Saturday, April 19, 2025
முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்இராஜ்குமாரை சந்திக்க எனக்குத் துணிவில்லை

இராஜ்குமாரை சந்திக்க எனக்குத் துணிவில்லை

-

மோடி கொண்டு வந்த கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் முதல் சவுக்கடியான ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் ஒழிப்பு இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்து விட்டது.

atm-mumbaiதினக்கூலி தொழிலாளிகள், தரைக்கடை வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளிகள், சிறு வணிகர்கள், சிறு/குறு தொழில் செய்வோர்கள், விவசாயிகள் என ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது. இதைத்தான் புரட்சிகர நடவடிக்கை என பாஜக அடிவருடிகள் முதுகு சொறிந்து கொள்கின்றனர்.

பொருள், பணம் இவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கிவந்த பெரும்பான்மை மக்களின் பொருளாதாரத்தை ஊழல், கருப்புப் பண ஒழிப்பு என்று இது குறித்து எதுவுமே அறிந்திராத மற்றும் இதில் துளியும் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களை பலிகடாவாக்கிவிட்டது இந்த அறிவிப்பு.

முன்பெல்லாம், எந்த ஒரு கடைக்காரரிடமும் ரூ.1000-மோ அல்லது ரூ.500-ஓ கொடுத்து 10 அல்லது 15 ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களை வாங்கினாலும் அவர்களிடம் சில்லறை கிடைக்கும்; ஏனென்றால் அவர்களின் வர்த்தகமே சில்லறை காசுகள் மற்றும் சில்லறை நோட்டுகளின் ஊடாகத் தான் நடக்கும். அவ்வாறு சேர்ந்தவற்றை அவர்கள் ரூ.500-ஆகவோ அல்லது ரூ.1000-மாகவோ தான் மாற்றி வைத்துக்கொள்வர். ஏனென்றால் மறுநாள் சரக்கு வாங்கும்போது எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருக்கும். சேமிப்புப் பணமும் அவ்வாறு தான் 500-ஆகவோ அல்லது 1000-ஆகவோ இருக்கும்.

ஆனால் மோடிக்கும் அவர் இப்போது சேவை செய்து கொண்டிருக்கும் அதானி, அம்பானி வகையறாக்களுக்கும் இந்தக் கருப்புப் பண ஒழிப்பு பெருத்த இலாபத்தைத் தரக்கூடியது என்பது உலகமறிந்த ஒன்று. வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் மோடியின் முடிவைக் காறி உமிழ்ந்து விட்டன.

இந்தப் பின்னனியில் கீழேயுள்ள ஒரு சான்று, நமக்கு இதன் அவலத்தையும், அது தோற்றுவிக்கும் குற்றவுணர்வையும், செவியில் அறைந்து சொல்கிறது.

*****

டெல்லி நகரின் நெரிசல் மிகுந்த ஒரு காலனியின் நுழைவு வாயில் அது. அதனருகில் இராஜ்குமாரின் தள்ளுவண்டிக்கடை. ஏறக்குறைய எல்லா குடியிருப்புவாசிகளும் இராஜ்குமாரின் வாடிக்கையாளர்கள் தான். நீங்கள் விரும்பிய காய்கறிகளை இராஜ்குமார் வாங்கி வைத்திருப்பார்; உங்களின் தேவைக்கேற்ப காய்கறிகளைத் தருவார்.

அன்று நவம்பர் 14 2016:

vegetable-seller
இராஜ்குமாரின் நிலை என்னவாகும்? (மாதிரிப் படம்)

”இராஜ்குமாரை இன்று எப்படி நான் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறேன்; எனக்கு அந்த மனத்திடம் துளியும் இல்லை: பலப்பல வருடங்களாக அவர்தானே என்னைப் போன்ற இங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் காய்கறி விற்பனை செய்கிறார். ஆனால் இந்த வாரம் நான் இராஜ்குமாரின் வாடிக்கையாளனல்ல!

