சென்னை ஐ.ஐ.டி.யில் “அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்” என்ற மாணவர் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – விவசாயிகள் விடுதலை முன்னணி – புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 02-06-2015 அன்று நடத்தப்பட்டது
சென்னை ஐ.ஐ.டி முன்பு நடத்தப்பட்ட போராட்டச் செய்தியையும், திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட செய்தியையும் தொடர்ந்து ஒசூர், தருமபுரி, கரூர், விருத்தாச்சலம் நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட செய்திகளை தருகிறோம்.
ஒசூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணியினர் ஒசூரில் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போலீசில் அனுமதி கேட்டிருந்த்து. அதற்கு போலீசு அனுமதி மறுத்தது.

இருந்தபோதிலும் தங்களது கருத்துரிமையை நிலைநாட்டிடும் வண்ணம் திட்டமிட்ட வகையில் இன்று ஒசூர் பேருந்து நிலையம் அருகே குவிந்த இவ்வமைப்பினர், மாணவர் அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரியும், மோடி அரசின் கருத்துரிமையை பறிக்கும் சட்டவிரோத, மக்கள்விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் தங்களது பேனர், செங்கொடிப் பதாகைகளை உயர்த்திப்பிடித்து வழிநெடுகிலும் மக்களிடையே துண்டறிக்கைகளை விநியோகித்துக் கொண்டே விண்ணதிர முழக்கமெழுப்பியபடி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். கைக்குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஊர்வலம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்தியாவில் ஆட்சி புரியும் அரசை விமர்சிக்கக் கூடாது, பெரியார் அம்பேத்கர் பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது சர்வாதிகாரம் மட்டுமல்ல, இது பார்ப்பனிய பயங்கரவாதம். தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களை இந்த நாட்டில் பயன்படுத்த கூடாது என்பது மக்களை ஒடுக்குவதின் மற்றொருவடிவம்.
ஒருபுறம் நில அபகரிப்புச் சட்டம், சாலை பாதுகாப்புச் சட்டம், வங்கித்துறை – இரயில்வே தனியார்மயம் என்று கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கைக்கூலியாக செயல்படும் மோடி அரசை விமர்சிக்கவும் அதற்கெதிராக போராடவும் இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனை மறுப்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடியாள் வேலை செய்வதற்கு ஒப்பானதாகும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கமிட்டனர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன், இவ்வமைப்பின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய அமைப்பாளர் தோழர் சரவணன் மற்றும் இவ்வமைப்பின் முன்னணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
போலீசார் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுத்ததைக் கண்டித்து, “ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னாலே கைது செய்வது, கருத்துரிமையின் கழுத்தை நெறிப்பதாகும். எங்களது கருத்தை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். பேச கூட அனுமதிக்காமல் கைது செய்வது சட்டவிரோதம்” என கண்டனம் எழுப்பினர்.
போலீசு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்காமல், அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தது. இந்தக் கைதைக் கண்டித்து போர்க்குணத்துடன் முழக்கமெழுப்பியபடியே 30 பேர் கைதாகினர்.
பேரணியை மறித்து கைது செய்த போலீசு
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பேருந்து நிலையத்தில் மாலையில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கைது நடவடிக்கைக் கண்டித்தும், போலீசை எதிர்த்தும் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர்.
தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.
கரூர்
சென்னை ஐ.ஐ.டியில் பெரியார் அம்பேத்கருக்குத் தடையை எதிர்த்து கரூர் பேருந்து நிலையம் அருகில் 02-06-2015 அன்று காலை 10.30 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்
செல் : 9894166350
தர்மபுரி
சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்திற்கு மோடி அரசின் தடையைக் கண்டித்து 02-06-2015 அன்று மாலை 4 மணிக்கு தருமபுரி தந்தி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளுக்கு போலீசு அனுமதி கொடுத்தது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக தோழர்கள் 2 நாட்களாக தருமபுரி நகரம், சுற்றியுள்ள கிராமங்கள், பேருந்து பிரச்சாரம் செய்திருந்தனர்.
2-ம் தேதி காலை திடீரென்று அனுமதி ரத்து என்று தகவல் தெரிவித்தது.
தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் இராஜா தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை பலரும் தங்கள் செல்ஃபோனில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர். ஒரு மணி நேரம் திட்டமிட்டிருந்தாலும், அரை மணி நேர ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு போலீஸ் ஆண் தோழர்களை கைது செய்து வேனில் ஏற்றியது.
