Monday, April 21, 2025
முகப்புகலைகவிதைபகத்சிங் - புதிய சிந்தனையின் பிறப்பு

பகத்சிங் – புதிய சிந்தனையின் பிறப்பு

-

பகத்சிங் – புரட்சியின் புரிதல்!

கத்சிங் என்றால்
பலரையும் குறிக்கும்
பல தலைமுறைகள் சிலிர்க்கும்.

ராஜகுரு, சுகதேவ், ஆசாத்
பகவதிசரண், யதீந்திரதாஸ்
படுகேஷ்வர், யஷ்பால், துர்க்காதேவி
இன்னும்… இன்னும்…

இவைகள்
நாம் அழைப்பதற்கான பெயர்களல்ல
நம்மை அழைக்கின்ற பெயர்கள்.
உறங்கும் வேளையிலும்
நாட்டுப்பற்றை உறங்கவிடாமல்
நம்மை ஊடுருவும் கதிர்கள்.

காலனியாதிக்கத்திற்கு  எதிராக
கனன்றெழுந்த  அந்த நெருப்பு –  இன்று
மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக
உளத் தீயை மூட்டும்,
மறுகணமே புரட்சி வேண்டுமென
மனதைப்படுத்தி வாட்டும்!

புரட்சி எனில்
ஆயத்தமாய் இருக்கும் ஒன்றை
அடைந்து விடும் ஆசை அல்ல
அடுத்தடுத்து செய்ய வேண்டியதின்
செயலூக்கம்.

புரட்சியை விரும்புவதே பெரிதல்ல
புரட்சிகர நடைமுறைக்குப் பொருந்த வேண்டும்
அமைப்பில் இருப்பதே நிறைவல்ல
அரசியலின் இலக்கு நோக்கி
இயங்க வேண்டும்.

முக்கியமாய்
புரட்சியை புரிந்துகொள்ளும்
தெளிவு வேண்டும்.
உருவாக்கி வைத்திருக்கும் ஒன்றை
உள்ளம் நோகாமல்
தொட்டுக் கும்பிடும்
பக்தி பரவசமில்லை புரட்சி

உருவாக்க இருக்கும்
புதிய சமூக அமைப்புக்காக
தன்னிடமிருந்து
தடைகளைத்  தகர்க்கத் தொடங்கும்,
புற உலகின் இயக்கம் அறியும்
இயங்கியலின் செயல்துடிப்பு புரட்சி.

ஒவ்வொரு நொடியும்
புரட்சி நடக்கிறது
அதன் உயிர்துடிப்பாக
என் இதயம் இருக்கிறது.
எனும்  செய்முறையின்
அழகியல் பகத்சிங்.

புரட்சி எனும்
அடைமொழி வேண்டும்
புரட்சிகர நடைமுறையிலிருந்து
விலக்கு வேண்டும்,
என்ற போலித்தனத்தை
வேரோடு வெறுத்தவன் பகத்சிங்
ஒரு பக்கம்
பிரிட்டிஷ் கோட்டை
மறுபக்கம்
காந்தியின் ராட்டை.

வரன்முறையற்ற
பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராக
மக்கள் கிளர்ந்த போதேல்லாம்
வன்முறை என சாடியது
மகாத்மாவின் அகிம்சை சாட்டை.

நன்முறை
புரட்சி ஒன்றே
நாட்டை மீட்கும் – என
தன்னையே
ஒரு புறநிலையாக்கி
தன் சாவையும்
மண்ணில் விதைத்தான்,
தூக்குக்கயிற்றில் துளிர்த்தான்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்…
உயிரின் தேவையிலிருந்து
தங்களைப் பார்க்கவில்லை
உயிர்வாழும்   நோக்கத்தின் தேவையிலிருந்து
பார்த்தார்கள்.
ஒவ்வொரு தருணமும்
உழைக்கும் மக்களுக்காகவே
வியர்த்தார்கள்.

அது மரணமல்ல,
முடிந்த முடிவுமல்ல,
புதிய சிந்தனையின் பிறப்பு.
அடக்குமுறையாளர்களால்
ஆளும் வர்க்கத்தால்
ஒரு போதும் பகத்சிங்கை சாகடிக்கமுடியாது.

