அமெரிக்காவின் காலனியாகிறது இந்தியா !- பாகம் 2
‘உயிர்காக்கும் மருந்துகளைத் தடுக்கும் மோடி அரசு’ எனும் சென்ற கட்டுரையில் ‘இந்திய உள்நாட்டு கம்பெனிகள் மலிவுவிலை பதிலீட்டு மருந்துகளைத் தயாரிப்பதற்கு இனி கட்டாய உரிமம் வழங்கப்பட மாட்டாது’ என பா.ஜ.க மோடி கும்பல் அமெரிக்காவிற்கு தன்னிச்சையாக உறுதிமொழி வழங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள்.
இந்த உறுதிமொழியின் வாயிலாக புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய் போன்ற கொடிய நோய்களுக்கு எதிரான இன்றியமையாத மருந்துகள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் 30-03-2016 அன்று வெளிவந்த செய்தி மோடி அரசின் மற்றுமொரு சதித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் மலிவுவிலை மருந்துகளைத் தயாரிப்பதற்கான கட்டாய உரிமத்தை நிறுத்துவதற்காக, இந்திய காப்புரிமைக் கழகத்தின் அதிகாரிகளுக்கு, அமெரிக்க-காப்புரிமை-மற்றும்-வணிகமுத்திரை-அலுவலகம் (United States Patent and Trademark Office) பயிற்சி வழங்கியிருப்பதை எல்லைகள்-அற்ற-மருத்துவர்கள் (Doctors without Borders-Medicines Sans Frontieres-MSF) அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
இந்திய அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க-இந்திய வர்த்தகப் பேரவை (USIBC-United States India Business Council) பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் நிதி ஆதாரத்தோடு செயல்படுபவை என்று MSF அமைப்பு தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட USIBC- அமைப்பு இந்தியாவிற்கு பயிற்சி அளிப்பது குறித்த தகவலை மேலும் அறிந்து கொள்வதற்காக இந்திய காப்புரிமைக் கழக ஜெனரல் ஓ.பி. குப்தாவை வலைவீசி தேடியும் கிடைக்கவில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
அதிகாரியும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவில்லை; அம்பத்தாறு இஞ்சு அரசன் மோடியும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் இவர்களின் மெளனத்தின் பின்னணி தான் என்ன? அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ப அறிவுசார் சொத்துடைமைச் சட்டத்தை (Intellectual Property Rights) பகிரங்கமாக மக்கள் மீது ஏவத்துடிக்கும் தீவிரமான மறுகாலனியாதிக்க காலத்தில் உயிர்காக்கும் மருந்துகளின் மீதான இவ்வளவு பெரிய சதித்தனம் ஏன் சத்தமேயின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது?
இதை விளக்குவதற்கு எல்லைகளகற்ற மருத்துவர்கள் கூட்டமைப்பின் தெற்காசிய தலைவர் லீனா மெங்கானேய், ‘ஏன் இந்தியா கொஞ்சமாவது முதுகெலும்பை காட்ட வேண்டிய தேவையிருக்கிறது?’ எனும் தலைப்பில் விளக்கியவற்றை சற்று கவனத்தில் கொள்வோம்.
பொதுசுகாதாரம், மருந்துகள் மக்களுக்கு கிடைக்கப்பெறுதல் (Accessibility of Medicines) மற்றும் அறிவுசார் சொத்து ஆகியவற்றில் இந்தியா தன் இறையாண்மையை இழந்தால் மருந்தின் வீரியத்திற்கு கட்டுப்படாத எலும்புருக்கி நோய் (Drug-Resisted Tuberculosis), எய்ட்ஸ், பூஞ்சைத்தொற்று நோய்கள் மற்றும் தொடுதலினால் பரவாத நோய்களான புற்றுநோய், சீறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, சர்க்கரை நோய், கண்புரை, அல்சைமர் ஆகியவற்றை எதிர்த்து இந்தியா இனிமேல் போராட முடியாது என்கிறார் லீனா. இதற்கு எடுத்துக்காட்டாக இந்திய பொதுசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கடந்த பத்தாண்டுகளில் முதன்முதலாக டி.பி நோய்க்கான பெடாகுயிலைன் எனும் புதிய மருந்தை பெறுவதிலும் மக்களுக்கு வழங்குவதிலும் நெருக்கடிகளை சந்தித்துவருவதாக தெரிவிக்கிறார். மேற்படி இந்த டி.பி. மருந்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனி காப்புரிமை பெற்று வைத்திருக்கிறது. இதனால் இந்தியாவில் டி.பி. எதிர்ப்பு திட்டம் முடங்கும் நிலைக்கு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி இந்தியா, மருந்துகளின் மீதான தன் உரிமையையும் இறையாண்மையையும் நிலைநாட்ட வேண்டும் என்கிறார். பன்னாட்டு மருத்துவக் கம்பெனிகள் மருந்துகளுக்கு ஏகபோகஉரிமை (Monopoly) மற்றும் விலக்குரிமை (Exclusivit) கோருவதை இந்தியா தடுக்க வேண்டும் என்கிறார்.
