Wednesday, April 30, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சி : புத்தகங்களில் குற்றவாளி ஜெயா படம் நீக்கம் 5 தோழர்கள் கைது !

திருச்சி : புத்தகங்களில் குற்றவாளி ஜெயா படம் நீக்கம் 5 தோழர்கள் கைது !

-

திருச்சி: பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகத்திலிருந்து குற்றவாளி ஜெயாவின் படத்தை அகற்றி திருவள்ளுவர் படத்தை ஒட்டிய மக்கள் அதிகாரத்தின் 5 தோழர்கள் கைது!

குற்றவாளி ஜெயாவின் படங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயாவின் சமாதியை அகற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகம் தழுவிய பிரச்சாரம் மற்றும் போராட்ட  நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 20.02.2017 காலையில் திருச்சி மாநகரின் மையமான பகுதியில் அமைந்துள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி முன் நின்று மாணவர்களின் பாட புத்தகங்களில் இருந்த தீய சக்தி ஜெயாவின் படத்தை மறைத்து திருவள்ளுவர் படத்தை தந்து ஒட்டுமாறு கோரினோம். இதை ஏற்று மாணவர்களும், மாணவர்களை அழைத்து வந்த பெற்றோரும் ஆர்வமாக வாங்கி ஒட்டிக்கொண்டனர்.

ஆனால், குற்றங்களின் அம்மாவை மறைத்து திருவள்ளுவர் படத்தை ஒட்டுவதை சட்டத்தின் காவலர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்கள் அதிகாரம் தோழர்களின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து கைது செய்தனர்.

குற்றவாளியும் தீய சக்தியுமான ஜெயாவின் படம் மாணவர்களின் பாட நூல்களில் இருப்பது சரியல்ல என்று விவாதித்ததை ஏற்காமல் கைது செய்த அடாவடி செயலை கண்டித்து உடனடியாக மற்ற பிற தோழர்கள் காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டனர். ஆய்வாளர் “என்னைக் கேட்காதீர்கள், இது மேலிடத்து உத்தரவு” என்றார். உதவி ஆணையரை அணுகிய போது அவரும் “என்னைக் கேட்காதீர்கள், இது மேலிடத்து உத்தரவு” என்று தெரிவித்தார். தோழர்கள், “கைது செய்தது நீங்கள், அப்படியிருக்க எந்த மேலிடத்தை கை காட்டுகிறீர்கள்” என்று கேட்டதற்கு காவல் அதிகாரிகளிடம் பதிலில்லை.

எனவே, காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு அப்போதே விண்ணப்பிகப்பட்டது. தங்கள் அடாவடித்தனம் மேலும் மேலும் அம்பலமாவதை விரும்பாத காவல் துறை ‘மேலிடத்தில்’ பேசி வேறு வழியின்றி உடனடியாக தோழர்கள் 5 பேரையும் விடுவித்தது.

 

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி. பேச:9445475157.