அவசர அவசரமாக தூக்கிலிட்டு
அறைகுறையாக வெட்டியெறிந்து
சட்லெஜ் நதியில் கரைத்தார்கள்
இதோ அவன்
மெரினா கரையில் துளிர்க்கிறான்…

அலகாபாத்
ஆல்பிரட் பூங்காவில்
வீரமரணம் எய்திய ஆசாத்தை
வெறிகொண்டு முடித்தார்கள்.
இதோ
அவன் நெடுவாசலில் வந்து  நிற்கிறான்.

நீங்களாக
திரும்பும் பகத்சிங்கை
எவனும்
நீங்கலாக  செய்ய முடியாது…

இந்த
அரசுக்கட்டமைப்பில்
இந்தியாவிற்கு ஏது விடுதலை?
முதலாளித்துவத்தை முடிக்காமல்
சோசலிசம் படைக்காமல்…
உழைக்கும் இந்தியா ஒளிராது
என்றான் பகத்சிங்.

வாடி வாசல் தொடங்கி
மோடி வாசல் வரை
மோதுகிறது அந்தக் குரல்!

புரிதலுக்கும்
புத்துயிர்ப்புக்கும்
பொருந்தாதது சமஸ்கிருதம்
என,
புறந்தள்ளினான் பகத்சிங்.
திருந்தாத ஜென்மங்கள்
மீண்டும் திணிக்கையில்
திரும்பிய பக்கமெல்லாம்
திரும்பவும் பிறக்கிறான்
ஆயிரம் பகத்சிங்!

மத உணர்வை
வர்க்க உணர்வால் வெல்வோம்!
என்ற பகத்சிங்கின் குரலை
பஞ்சாபிலேயே புதைத்துவிட்டோம்
என இறுமாந்திருந்த
இந்து பாசிசம்,
பெரியார் பிறந்த மண்ணில்
பேச்சுக் குரல் கேட்க
மீண்டும் பகத்சிங் பயத்தில்
‘பயங்கரவாதிகள், நக்சல்பாரிகள்’ என
பாராயணத்தில் உதற ஆரம்பித்துவிட்டது.

செத்தவனை அல்லவா?
புதைக்க முடியும்?
செய்யும் நற்‍செயல் ஒவ்வொன்றிலும்
நக் ‘செல்லாய்’ பிறக்கும்
பகத்சிங்கை பார்த்து
ஆளும்வர்க்கம்
பதைக்கத்தான் முடியும்!

மறைவில்லை பகத்சிங்…
காலத்தின் தேவையறிந்தால்
நீயும் ஒரு பகத்சிங்…

தேவையின் செயல் புரிந்தால்
நீயும் ஒரு பகத்சிங்…
செயலின் தொடர்ச்சியில் இணைந்தால்
நீயும் ஒரு பகத்சிங்…

அந்தத் தொடர்ச்சியின் மகிழ்ச்சியை உணர்ந்தால்
அங்கே…       அனைவரும் பகத்சிங்!

 – துரை. சண்முகம்.


மார்ச் 23 பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்
ஆர்.எஸ்.எஸ்.- பி.ஜே.பி. கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்!
அதற்கான களமாக தமிழகத்தை மாற்றுவோம்!

பென்னாகரம் பேருந்து நிலையம்
தெருமுனைக்கூட்டம்

என்ற முழக்கத்தை முன்வைத்து பென்னாகரம், தருமபுரி, சுற்றுவட்ட பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக பள்ளி, கல்லூரி, கிராமங்களில் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இறுதியாக மார்ச் 23 அன்று காலை 8 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையத்திலும், மாலை 5 மணிக்கு தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலும் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பு.மா.இ.மு. மாவட்ட அமைப்பாளர் அன்பு பேசுகையில் ஏன் பகத்சிங் பாதையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றும், அன்று ஒரு பிரிட்டிஷ்காரனிடம் நாடு அடிமையாக இருந்தது, ஆனால் இன்று ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் பெரும் முதலாளிகளின் கையில் நாடு அடிமைப்படுத்தப்படுகிறது நம்முடைய இயற்க்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது மேலும் கல்வியில் சமஸ்கிருதம், நீட் தேர்வு என மாணவர்களின் கல்வி உரிமைகளை மறுக்கும் மோடியின் திட்டத்தையும் அம்பலபடுத்தினார். இதனை முறியடிக்க புரட்சிகர அமைப்பில் மாணவர்கள் இணைய வோண்டும் என அறைகூவல் விடுத்தார்.