பெண் தோழர்களை கைது செய்ய பெண் போலீஸ் இல்லாததால், பெண் தோழர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தடையை மீறிய ஆர்ப்பாட்டம் மக்களுக்கு போராட்டத்தை கற்றுக் கொடுப்பதாக அமைந்தது.
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி
9943312467
புரட்சிகர அமைப்புகள் பிரச்சாரம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
விருத்தாச்சலம்
சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை மோடி அரசின் உத்தரவை கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்.
2014-ல் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து அரசும், ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரங்களும் நிறைவேற்றி வரும் மறுகாலனியாக்க மற்றும் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை அம்பலபடுத்தி பிரசுரம் வினியோகித்து கூட்டங்களை நடத்திவந்த அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்யக் கோரி ஆர்.எஸ்.எஸ் வானரம் ஒன்று அனுப்பிய மொட்டை கடுதாசிக்கு பாய்ந்து நடவடிக்கை எடுத்த மனித வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அவ்வமைப்பை தடை செய்துள்ளது ஐ.ஐ.டி நிர்வாகம்.
இதை கண்டித்து விருத்தாசலத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ன்ணி சார்பாக 02-06-2015 காலை 10 மணிக்கு பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விருத்தாசலம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கிநடத்தினார். பறையிசை முழக்கமும், மோடியரசை கண்டித்து விண்ணதிரும் முழக்கங்களுடனும் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தின் தலைமையுரையில், “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதற்கான காரணம் அந்த அமைப்பு மோடி அரசின் பார்ப்பன பயங்கரவாத நடவடிக்கைகளையும், மறுகாலனியாக்க தாக்குதல்களையும் அம்பலபடுத்தியதே என்பதையும் ஐ.ஐ.டியில் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் மீது பார்ப்பனியம் தொடுத்து இருக்கும் தாக்குதலின் ஒருபகுதி என்பதையும்” விளக்கி பேசினார்.
மேலும் இதை எதிர்த்து உழைக்கும் மக்களும் மாணவர் இளைஞர்களும் போராட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி பேசினார்.
அடுத்தாக, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் புஷ்பதேவன் கண்டன உரையாற்றினார். தனது உரையில், “ஜெயலலிதா வழக்கு, ஜெயந்திரன் வழக்கு என அனைத்திலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் காரணமாக விடுதலை செய்யப்படுவது நடந்துள்ளது. இன்னொரு பக்கம், மக்கள் கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்றும் கொடைக்கானலில் மலைகளை ஆக்கரமிப்பதற்கு எதிராகவும் போராடி வருகின்றனர். இந்த அரசு அவர்கள்மீது தாக்குதல் நடத்தி வழக்கு போடுகிறது. ஐ.ஐ.டி விசயத்திலும் குறைந்தபட்ச சட்ட வழிமுறைகளை கூட இந்த மோடி அரசும் ஐ.ஐ.டியும் பின்பற்றவில்லை” என விளக்கி பேசினார்.
இறுதியாக, ஜெயங்கொண்டம் பகுதி பு.மா.இ.மு தோழர் சேகர் பேசும் போது, “பார்ப்பனியம் சாதி ரீதியாக உழைக்கும் மக்களை பிரித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதை முறியடிக்க உழைக்கும் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்” என்பதை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் 50 பேர் கலந்துகொண்டார்கள். பொதுமக்கள் திரளாக நின்று கவனித்தார்கள்.
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
நாகர்கோவிலில் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நாகர்கோவில்
அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தைத் தடை செய்த ஐ.ஐ.டி நிர்வாகத்தை கண்டித்து 02-06-2015 அன்று காலை 9.45 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 35 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். தலைமையேற்று பேசிய ம.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிவேல், “அம்பேத்கர் – பெரியார் கருத்துக்குத் தடை என்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.
காமராஜர் நற்பணி மன்ற வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “இந்தத் தடையை நீக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். இந்தப் போராட்டத்தை நாடு முழுவதும் பரவச் செய்வோம்” என்று பேசினார்.

சி.பி.எம்-ஐச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மரிய ஸ்டீபன் மற்றும் மூத்த வழக்கறிஞர் செலஸ்டின் மதவெறி திட்டத்தோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து பேசினர். விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலை கழகம், தமிழ்நாடு மார்க்சிய லெனியின கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக சிந்தனை கொண்ட வழக்கறிஞர்கள், முற்போக்காளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பத்திரிகையில் வெளியான செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
கன்னியாகுமரி மாவட்டம்
விருத்தாசலம், தொடர்புக்கு : 9791286994