Wednesday, April 23, 2025
முகப்புகலைகவிதைஅம்மா ! - கவிதை

அம்மா ! – கவிதை

-

அம்மா

அம்மாஅம்மா!

உனக்கென்னை
பிடிக்காமல் போகலாம்.

பரவாயில்லை.

உன் கனவுகள்
நொறுங்கியிருக்கலாம்.

வருந்துகிறேன்.

என்றாலும்
எனக்காகவும் நீ
கொஞ்சம் பெருமைப்படலாம்.

காவல் நிலையமே
போகாத பரம்பரை
என்பதில்
அப்படியென்ன கர்வமுனக்கு!

அவர்களும் நம் போலத்தான்
ஏறக்குறைய அடிமைகள்.

வில்லாளிகளை விட்டு
அம்புக்கு பயந்தென்ன
ஆகப் போகிறது?

போராடுதல் இயல்பு.

உரிமைக்காக
போராளியாய் நிற்பதில்
இழப்புகளொன்றும்
செய்வதில்லை.

எனக்கு முன்னால்
வீரஞ்செறிந்த வரலாறு
இருக்கிறது.

பின்னும் எழும்.

நான் தனியானவனில்லை
அம்மா!

அறிவும் சொற்களும்
இணைந்தால் கூட

விடுதலையை
விளக்குவது எளிதல்ல.

ஆம்!
உணர்தலே விடுதலை.

உன்
கண்ணீரைக் கயிறாக்கி
என்னைக் கட்டி விடாதே!

இவை
உனக்கும் எனக்கும்
நமக்குமானவை

அம்மா!

நீ கூண்டில்
குஞ்சு பொரித்தாய்!

நான் களத்தில்…

நம் சந்ததிகளுக்கேனும்
வாய்க்கட்டும் வானம்!

– தீபன்
________________________________________________
புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 1999

________________________________________________