மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு 94432 60164
சி. ராஜு, வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்.
நாள் : 11-11-13
பத்திரிக்கைச் செய்தி
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கோருகிறோம்.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என தமிழக மக்கள் பல்வேறு வழி முறைகளில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்தப் பின்புலத்தில் சென்னை தபால் நிலையத்திலும், சேலம் அஸ்தம்பட்டி வருமான வரி அலுவலகத்திலும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக 7 திராவிட விடுதலை கழகத்தினர் கைது செய்யபட்டுள்ளனர். இதனையே முகாந்திரமாகக் கொண்டு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இனப் படுகொலைக்குத் துணை நின்றது மட்டுமின்றி, இன்று வரை ராஜபக்சே அரசை பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசினை எதிர்த்துப் போராடும் அனைவரையும் அச்சுறுத்துவதே தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையின் நோக்கம். சட்டமன்றங்களில் அடுக்கடுக்காக தீர்மானங்களை நிறைவேற்றித் தள்ளும் தமிழக அரசு, அதே பிரச்சினைகளுக்காகப் போராடும் மக்களை சிறையில் அடைக்கிறது.
தற்போது தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக 144 தடையுத்தரவு, போராடும் மக்கள் மீது என்.எஸ்.ஏ, குண்டர் சட்டம், ராஜ துரோக குற்றச்சாட்டு, அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு போன்றவற்றை சகஜமாக காவல்துறை பயன்படுத்துகிறது..
பல ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணிபுரியும் நெய்வேலி தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்திரவு இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. ஆனால், இந்த கோரிக்கைகாக நெய்வேலியில் மட்டுமல்ல கடலூர் மாவட்டம் முழுவதும் யாரும் பேசக் கூடாது என காவல்துறை 144 தடையுத்தரவு போடுகிறது. தருமபுரியில் வன்னிய ஆதிக்க சாதி வெறியாட்டத்தில் வாழ்வை இழந்த தலித் மக்களுக்கு ஆதரவாக யாரும் பேசக் கூடாது என ஓராண்டாய் 144 தடையுத்தரவு, சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ராஜதுரோக குற்றச்சாட்டில் பிணையின்றி பல மாதங்கள் சிறை, அணு உலைக்கு எதிராகப் போராடும் இடிந்தகரை – கூடங்குளம் மக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான வழக்குகள், அப்பகுதி முழுவதும் நிரந்தரமாக 144 தடையுத்தரவு என அடக்கு முறைச் சட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஏவப்படுகின்றன.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் மக்களின் கருத்துரிமையும் போராடும் உரிமையும் பறிக்கப்படுகின்றது. கொளத்தூர் மணி மீது பாய்கின்ற தேசிய பாதுகாப்பு சட்டம், தாது மணற்கொள்ளையன் வைகுண்டராஜன் மீது பாயவில்லை. வைகுண்டராஜனுக்கு எதிராக ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை.
இத்தகைய போலீசு ஆட்சியை எதிர்த்து, சிவில் உரிமைகளுக்காகப் போராட அனைவரையும் அழைக்கிறோம்.
இப்படிக்கு
சி.ராஜு