ஒரு வாரத்திற்கு மேலாக தர்மபுரி – பென்னாகரம் சுற்றுவட்டார கிராமங்களில் காவிரி மற்றும் நீர்நிலை பிரச்சினை குறித்த தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அப்போது அக்கிராம மக்களே முன்வந்து அந்த கிராமங்களில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சினைகளை வேதனையுடன் கூறி, அதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து கேட்டால் தான் குடிக்கவே தண்ணீரை பெறமுடியும் என்று கருத்து தெரிவித்தனர்.

இறுதியாக பென்னாகரம் டெம்போ ஸ்டேண்ட் அருகில் 14.10.2016 அன்று மாலை 4 மணி அளவில் தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் உயிர் ஆதாரமாக விளங்கும் நீரை சேமிப்பதற்கு நீர் நீலைகளை பாதுகாக்காமல் பச்சமுத்து, ஜேப்பியார் போன்ற கல்வி கொள்ளையர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காகவும் நீர் நிலைகள் தாரைவார்க்கப்படுவது சரியா? அதுமட்டுமல்லாமல் தாமிரவருணி ஆற்று தண்ணீரை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதுதான் அமெரிக்க கோக் கம்பெனிக்கு 1 லிட்டர் தண்ணீரை ஒன்னேகால் பைசாவுக்கு தாரைவார்த்தார்கள். இப்படி தண்ணீரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் தாரை வார்த்தது மட்டுமல்லால் இன்றைக்கு அம்மா மினரல் வாட்டர் என்று மக்களுக்கு தண்ணீரை வியாபாரம் செய்கிறார்கள்.
காவிரி நீரை தமிழகம், கேரளம், கர்நாடக, புதுச்சேரி, போன்ற மாநிலங்களுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் 2007-ல் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பின் படி தமிழக மக்களுக்கு பெற்று தரவேண்டிய தண்ணீரை பெற்றுதராமல் ஏரி, குளம், ஆறுகளை, தூர் வாரி பாதுகாக்காமல் மழைநீரை சேமிக்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது தமிழக அரசு. நடுவர் மன்ற தீர்ப்புகளை மதிக்காமலும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமலும் அடாவடி செய்து வருகிறது கர்நாடகா. இதற்கு துணையாக பி.ஜே.பி பார்ப்பன கும்பல் கர்நாடகாவில் வன்முறையை கட்டவிழ்த்தது. பி.ஜே.பி தான் தமிழக மக்களின் எதிரி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட, நீர் நிலைகளை பாதுகாக்க மக்களே அதிகாரத்தை கையிலெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்றார்.

அடுத்ததாக புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி தோழர் சத்தியநாதன் பேசுகையில், 1991-க்கு பிறகு கொண்டுவரப்பட்ட உலகமய மாக்கல் திட்டத்தின் விளைவாக அரசும், தனியார் முதலாளிகளும், கல்வி கொள்ளையர்களும் ஆக்கிரமித்து கல்லூரிகளை கட்டுவதும் மால்களை கட்டுவதும் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் விளைவாக விவசாயத்துக்கும் 1 ஏக்கருக்கு ரூ. 8000 த்தை பெற்றுக்கொண்டு தண்ணீரை வினியோகிக்கிறார்கள். இப்படியிருக்க இருக்கின்ற மழைப்பொழிவுகளையும் தேக்கி வைக்க நீர் நிலைகள் இல்லை, தண்ணீரை சேமிப்பதும் அதனை முறையாக விவசாயிகளுக்கு வினியோகிப்பதுற்கு கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வில்லை. எனவே காவிரி, முல்லை பெரியாறு போன்ற பிரச்சினைகளுக்கு நீதி மன்றத்தை நாடுவதன் மூலமும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதன் மூலமும் தீர்வு இல்லை. இந்த ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் நம்பி நாம் எப்படி தண்ணீரை பெறமுடியும். எனவே நீர் நிலைகள் பராமரிப்பதும், அதை மக்களுக்கு வினியோகிக்கும் அதிகாரம் மக்களுக்கே வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
திரளான மக்கள் இத்தெருமுனைக் கூட்டத்தை ஆர்வத்துடன் கேட்டனர். பகுதி மக்களுக்கு காவிரி நீரும், நீர் நிலைகளும் பாதுகாக்க தவறியது யார் என்பதை அம்பலப்படுத்துவதாகவும், இனியும் அரசை நம்பி நீர் ஆதாரங்களை பாதுகாக்க முடியாது என்பதை உணர்த்துவதாகவும் இத்தெருமுனைக்கூட்டம் அமைந்தது.
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தருமபுரி.
தொடர்புக்கு: 81480 55539