இராஜ்குமாரிடம் காய்கறி வாங்காமல் நான் அவரைக் கடந்து செல்லும்போது ஒன்றுமே புரியாமல் அவர் பார்த்த பார்வைக்கு என்ன பதில் சொல்வது?? என்னிடம் 400 ரூபாய் ரொக்கப்பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பது அவருக்குத் தெரியுமா? நான் இந்த வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை ஏற்கனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிவிட்டேன்; நான் மட்டுமல்ல என்னைப்போன்றே பிற குடியிருப்புவாசிகளும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிவிட்டோம் என்பது அவருக்குத் தெரியுமா? இராஜ்குமாரைப் பொருத்தவரை ஆன்லைன் ஆர்டர் என்றால் அவருடைய செல்பேசியில் ஆர்டர் கொடுத்து அதை அவர் தன் மகன் மூலமாக வீட்டு வாசலில் வந்து கொடுப்பது தானே! பணமில்லா வர்த்தகம் என்றால், நாம் முடிதிருத்தவோ அல்லது மளிகைப்பொருட்களோ வாங்கச் செல்லும் போது இராஜ்குமாரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு திரும்ப வரும் போது எடுத்துக்கொண்டு போவதுதானே? ஒன்று அந்த நிமிடமே பணம் வாங்கிக்கொள்வார்; இல்லையென்றால் அடுத்த நாள் சந்திக்கும்போது வாங்கிக்கொள்வார். அதற்குமேல் அவருக்கு ரொக்கமற்ற பரிவர்த்தனை பற்றி என்ன தெரியும்?

இங்கு வசிக்கும் நடுத்தரவர்க்கத்தினர் ஏதாவதொரு கடன் அட்டை வைத்திருப்பார்கள்; ஆனால் தவிர்க்கவியலாத சூழலில் மட்டுமே அதைப் பயன்படுத்த எத்தனிப்பர். ஆனால் இப்போது வேறு வழியே இல்லையே, என்ன செய்ய? அவர்களால் டெல்லியில் ஒரு வீடு வாங்கமுடியும் என்பதை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியுமா அல்லது அந்த வீட்டுக்கான மதிப்பில் 100-ல் ஒரு பங்கையோ செலுத்தத்தான் அவர்கள் கையில் ரொக்கப்பணம் இருக்குமா? அவர்களால் முடிந்ததெல்லாம் கிழக்கு டெல்லியின் புறநகரையும் தாண்டி இப்போதே ஒரு இடத்தை முன்பதிவு செய்தால்தான் அவர்களுடைய குழந்தைகளுக்குத் திருமணமாகும் போதாவது அந்த வீடு அவர்களுக்குச் சொந்தமாகும். இன்னும் சிலரோ வாரச்செலவுகளுக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் போது பணம் கையிருப்பில் வைத்திருப்பதை எண்ணிப்பார்க்க முடியுமா? இப்போது வேண்டுமானால் அவர்கள் குடும்பச்செலவுக்கான பொருட்களை கடன் அட்டை(Credit Card) மூலமாக வாங்கியிருக்கலாம். ஆனால் அதைக்கூட திரும்பக்கட்ட முடியாமல் அதை மாதத் தவணைத் தொகையாக(EMI) விரைவில் மாற்றவேண்டி வரும். ஏனெனில் வாங்கிய பொருட்களுக்கு நிகரான பணம் உண்மையில் அவர்களிடத்தில் இல்லை.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்துள்ளது. பணத்தின் மதிப்பு இப்போது ஏகத்துக்கும் அதிகரித்து விட்டது. எனவே பணமின்றி குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியும். ஏனென்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு மாத சம்பளம் பணமாகத் தரப்படுவதில்லை மாறாக வங்கியிலேயே செலுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பான்மை ஏழைகளைக் கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் அப்படியா உள்ளது? ரொக்கப் பணம் தான் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. அவர்களுக்கு அதுவன்றி வேறொரு சிறந்த வழி இதுவரை அறியப்படவில்லை. பற்று அட்டையோ அல்லது கடன் அட்டையோ எதுவாக இருந்தாலும் நம்மில் பலர் அதைப் பத்திரமாகப் பூட்டி வைத்த காலம் மாறி இன்று அதற்கான இரகசியக் குறியீட்டு எண்களைத் தேடி அலைகின்றனர். ஆனால் அவர்கள் இன்னும் விரும்புவது பணப் பொருளாதாரத்தைத் தான். ஒருவேளை அது நிகழாமல் போனால் இராஜ்குமாரின் நிலை என்னவாகும்?”

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
மேலும் படிக்க:
Why I can’t face my vegetable vendor this week