியும்?

ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு அரசு வீடு கட்டி கொடுக்கும் என்று ஒரு தோற்றத்தை உண்டு பண்ணி ஏழையை கடனாளியாக்குகிறது அரசு. முன்பு மண் குடிசையானாலும் உழைத்த களைப்பில் ஆனந்தமாக தூங்கினார்கள் மக்கள். இப்பொழுது கடனாளியாக தூக்கமில்லாமல் துன்பப்படுகிறார்கள். பணம் இல்லாதவர்களுக்கு வட்டிக்கு கொடுப்பது, கட்டிடம் கட்டுவதில் காண்டிராக்ட் எடுத்து சம்பாதிப்பது, தமக்கு வேண்டியவர்களின் பெயரை பட்டியலில் சேர்த்து ஆதாயம் பெறுவது என்று அந்தந்த ஊர் ஆளும் வர்க்க பணக்காரர்கள்தான் இந்தத் திட்டத்தை அறுவடை செய்து கொள்கின்றனர்.

உழைக்கும் நிலையில் உள்ளவர்களே பணம் புரட்டுவது கஷ்டமாக இருக்கும் போது. மாற்றுத் திறனாளி, விதவை, காசநோய், எய்ட்ஸ் நோயாளி இவர்கள் நிலையை நினைத்துப் பாருங்கள், எப்படி முடியும்?

முதலமைச்சர் சட்டசபையில் திட்டத்தை அறிவித்து விட்டார். அரசு பணம் ஒதுக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டப்பட்ட வீடுகளின் கணக்கு எப்படியோ காட்டப்படுகிறது. யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்களுக்கு போய் சேர்கிறது, பயனாளி என்ற தகுதி. பலன்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், உள்ளூர் ஆளும் வர்க்க பணக்காரர்களுக்குமே போய் சேர்கிறது.

கல்லா கட்டுவது ஊர் பஞ்சாயத்து தலைவர்கள், கடனாளி ஆவது ஏழை மக்கள். மக்கள் பணத்தை கட்சிக்காரர்கள் அள்ளுவதற்காக திட்டம் தீட்டிய அம்மா ‘கருணைத் தலைவி’!

– வேணி