டெல்லியில் உள்ள ரயன் இண்டர்நேஷனல் என்கிற பள்ளி தனது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாரதிய ஜனதா கட்சியில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது பத்து பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதற்கென்று தனி டோல்ஃப்ரீ எண்ணை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த அறிவுறுத்தலை பெற்றோர்களுக்கும் வாட்ஸப் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். நிர்வாகத்தால் பணிக்கப்பட்ட இந்த வேலையை செய்யாத சில ஆசிரியர்களின் சம்பளத்தையும் பிடித்து வைத்திருக்கிறது நிர்வாகம்.

ரயன் இண்டர்நேஷனல் என்கிற இந்த கல்விக்குழுமம் தனது முதல் பள்ளியை 1976-ம் ஆண்டு மும்பையில் துவங்கியது. அதன் பிறகு படிப்படியாக வளர்ந்து தற்போது பெரிய கார்ப்பரேட் கல்வி நிறுவனமாக மாறியுள்ளது. மும்பையில் 27 இடங்களிலும் டெல்லியில் 10 இடங்களிலும், மகாராஷ்ட்ராவின் பிற நகரங்களிலும், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானாவிலும், தென்னிந்தியாவில் பெங்களூர், பாண்டிச்சேரியிலும், வெளிநாடுகளில் ஷார்ஜா, அபுதாபியிலும் இந்த கார்ப்பரேட் கல்வி நிறுவனம் பள்ளிகளை நடத்தி வருகின்றது.
அந்த வகையில் அதானி போல இந்த பள்ளியும் தனது தொழில் நிமித்தம் பா.ஜ.க.வோடு நெருங்கி அதன் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்கிறது. இந்த பள்ளி நடத்திய பல நிகழ்ச்சிகளில் பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு விழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்ற புகைப்படத்தை பெருமையாக இப்பள்ளி இணையதள முகப்பிலேயே வெளியிட்டிருக்கிறார்கள். ஆக இது ஒரு பா.ஜ.க ஆதரவு பள்ளிக்கூடம் என்பதில் ஒளிவு மறைவு ஏதுமில்லை. ஆனால் இப்பள்ளி தன்னை ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம் என்றும் கூறிக்கொள்கிறது. இந்த கல்வி நிறுவனத்தை நடத்துவது ஒரு கிறித்தவ குடும்பம்.
பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருப்பவர் அகஸ்டின் பின்டோ, நிர்வாக இயக்குனராக இருப்பவர் அவருடைய மனைவி கிரேஸ் பின்டோ, சி.இ.ஒவாக இருப்பவர் இவர்களுடைய மகன் ரயன் பின்டோ. இதே புதுதில்லியில் கிறித்தவ தேவாலயங்கள் இந்துமதவெறியர்களால் தாக்கப்படும் போது ‘உண்மையான கிறித்தவர்கள்’ இப்படி இந்துமதவெறியர்களை ஆதரிப்பார்களா என்று ஒரு கேள்வி தோன்றுகிறதா?

கார்ப்பரேட்டுகளுக்கு மதத்தை விட பணம் தான் முக்கியமானது. மேலும் பார்ப்பன பாசிஸ்டுகளால் பாதிக்கப்படப்போவது இவர்களைப் போன்ற கார்ப்பரேட்டுகள் அல்ல சாதாரண ஏழைக் கிறித்தவர்கள் தான் என்கிற போது ஆதாயத்திற்காக ஏன் பா.ஜ.க வை இவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்? இல்லை கிறித்தவ மதத்தை மறைமுகமான அரச மதமாக பாவிக்கின்ற அமெரிக்க அரசு கூட தனது வல்லரசு நலனுக்காக மோடியுடன் கூடிக் குலவுவதில்லையா?
கட்சிக்கு ஆட்களை சேர்த்து விட்டால் பா.ஜ.க அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெறலாம், பா.ஜ.க அரசும் சிறுபான்மை நிறுவனத்திற்கு செய்த உதவியை வைத்து விளம்பரம் செய்யலாம் என்று பரஸ்பரம் ஆதாயங்கள் இக்கூட்டணியில் உள்ளன. இதனாலேயே இப்பள்ளி நிர்வாகம் இந்த வேலையை செய்திருக்கிறது.
பொதுவில் ஆளும் வர்க்கமும், அரசும், ஊடகங்களும், அறிவாளிகளும் கல்வியில் அரசியலை கலக்கக்கூடாது, மணவர்கள் சங்கமாக சேரக்கூடாது, போராடக்கூடாது என்கிறார்கள். ஆனால் கல்வி பயில வேண்டிய மாணவர்களை இப்பள்ளி நிர்வாகம் கட்டாயமாக கட்சியில் சேரச்சொல்லி வற்புறுத்திருப்பதை அவர்கள் எதிர்ப்பதில்லை.
ஒரு மாணவனுக்கு சமூக அறிவை ஊட்டுவதற்கு தான் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் இது போன்ற கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் அதை எப்போதும் செய்வதில்லை. இவை பள்ளிக்கூடங்களே அல்ல காசுக்கேற்ப கல்வியை விற்கும் கார்ப்பரேட் கம்பெனிகள். ரயன் போன்ற தனியார் பள்ளிகள் அனைத்தும் அவ்வாறு தான் செயல்படுகின்றன. இவர்களுக்கு மாணவர்களின் எதிர்காலத்தை பற்றியோ, அவர்களை எந்த கட்சியில் சேர்த்துவிட்டால் என்ன ஆகும் என்ற கவலையோ இல்லை. ஆளும் கட்சியில் மாணவர்களை சேர்த்துவிட்டால் கம்பெனிக்கு லாபமும், சலுகையும் கிடைக்கும் என்பதால் இதை செய்திருக்கிறார்கள். இதன் விளைவுகள் எப்படி இருந்தாலும் அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
அப்படியானால் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசியலும் சங்கமும் தேவை இல்லையா என்றால் தேவை தான். மாணவர்கள் தமது தேவைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுக்க அரசியலும் சங்கமும் தேவை தான். ஆனால் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும், பார்ப்பன பாசிச கட்சியான பா.ஜ.கவும் மாணவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு எதை கற்றுக் கொடுக்கப்போகின்றன. மணவர்களை அவர்களுக்குள்ளேயே மோதிக்கொள்ளும் தனித்தனி குழுக்களாகவும், ரவுடிகளாகவும் தான் ஓட்டுக் கட்சிகள் வளர்த்து விடுகின்றன. பாசிச பா.ஜ.கவோ பிற ஓட்டுக்கட்சிகளை விட ஆபத்தானது, அது மாணவர்களை ரவுடிகளாக மட்டுமின்றி மதவெறி பாசிஸ்டுகளாகவே மாற்றிவிடும்.
இது தொடர்பான செய்தி