லீனா மெங்கானேய் சொல்வதைப் போன்று இந்தியா தன் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளித்துவ அறிவுஜீவிகளிடம் முதலில் இந்தக் கேள்வியை முன்வைப்போம். ஏனெனில் இவர்கள் தான் உலக வர்த்தக கழகத்தின் காட் (GATT-General Agreement on Trade and Tariff) மற்றும் காட்ஸ் (General Agreement on Trade and Servicies) ஒப்பந்தத்தையும் ஆரத்தழுவி வளர்ச்சி என்றும் வாய்ப்பு என்றும் வாய்பந்தல் போட்டவர்கள்! இவர்களின் ஆராய்ச்சியின் படி உலக வர்த்தக கழகத்தின் உறுப்பு நாடாக இருக்கும் இந்தியா, 2001 தோகா சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதன் மூலமாக TRIPS ஒப்பந்த விதிகளை ஏற்றுக்கொண்ட நாடாக இருக்கிறது. இந்த TRIPS ஒப்பந்த விதியைக் காட்டி, பதிலீட்டு மருந்துகளை தயாரிக்கும் பொருட்டு இந்தியா, உலகவர்த்தகக் கழகத்தில் இன்னேரம் அமெரிக்காவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம் என்கிறார்கள்.

ஒருவேளை இந்தியா, அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பசிபிக்கடல் கடந்த நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தில் (TPP-Trans Pacific Partnership) கையெழுத்திட்டிருந்தால் அமெரிக்கா இந்தியாவின் மீது திணித்திருக்கிற தாக்குதலை உலகவர்த்தகக் கழகத்தாலோ, காட்டு மற்றும் காட்ஸ் ஒப்பந்த விதிகளாலோ தடுத்து நிறுத்த முடியாது! அமெரிக்கா இனிமேல் இதற்கு அடிபணியாது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
அதாவது உலகவர்த்தகக் கழகம், காட்டு, காட்ஸ் ஒப்பந்தகளின் சகாப்தம் மறுகாலனியாக்கத்தால் தீவிரமாக்கப்பட்டு TPP-யால் காலாவதியாகப் போகின்றன. முதலாளிகள் சொல்கிற இருநாடுகள் (Bilateral) மற்றும் பலநாடுகளுக்கிடையேயான (Multi-lateral) தடையற்ற வாணிப சுதந்திர ஒப்பந்தம் (Free Trade Agreement) எனும் சுரண்டல் முறைக்குப் பதிலாக அமெரிக்க மேல்நிலை வல்லரசின் கீழ் பலநாடுகள் நேரடியாக சுரண்டப்படுவதற்கான மறுகாலனியாதிக்கத்தின் தீவிர நிலை அமலுக்கு வருகிறது.
இதில் உலகின் 40% பொருளாதாரத்தை அமெரிக்கா நிரந்தரமாக சுரண்டுவதற்கான திட்டம்தான் TPP. இத்திட்டத்தின் கீழ் பசிபிக்கடல்-கடந்த (Trans Pacific) பதினோரு நாடுகளின் (ஆஸ்திரேலியா, புரூனை, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியுசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம்) பொருளாதாரம் அமெரிக்காவின் கீழ் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. பசிபிக்கடல் கடந்த நாடுகளைப்போலவே ஐரோப்பிய ஒன்றியத்தை சுற்றிவளைக்க TPPயின் அதே சரத்துகள், Transatlantic trade and investment partnership (TTIP) எனும் ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது உலகை மேல்நிலை வல்லரசான அமெரிக்கா தனது நேரடி பங்கீட்டிற்கு தயார் செய்கிறது.

