போராட்டத்தில் மட்டுமல்ல படிப்பிலும் பு.மா.இ.மு மாணவர்கள் நம்பர் 1
மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில் உள்ளார். இவரது தாய் சித்தாள் வேலை செய்கிறார். படிக்கும் போதே சிறு சிறு வேலைகளுக்கு சென்று தனகு கல்விச் செலவையும் சுமந்துள்ள மாரிமுத்து எல்லா போராட்டத்திலும் முன்னணியாக நிற்பவர்.
மதுரவாயில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவர் மாரிமுத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் சேர்ந்து மாணவர் பிரச்சினைகளுக்காக போராடும் அவர் ஏற்கனவே பச்சையப்பா மாணவர்களின் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் சிறை சென்றவர். பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைத்து மதுக்கடைகளை மூடுவதற்கு போராடுகிறார். மே 5 மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தில் இவரும் காவல் துறையால் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார்.
இன்றும் அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. இந்த நேர்காணல் எடுக்கப்பட்ட அடுத்த நாள் இரவில் அவர் மீண்டும் போலிசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். குற்றம் என்ன? மே 5 போராட்டத்தில் போலிஸ் நடத்திய அடக்குமுறையை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதுதான் அந்த குற்றம்.
தனது பள்ளி மாணவர்கள் பலரை அரசு குடிகாரர்களாகவும் பொறுக்கிகளாகவும் மாற்றியிருக்கும் கொடுமையினை விவரிக்கிறார் மாரிமுத்து. வாரம் இருமுறை குடிப்பது, பிறகு குடிக்காமல் இருக்க முடிவதில்லை எனும் நிலையினை மாணவர்களும் அடைகிறார்கள். காசுக்கு வழிப்பறி செய்வது, மாணவர்களிடம் தட்டிப் பறிப்பது எல்லாம் நடக்கிறது. இந்நிலையினை மாற்றி பல மாணவர்களை புடம் போட்டிருக்கிறது பு.மா.இ.மு.
அப்படித்தான் மே 5 போராட்டத்தில் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னரும் பல போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் இவர்கள். போராட்டக் களத்தில் போலிசின் கொடூரத்தை விவரிக்கும் மாரிமுத்து அதனால் மாணவர்கள் பயப்படாமல் போலீசின் அடக்குமுறையை அங்கேயே தட்டிக் கேட்டதை பெருமையுடன் விவரிக்கிறார்.
வீடியோவின் இறுதிப் பகுதியில் தனது நண்பனுக்கு ஏற்பட்ட சோகத்தை விவரிக்கிறார். குடியால் அந்த நண்பனது தந்தை இறந்ததை கண் கலங்க கூறும் மாரிமுத்து, இத்தகைய சோகங்களை நிறுத்தும் பொருட்டே தன்னைப் போன்ற மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்.
இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார். இப்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்த போராட்டத்திற்காக அவர் இரண்டாம் முறையாக சிறை சென்றிருக்கிறார்
தொடர்புக்கு
பு.மா.இ.மு 9445112675
——————————————————————————–
மாலன் மூத்த பத்திரிகையாளரா? ஜெயா ஜால்ராக்களில் மூத்த ஜால்ராவா?
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான திரு மாலன் அவர்கள் அவரது ஃபேஸ்புக் பதிவில் மே 16 மாலை 7 மணிவாக்கில் இப்படி குறிப்பிடுகிறார்:
Exit poll:NDTV says Jayalalitha will win by whisker (வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு: குறைந்த வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என என்.டி.டி.வி கூறுகிறது.)
இதற்கு முரளிதரன் என்பவர் பதிலளிக்கிறார்:
Muralidharan Kasi Viswanathan : மாலன் சார், என்டிடிவி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு எதையும் நடத்தவில்லை. பிறர் நடத்திய கணிப்புகளின் அடிப்படையிலேயே விவாதிக்கின்றனர். அதிலும்கூட தி.மு.கவே வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கு மாலன் விளக்கமளிக்கிறார்:
மாலன் நாராயணன்: தெரியும் முரளி. ஆனால் இந்தப் படமும் தலைப்பும் NDTV தளத்திலிருந்து பெறப்பட்டவை. இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே கிடைத்த சிறிய அவகாசத்தில், கைபேசி வழியே பதிவிட்டேன். விரிவாக எழுத
இயலவில்லை. தவறாகப் பொருள் கொள்ளும்படி அமைந்திருந்தால் மன்னிக்க. தெளிவு
படுத்தியமைக்கு நன்றி.
___________________
கீழே வருவது அவதூறு வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை ஒட்டி மாலன் அவர்கள் எழுதிய குறும்பதிவில் இடம்பெற்றவை:
“நாம் எழுதும் கட்டுரைகள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இருக்குமேயானால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கிசுகிசுக்கள், வதந்திகள், அரை உண்மைகள் இவற்றின் அடிப்படையில் எழுதக்கூடாது என்பது ஊடக அறக்
கோட்பாடுகளில் ஒன்று.”
திருவாளர் மாலன் அவர்கள் மூத்த பத்திரிகையாளர் மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கு சொம்படிப்பதிலும் மூத்தவர் என்பதால் மற்றவருக்கு அவர் கூறும் ஊடக அறம் அவருக்கு செல்லுபடியாகாது என்பதை அறம் சார்ந்து சிந்திப்பவர்கள் கறாராக புரிந்து கொள்ள வேண்டும். ஆச்சரியம் கொள்ளும் அற அப்ரண்டிஸ்டுகள் மனு நீதியை புரட்டிப் பார்க்க!
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறுஞ்செய்திகள்
இணையுங்கள்: