உத்திரப் பிரதேச மாநிலத்தின் கதம்பூர் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார், ரம்ஜான் அலி. அவரது வீட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி பதின்மூன்றாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், ஐந்து தங்க மோதிரங்களையும் குட்டு திவாரி என்ற இளைஞர் திருட முற்பட்டுள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்த ரம்ஜான் அலியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை சில தட்டுகள் தட்டி போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், போலீஸ் உள்ளூர் மோடியின் தளபதிகளுக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் சமரசமாக போகுமாறு, அலி குடும்பத்தினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த பிரச்சினையை கையிலெடுத்த ஆர்.எஸ்.எஸ் அதற்கு அடுத்த நாள் தனது குண்டர் படையை திரட்டிக் கொண்டு பெரும் வன்முறையில் ஈடுபட்டது. கதம்பூரில் 150 முஸ்லிம் குடும்பங்களும், ஐந்தாயிரம் இந்து குடும்பங்களும் வசிக்கின்றன. 17 முஸ்லிம்களின் வீடுகளை உடைத்து தீ வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். இந்த வன்முறை வெறியாட்டத்தில் இஜாஸ் ஹுசைன் மற்றும் ஜாகிதா கட்டூன் என்ற இருவர் தீயில் கருகி பலியாகியுள்ளனர். 17 பேர் உடல்பாகங்கள் வெந்து கான்பூரின் உர்சுலா ஹோர்ஸ்மன் நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையை அருகாமை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பதின்பருவத்து திவ்யா வாஜ்பாயி, காவ்யா மற்றும் அபய் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு தீக்கிரையாக இருந்த மேலும் ஐந்து பேரை காப்பாற்றியுள்ளனர். இம்மூவரும் முறையே 14, 15 மற்றும் 11 வயதையே கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் பணியை பாராட்டி இந்திய தேசிய லீக் கட்சி மேடையில் ஏற்றி கவுரவித்துள்ளது.
இந்து – இஸ்லாமிய மக்களிடையே மதம் சாராத முறையில் ஏற்படும் பிணக்குகளுக்காக காத்து இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். சிறு உரசலாக இருந்தாலும் அதனை ஊதிப் பெருக்கி மதவாத நோக்கங்கள் கற்பித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்துக்களை திரட்டுவதை உத்தியாகக் கொண்டு செயல்படுகிறது. முசாஃபர்நகர் வன்முறையிலிருந்து கதம்பூர் வரை இந்த உத்தி திறம்பட செயல்படுத்தப்படுவதை காணலாம். அழகிரியினுடைய திருமங்கலம் ஃபார்முலா; அம்மாவுடைய திருநெல்வேலி ஃபார்முலா முதலியவற்றை அறிந்து வைத்திருக்கும் ஊடகங்கள் அமித்ஷாவின் இந்த உ.பி கலவர ஃபார்முலாவின் விவரத்தை மட்டும் மறைத்து வருகின்றன. மாறாக, இந்த தேர்ந்த கிரிமினல் நடவடிக்கையை “அமித்ஷா ஸ்ட்ரேடஜி” என்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் உ.பியில் மதவெறியைத் தூண்டி பா.ஜ.க பெற்ற வெற்றியை கொண்டாடுகின்றன, ஊடகங்கள்.
சமூகப் பிரச்சினைகளின் மீது பெரும்பான்மை மக்கள் இயல்பாக கடைபிடிக்கும் மவுனத்தை தனது வன்முறை நடவடிக்கைகளுக்கு இந்துக்கள் வழங்கும் ஆதரவாக மொழிபெயர்க்கிறது ஆர்.எஸ்.எஸ். இந்துமதவெறியர்களின் சதிகளுக்கு எதிராக பெரும்பான்மை இந்துக்கள் தமது மவுனத்தை கலைத்தால் நமது சமூகப் பதநிலை எப்படியிருக்கும் என்பதை உ.பி.யின் கதம்பூரில் இந்த பதின் பருவத்து இளைஞர்கள் நமக்கு அழுத்தமாக சொல்கிறார்கள்.
– சம்புகன்
செய்தி ஆதாரம்: