என் பார்வையில் வினவு – 7 : சுந்தரி
வினவிற்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்….
வினவு, என் வாழ்வினுள் வந்து நான் பார்த்து மற்றும் படித்து புரிய தொடங்கி மூன்று வருடங்கள் தான் ஆகிறது. பல அறியா பக்கங்களை நான் அறிந்து கொண்டது வினவின் மூலமே.
வினவை படிக்க தொடங்கிய பொழுது அவர்களின் கருத்துக்கள் எனக்கு புரியவில்லை. படிப்பவர்கள் எல்லோருக்கும் புரியும் பொழுது எனக்கு மட்டும் ஏன் புரியவில்லை என்றால் என் புரிதலில் ஏதோ குறை இருக்கு என்பதை உணர்ந்தேன். ஏற்கனவே படித்தவர்களிடம் நான் வாசித்ததில் எனக்கு இருக்கும் கேள்விகளை கேட்டு தான் புரிந்து கொள்ள தொடங்கினேன் . ஏன் இப்படி இவ்வளவு சிரமமாக இருக்கு இந்த தளம் படிக்க என்று நான் கேட்டதற்கு, எனக்கு கிடைத்த பதில் இப்பொழுது தானே படிக்க தொடங்கி இருக்கிறாய் தொடர்ந்து படி உனக்கு இன்னும் நன்றாக புரியும். மேலும் நீ பயண படாத ஒரு புதிய பாதையில் உன்னை பயணிக்க செய்யும் என்பதாக இருந்தது. முற்றிலும் உண்மை. என்னை சுற்றி நான் போட்டு கொண்டு இருந்த கோட்டை தாண்டி நான் வெளி உலகை பார்க்க தொடங்கி உள்ளேன்
வினவின் பார்வை ஒவ்வொரு விசயத்திலும் நான் நினைக்காத கோணத்தில் இருந்தது. புதுசாகவும் இருந்து. உதாரணத்திற்கு சில சினிமா படங்களை பார்க்கும் பொழுது ரொம்ப அருமை என்று தோணும், ஆனால் வினவின் பார்வையில் அதை வேறு விதமாக அலசி இருப்பார்கள். படிக்கும் பொழுது நாம் ஏன் இந்த கோணத்தில் யோசிக்க வில்லை என்று தோன்றும். இதையே மாற்றியும் சொல்லலாம். நாம மொக்கை என்று நினைத்த படங்களை வினவின் பார்வையில் பார்க்கும் பொழுது அந்த அலசலில் அவற்றின் முழு அர்த்தமும் புரிபடும். இது ஒரு உதாரணம் தான், இது போல் அவர்களின் அலசலில் அரசியல், அவர்களின் கோட்பாடுகள் எல்லாமே இருந்திருக்கிறது.
குறிப்பாக ஈழ தமிழர்களின் பிரச்சனை, கூடங்குளம் பற்றியும் நிறையவே என்னை அலச செய்ததும் வினவு தான். ஆரம்பத்தில் நான் வினவை படிக்க தொடங்கிய பொழுது ஏன் இது போன்ற வலைத்தளங்களை எல்லாம் படிக்கிறாய் என்ற கேள்விகளை கூட எதிர் கொண்டிருக்கிறேன். நாளடைவில் அவர்களும் இத்தளத்தை படிக்க தொடங்கி என்னுடன் அதை பற்றி விவாதிக்கவும் செய்தது வினவு.
என்னை போன்ற தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களிடம் பொதுவாக அரசியல் விசயம் மற்றும் அதன் நிலைபாடுகளை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகவும் குறைவு. என்னை போன்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இன்னும் நிறைய நிறைய பகுதிகளை ஏற்படுத்துங்கள். இந்த வருடம் நான் பெரிதும் ஏமாந்தது பெண்கள் தினத்தை ஒட்டி வெளிவரும் பெண்களின் படைப்புகளை. வெறும் படிப்பதில் மட்டும் இருந்த ஆர்வத்தை என்னாலும் எழுத முடியும் என்பதை எனக்கே உணர செய்ததில் வினவிற்கு பெரும்பங்கு உண்டு.
வினவின் கட்டுரைகளை படித்து அதை நண்பர்களிடம் பேசும் பொழுதும் வேறு சில விவாதங்கள் பொழுதும் தான் நாமும் எழுதலாமே என்ற தூண்டுதல் ஏற்பட்டது. அந்த தூண்டுதலில் தான் நானும் ஒரு வலைதளத்தை ஆரம்பித்து எழுத ஆரம்பித்து உள்ளேன். சமீபமாக எழுத்தில் ஆர்வம் வந்துள்ள என்னை போன்றவர்களுக்கு படிக்கவும் மேலும் எங்களை செழுமை படுத்தவும் வினவின் கட்டுரைகள் பெரிதும் பயன்படும்.
நன்றி வினவு, என் சிந்தனைகளை இந்த அளவேனும் விஸ்தரிப்பு செய்தமைக்கு. இன்னும் மேலும் மேலும் புதிய பகுதிகளை அறிமுக படுத்துங்கள், எங்களின் பார்வைகளை விசால படுத்துங்கள்.
மீண்டும் வாழ்த்துகளை பதிவு செய்கிறேன் வினவு.
தோழமையுடன்
சுந்தரி.
http://sindhanasaral.blogspot.
என் பார்வையில் வினவு – 8 : கிளாரா
அன்புள்ள வினவு
நான் கடந்த ஒன்றரை வருடமாக வினவு படித்து கொண்டு இருக்கிறேன். நான் வினவு படித்துவிட்டு, சாதாரண செய்திகளை கூட எளிய மற்றும் ஒடுக்கபட்ட மக்களின் சார்பாக தான் பார்க்க முடிகிறது. இங்கு மக்களுக்கு போதிக்கப் படும் அறியாமை மற்றும் அடிமைத்தனத்தை உடைத்து எரியும் வேலையை வினவு சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது. ஒரு பெண்ணாகிய நான் என்னுடைய உரிமைகளை கேட்கும் தார்மீக உணர்வு வினவு கட்டுரைகள் முலமாகவே எனக்கு கிடைத்தது.
மேலும் இங்கு ஒடுக்கப்படும் மக்களை மற்றும் அதிகாரவர்க்கதின் சூழ்ச்சிகளை எளிமையாகவும், அதே சமயம் அதற்க்கான தீர்வுடனும் அணுகுவது வினவின் சிறப்பியல்பாக நான் கருதுகிறேன். வினவு கட்டுரைகளை படித்துவிட்டு பெரிய செயல்களை செய்ய வேண்டும் என்பதை தண்டி நம்முடைய சின்ன சின்ன தவறுகளை திருத்தி கொள்ளவும் மற்றும் நம்மை ஒருமுறை பரிசிலித்து கொள்ளவும் அவை பெரிதும் உதவுகின்றன.
வினவு வளர்வது என்பது மக்கள் எந்த அளவுக்கு இன்றைய அரசியலை புரிந்து கொண்டு முற்போக்காக சிந்திக்கிறார்கள் என்பது தெளிவாகும். வினவு மக்களின் அரசியலோடு வளர்கிறது. இத்தகைய பணி என்பது வாழ்த்துக்களால் வளர்வது இல்லை வசவுகளை மற்றும் எதிர்ப்புகளை உடைத்து வளர வேண்டிய ஒன்று.
அதிகாரவர்க்கத்தின் எதிர்ப்புகளோடு வளருவோம்.
நன்றி
கிளாரா