குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கடை வீதிகளில் 24/12/2014 நடைபெற இருக்கும் நாகல்கேணி டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் விடுதலை முன்னணி நடத்தும் முற்றுகை போராட்டத்திற்கு அணிதிரட்ட பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்றது!

ஒரு தோழர் ஜெயலலிதாவை போல உடை அணிந்தும், ஜெ. முகமூடி அணிந்தும், மூன்று சாராய பாட்டில்களை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டும் பிரச்சாரம் செய்ததில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஒரு பூக்காரம்மாவிடம் முதலில் பிரசுரம் கொடுத்ததும், ஏதோ தருகிறார்கள் என வாங்கி வைத்துக்கொண்டார். அவரிடம் இப்போராட்டம் குறித்து விளக்கியதும், ”டாஸ்மாக்கால சீரழிஞ்சுகிட்டு இருக்கிற குடும்பம்மா எங்க குடும்பம். எனக்கு இரண்டு பசங்கம்மா! இரண்டு பேருமே குடிக்கிறாங்க! பாக்கு போடுறாங்க! இரண்டாவது பையனுக்கு இப்பத்தான் குழந்தை பிறந்து, மூன்று மாதங்களாகிறது. தினமும் குடிச்சு குடிச்சு, புத்தி குழம்பி போச்சு! பக்கத்திலே இருக்கிற கேசவர்த்தினி ஆஸ்பத்திரில சேர்த்து பார்த்தோம். இப்பத்தான் கொஞ்சம் தேறிவர்றான். இந்த போராட்டத்துக்கு நான் கண்டிப்பா வர்றேன்மா!” என்றார்.

மருந்து கடைக்காரர் ஒருவர் ”உடல் பஞ்சு மாதிரி! ரெம்ப சென்சிடிவ்வானது. குடிப்பதினால் உடல்ல இருக்கிற எல்லா உறுப்புகளுமே மிகவும் டேமேஜாயிரும்! கல்லீரல் ரெம்ப பாதிப்படையும். அதனால், ஏகப்பட்ட தொந்தரவு வரும்! படிக்கிற பசங்ககூட குடிக்கிறாங்க! உங்க போராட்டம் சரியான போராட்டம். நான் நிச்சயமா கலந்துக்கிறேன்!” என்றார்.

இப்படி பொது மக்கள் இந்த போராட்டத்தின் தேவையை அவர்களே உணர்ந்து நிதி அளித்து, கலந்து கொள்கிறோம் என ஆதரவும் தெரிவித்தனர். ஜெயலலிதா வேடம் அணிந்து பிரச்சாரம் செய்த பொழுது மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.