TPPயில் பங்கேற்கும் நாடுகள், இந்த ஒப்பந்த சரத்துகள் குறித்து தன் நாட்டு பாராளுமன்றத்திலோ, பத்திரிக்கைகளிலோ வேறு எங்கும் விவாதிக்கக் கூடாது எனச் சொல்கிறது இந்த ஒப்பந்தம். கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாக நடைபெற்று வந்த இந்த ஒப்பந்த சரத்துகள் குறித்த பேச்சுவார்த்தை விக்கிலீக்ஸ் மூலமாக கடந்தவருடம் (2015) அக்டோபர் மாதம் அம்பலப்படுத்தப்பட்டது. மேலும் கடந்த பிப்ரவரி 4 2016-ல் TPP ஒப்பந்தம் பதினோறு நாடுகளால் கையெழுத்தாகியிருக்கிறது.
கையெழுத்தான நாடுகளிலேயே டி.பி.பி ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை. டி.பி.பி.யின் சரத்துகள், மக்களை வெகுண்டு எழ வைக்கும் என்பதால் தான் காதோடு காது வைத்து பேசுகின்றனர். ஆனால் இந்தியா டி.பி.பி.யில் கையெழுத்திட்டதா இல்லையா என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் டி.பி.பி.யின் சரத்துகள் பதிலீட்டு மருந்துகள், அறிவுசார் காப்புரிமை சட்டங்கள் விசயத்தில் மோடி கும்பலின் ரகசிய வாக்குறுதியால் அமல்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் இந்தியா அமெரிக்காவின் டி.பி.பி ஒப்பந்தக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பது தெரியவந்திருக்கிறது!
இது ஒருபுறமிருக்க அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் டி.பி.பி.யில் இந்தியா சேர்ந்தாலும் சேராவிட்டாலும் பிரளயமான பேரழிவை இந்தியா சந்திக்க நேரிடும் என்பதை வரவு-செலவு ஆய்வை வைத்துக்கொண்டே தேசபக்தி ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பலின் கூச்சலையும் கள்ள மவுனத்தையும் ஒருசேர உடைத்துப் பார்க்க உதவுகிறார் மலேசிய பேராசிரியர் பிரதிஸ் குமார் சாகு.
இவரது கட்டுரையின்படி டி.பி.பி உறுப்பு நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் மொத்த வணிக மதிப்பு 2014-ன் படி 152 பில்லியன் டாலர்களாகும். இதில் ஏற்றுமதி 78 பில்லியன் டாலர்களாகவும் இறக்குமதி 74 பில்லியன் டாலர்களாகவும் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் வணிக உபரி ஆண்டொன்றுக்கு 4 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. ஒரு வேளை இந்தியா டி.பி.பி ஒப்பந்ததத்தில் கையெழுத்திடாவிட்டால் இந்த நாடுகளுடனான 190 மில்லியன் டாலர்களுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தை இந்தியா இழக்க நேரிடும். அதிகபட்சமாக அமெரிக்க சந்தையில் 94 மில்லியன் டாலர் இழைப்பையும், மலேசிய சந்தையில் 36 மில்லியன் இழைப்பையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக ஐவுளித்துறை, கரிம வேதியியல் பொருட்கள், இரும்பு கனிம வளங்கள், வாகனம், புகையிலைப் பொருட்கள், காலணிகள், பாதுகாப்பு கையுறைகளுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும்.
அமெரிக்க சந்தையில் மட்டும் இந்தியா ஆண்டொன்றுக்கு ஐவுளித்துறையில் 56 மில்லியன் டாலர் இழப்பையும், கரிம வேதியியல் பொருட்களுக்கான சந்தையில் 5.5 மில்லியன் டாலர் இழப்பையும் இயந்திர உபகரணங்கள் ஏற்றுமதியில் 5 மில்லியன் டாலர் இழைப்பையும் சந்திக்கும். இது இந்தியா அமெரிக்கா கொண்டுவரும் டி.பி.பி ஒப்பந்தத்தில் சேராவிட்டால் ஏற்படும் பொருளாதர நுகத்தடியாகும்.
