Tuesday, April 22, 2025
முகப்புசெய்திகோவை: தில்லை போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் மீட்பு !

கோவை: தில்லை போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் மீட்பு !

-

தில்லைக் கோயில் மக்கள் சொத்தா,
மணி ஆட்ட வந்த தீட்சிதன் சொத்தா?

என்கிற தலைப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கோவையில் கடந்த 09.01.2014 தேதியன்று மக்கள் கலை இலக்கிய கழகம் (மகஇக), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ( புஜதொமு) ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. வழக்கம்போல் காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்து விட்டது.

இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கும் இடம் செஞ்சிலுவை சங்கம் என்பதாலும் , அனுமதி மறுப்பு என்பதாலும், செஞ்சிலுவை சங்கத்திற்கு மிக அருகிலேயே உள்ள நீதி மன்ற வளாகத்தில் தோழர்கள் குழுமியிருந்தனர். இந்த சூழ்நிலையில் பாஜக (BJP ) வழக்குரைஞர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நமது தோழர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகளில் திட்டினார்கள். பேசிக் கொண்டிருக்கும் போதே நமது தோழர்களை அடிக்க வந்ததனர். இதனால் நமது தோழர்களுக்கும் , பாஜக (BJP ) வழக்குரைஞர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

அருகில் இருந்த தடிகளை கொண்டும் , கைகளாலும் , நம்மைத் தாக்கினர். பதிலுக்கு நமது தோழர்களும் திருப்பித் தாக்க தொடங்கவே நிலைமை சிக்கலாக்கியது.

திட்டமிட்டு போலிசு கூட்டுடன் பாஜக (BJP) வழக்குரைஞர்கள் துணையுடன் நடந்த சதித்திட்டத்தின்படி காவல்துறை 147,447,294(B),324,506(ii) IPC ஆகிய பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்து 50 தோழர்களை சிறையில் அடைத்தது.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் 5 பேர்கள் தோழர் மில்டன் தலைமையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டனர். வழக்குரைஞர்கள் மத்தியில் நமது அமைப்பு தரப்பு நியாயத்தையும் எடுத்துக் கூறி பார் கவுன்சிலில் பேசி தோழர்களை விடுவிக்க ஏற்பாடு செய்தார்கள். கோவை வழக்குரைஞர் தோழர் சம்பத் உள்பட பல வழக்குரைஞர்கள் நமது அமைப்பிற்கு ஆதரவாக நின்றதன் அடிப்படியில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பகுதியில் உள்ள HRPC தோழர்கள், புஜதொமு, மற்ற தோழமை அமைப்பு தோழர்களின் மிகுந்த முயற்சிக்கு இடையே 11 நாட்களுக்கு பிறகு 50 தோழர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

20.01.2014 தேதி மாலை 08.15 மணியளவில் 50 தோழர்கள் சிறையில் இருந்து விடுதலையாகி கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்த தந்தை பெரியார் சிலைக்கு தோழர்  மணிவண்ணன் (மகஇக), தோழர்.விளவை ராமசாமி (புஜதொமு) ஆகியோர் தலைமையில் சென்று மாலை அணிவித்தனர்.

தோழர்கள் உற்சாகத்தோடு

  • பார்ப்பன பயங்கரவாதத்தை வேர் அறுப்போம் !
  • உச்சி குடுமி மன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்போம்!
  • தாய்மொழிக்கு ஏற்ப்பட்ட இழிவை துடைப்போம்!

என்று முழக்கமிட்டனர்.

50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றது கோவை பகுதியில் உள்ள எமது தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இயங்கிவரும் 10 ஆலைகளிலும் , எமது அமைப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும், ஜனநாயக சக்திகளிடமும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பார்ப்பன பயங்கரவாதிகள், மக்கள் விரோதிகள், முதலாளிகள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

செய்தி :

புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
கோவை