சென்னை வெள்ளச் சேதம் – 2015 கள ஆய்வு

அன்பார்ந்த ஐ.டி. துறை ஊழியர்களே,
வணக்கம்.
டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை மாநகரைச் சின்னாபின்னமாக்கிய பெருவெள்ளம், நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளது. லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கி விட்டது. இப்பேரழிவை உருவாக்கிய ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ இப்போதுள்ள அரசமைப்பில் தண்டிக்கப்படப் போவதில்லை.
வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டுச் சேர்த்த பொருட்களை எல்லாம் இழந்து மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தங்கள் வாழ்க்கையைத் தொடங்கும் நிலையில்தான் அடித்தட்டு மக்கள் உள்ளனர். அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல, கை நிறைய சம்பளம் வாங்கும் நிலையில் உள்ள ஐ.டி. துறை ஊழியர்களும் இப்பெருவெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.டி. ஊழியர்களுக்கு பொருளாதார இழப்புகளையும், கடும் மன உளைச்சலையும் உருவாக்கிய பேரிடரின் மத்தியிலும் தங்களின் வேலை கொஞ்சம் கூடப் பாதிக்கப்படக் கூடாது என்ற லாபவெறியில் ஐ.டி. நிறுவனங்கள், வெள்ளத்தில் சிக்கிப் பீதியில் உறைந்திருந்த ஊழியர்களை பெயர்த்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கும், சென்னையின் நட்சத்திர விடுதிகளில் ஏற்படுத்தி இருந்த வேலை மையத்துக்கும் அனுப்பி வேலை செய்யவைத்துள்ளன.
ஐ.டி. துறை ஊழியர்களுக்கு வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைக் கண்டறிந்திட கள ஆய்வு செய்து வருகிறோம். நூற்றுக்கணக்கானோர் கள ஆய்வுப் படிவத்தை பூர்த்தி செய்து தந்துள்ளனர்.
ஆய்வுப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை இங்கே வெளியிட்டுள்ளோம். இதற்கான பதில்களை நிரப்பி combatlayoff@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இந்தக் கருத்தாய்வினைத் தொடர்ந்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
கேள்விகள்
-
சொந்த ஊர், சென்னையில் தங்கியிருக்கும் இடம், பணி புரியும் நிறுவனத்தின் பெயர்? எந்தக் கிளை?
-
மழை வெள்ளத்தினால் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன பாதிப்பு ஏற்பட்டது?
– தங்குமிடத்தினுள் வெள்ளம்
– குடிநீர், சாப்பாடு பிரச்சனை
– பொருட்கள் சேதம்
-
தாங்கள் வெள்ளத்தின்போது அலுவலகத்தில் சிக்கிக் கொண்டீர்களா? அந்த அனுபவத்தைக் கூறவும்.
-
பல ஐ.டி. நிறுவனங்களில் தொழிலாளர்களின் வாகனங்களும், உடைமைகளும், சில இடங்களில் ஊழியர்களும் கூட பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மைதானா?
-
உங்களது (உங்கள் சக ஊழியர்களது) மீட்பு, நிவாரணத்துக்கு உங்கள் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுத்தது? எவ்வளவு அக்கறை காட்டியது?
-
வாடிக்கையாளர்களின் பணி பாதிக்கப்படாமல் இருக்க உங்கள் நிறுவனம் என்ன நடவடிக்கைகள் எடுத்தது? எவ்வளவு அக்கறை காட்டியது? Business continuity Plan தங்கள் நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதா?
-
உங்கள் வசதி, பாதுகாப்பு, நலன் இவற்றுக்கு நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? ஏன்?
-
பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் குடும்பங்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும், தங்களின் உற்பத்தி தடைப்படக் கூடாது என பெங்களூரு, தில்லி, ஐதராபாத் நகரங்களுக்கு தங்கள் ஊழியர்களை அனுப்பிவைத்து வேலையைத் தொடரச் செய்வது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
-
மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல மறுத்தால் வரும் விளைவுகள் என்ன?
-
சொந்த நாட்டு மக்களின் துயர்துடைக்க ஊழியர்களை அனுப்பாமல், அந்நியநாட்டுக்கு செய்யும் சேவைகள்தான் முக்கியம் என இந்த நிறுவனங்கள் நடந்து கொள்ளுவது ஏன்?
-
தாங்கள் பணிபுரியும் கிளை சதுப்பு நிலக்காடுகள் அல்லது ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதா? ஆம் என்றால் அதைப் பற்றி உங்கள் கருத்து?
-
சென்னை வெள்ளத்திற்கான காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? எல் நினோ மட்டுமே காரணமா?
-
வெள்ள பாதிப்பு அதிகமானதற்கு யார் காரணம்? அரசு என்ன செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
-
இம்மாதிரியான பேரிடர்களைத் தவிர்த்திட / மக்களைக் காத்திட நிரந்தரமான தீர்வென நீங்கள் கருதுவது எதனை? மீண்டும் வெள்ளம் ஏற்படாது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா?
-
வெள்ளப் பாதிப்பிற்கு பின்னர், ஊழியர்களுக்கு அல்லது சமுதாயத்திற்கு உதவி செய்ய தங்களது நிறுவனம் என்ன செய்திருக்கிறது?
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
NEW DEMOCRATIC LABOUR FRONT – I.T. Employees Wing
தொடர்புக்கு: 9003198576
Email: combatlayoff@gmail.com
fb: NDLF I.T. Employees Wing