இந்தியா ஒருவேளை டி.பி.பி ஒப்பந்தத்தில் சேர்ந்தால் டிபிபி உறுப்பு நாடுகளுடன் செய்யும் ஏற்றுமதி வர்த்தகம் ஆண்டொன்றுக்கு 5.3 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும். ஆனால் இறக்குமதி வர்த்தகமோ ஆண்டொன்றுக்கு ஏற்றுமதியை விட 10.4 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும். அதாவது இந்தியா டி.பி.பி.யில் கையெழுத்திட்டால் நிகர வர்த்தகப் பற்றாக்குறையாக 5.1 பில்லியன் டாலரை ஆண்டொன்றுக்கு சந்தித்து மேற்கொண்டு கடனாளியாக வேண்டும். அமெரிக்க மட்டுமில்லாது ஜப்பான், சிங்கப்பூர், மலேசியாவுடனும் இந்தியா மிகப்பெரும் வர்த்தகப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசு ஒரு நாட்டின் மீது செலுத்தும் நுகத்தடியை இந்த கணக்கு துல்லியமாகக் காட்டுகிறது. இந்தியா இதிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்றால் இல்லையென்றே உதட்டை பிதுக்குகின்றனர். ஏனெனில் முதலாளிகளே மெச்சிக்கொள்கிற அனைத்து வணிக ஒப்பந்தங்களையும் அமெரிக்காவின் டி.பி.பி ஒப்பந்தம் நடைமுறையில் இரத்து செய்வதால் இந்தியா அமெரிக்காவின் காலனியாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதைத்தாண்டி டி.பி.பி.யின் சரத்துகளுக்குள் உள்ளே போனால் அது ஏற்படுத்தப் போகும் அழிவுகள் எத்தகையது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
டி.பி.பி.யின் அபாயங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல. அமெரிக்க மக்களுக்கும் சேர்த்துதான். நாடு என்பதன் பெயரில் அமெரிக்க பெருமுதலாளிவர்க்கம் தான் மேல்நிலைவல்லரசாக ஆளும் வர்க்கமாக இருக்கின்றனர். சுரண்டப்படுவதில் அமெரிக்க பாட்டாளிக்கும் இந்திய பாட்டாளிக்கும் வேறுபாடு இல்லையென்ற வகையில் நோயாளியின் இரத்தம் மற்றும் மயிரில் உள்ள புரதப்பொருள் கூட பன்னாட்டு மருத்துவ கம்பெனிகளின் காப்புரிமைக்குள் வந்துவிடுகிறது. ஒரு நாட்டின் தாவர விலங்கின வகைகளும் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களுக்குள் வந்துவிடுகிறது. குறிப்பாக டி.பி.பி ஒப்பந்த சரத்துகள் பாரிஸ் சுற்றுப்புறச் சூழல் மாநாட்டு ஒப்பந்தத்தை கேலிக்கூத்தாக்கி முதலாளிகள் என்றால் இனி அமெரிக்க முதலாளிகள் மட்டுமே என்றளவிற்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன. அமெரிக்கா இந்தியா சூரிய ஒளி தகடுகள் தயாரிப்பதை காட்ஸ் ஒப்பந்தத்தை வைத்தே எளிதில் முறியடித்துவிட்டது என்றால் டி.பி.பி.யின் அறிவுசார் சொத்துரிமை, வணிக மற்றும் பதிப்புரிமை குறித்த சரத்துகள் முன்வைக்கும் தீர்மானங்கள் கொண்டுவரும் இழப்புகள் கற்பனைக்கு எட்டாதவை.
இவை உருவாக்கப் போகும் பேரழிவுகள் தெரிந்துதான் இந்திய காப்புரிமை கழக தலைமை அதிகாரி ஓ.பி குப்தா மாயமாகிப்போனார்; மோடி கும்பல் அமைதி காக்கிறது. அமெரிக்க வர்த்தகப் பேரவைக்கு யாருக்கும் தெரியாமல் ரகசிய வாக்குறுதி கொடுக்கிறது. இந்திய ஊடகங்கள் இதுகுறித்து வாயசைக்க மறுக்கின்றன. மாறாக விராட் கோலி, தோனியின் தாடி மயிர் குறித்து அங்கலாய்க்கின்றன.
நம் நாட்டு மக்களும் தான் எதிர்நோக்கும் தாக்குதல் என்ன வகையிலானவை என்ற விழிப்புணர்வின்றி இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்று குடி அல்லது கிரிக்கெட் பார் அல்லது பாரத் மாதா கி ஜே சொல்லு என்று மக்களின் தண்ணுணர்வும் காயடிக்கப்பட்டு வண்புணர்வு செய்யப்பட்ட நிலையில் இந்திய மக்கள் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் உலகப்பொருளாதாரத்தை வாரிச்சுருட்டி மூன்றாம் உலக நாடுகளை காலனியாக்கும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் டி.பி.பி பகற்கொள்ளை நம் வீட்டு வாசற்படியை முட்டிக்கொண்டு முகத்திற்கு நேராக நின்று கொண்டிருக்கிறது!
– தொடரும்
– இளங்கோ
செய்தி ஆதாரங்கள்