அடுத்து பேசிய பு.மா.இ.மு. தோழர் மலர்கொடி பேசுகையில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறையும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது இயற்க்கை வளங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. இந்த அரசு மக்களை பாதுகாக்காது எனவே இயற்க்கையை பாதுகாக்க மக்களே அதிகாராத்தை கையிலெடுத்து போராடுவதுதான் ஒரே தீர்வு என விளக்கினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தருமபுரி, தொடர்புக்கு: 81480 55539


மார்ச்- 23 பகத்சிங், சுகதேவ், இராஜகுரு நினைவு நாளையொட்டி ஓசூர் கொத்த கொண்டப்பள்ளியில் “ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்! அதற்கான தளமாக தமிழகத்தை மாற்றுவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் 23.03.2017 அன்று விளக்கக்கூட்டத்தை நடத்தினர்.

தோழர் காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார்.  இன்றைய தினத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள் என்று பலரும் இந்த அரசமைப்பினால் அதன் கொள்கையினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துயரத்தில் உள்ளனர். கார்ப்பரேட்டுகளின் கைத்தடியாக அடியாளாக பிரதமர் மோடி செய்துவரும் செயல்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவில் மணிப்பூர், கோவா இரு மாநிலங்களில் பா.ஜ.க-வின் அணுகுமுறை ஜனநாயகத்தின் வழியாகவே பாசிச சர்வாதிகாரத்தை நிறுவமுடியும் என்பதை காட்டி விட்டது.

இதன் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் , சிறந்த அரசியல் சாசனம், சட்டம் என்று இனி யாரும் பேசினால் அவர்கள் அம்பலப்பட்டே போவார்கள் என்பதையும் எச்சரிக்கையாக சொல்லி தற்போது பார்ப்பன பாசிசத்திற்கு சவாலாக இருந்துவரும் தமிழகத்தை அழிக்கும் வகையில் மோடியின் காட்டாட்சி  விகாரமாக உள்ளது. இதனை மக்களுக்கு உணர்த்தி அணிதிரட்டி இவர்களை மோதி வீழ்த்துவது ஒன்றுதான் தீர்வு அந்தவகையில் நாம் அணிதிரளவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். இதில் பள்ளி சிறார்கள், பெண்கள், இவ்வமைப்பின் முன்னணித் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

அடுத்து, மறுநாள் 24.03.2017 மாலை 6 மணியளவில் பாகலூர் சர்க்கில் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனைக்கூட்டத்தில் இவ்வமைச் சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். தோழர் இராணி நெடுவாசல் பிரச்சனையில் போலீசின் நடவடிக்கை மற்றும் பி.ஜே.பி பிரமுகர்களான எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் மற்றும் தமிழிசை போன்றோர்களின் நயவஞ்சக அறிக்கைகளை அம்பலப்ப்டுத்திப்பேசினார்.

தோழர் இரவிச்சந்திரன் தனது சிறப்புரையில் பகத்சிங் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தன்னுடைய இளம் வயதில் வீரம்செறிந்த அளவில் போராடிய வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றை எடுத்துரைத்து இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் பகத்சிங்குகளாக மாறவேண்டிய அவசியத்தை உணர்த்திப்பேசினார். பாகலூர் பிரிமியர் மில் ஆலைநிர்வாகம், ஏ.பி.எல் நிர்வாகம் ஆகியவற்றினால் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு நாடோடிகளாக திரியும் அவலத்தை விளக்கிப்பேசியதோடு அல்லாமல் நாடு முழுவதும் இந்த நிலமைதான் உள்ளது. பாசிச ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பியின் காட்டாட்சியில் இந்த நிலமை பன்மடங்கு முற்றி, முடைநாற்றம் வீசுவதை இனியும் நாம் பொறுத்துக்கொள்ளமுடியாது. வீதியில் இறங்கி இந்த பாசிஸ்டுகளை அவர்களின் திட்டத்தை அம்பலப்படுத்தி மோதி வீழ்த்த முன்வரவேண்டும் என்று அறைகூவி அழைத்துப்பேசினார். திரளான மக்கள் இறுதிவரை நிகழ்ச்சியை கேட்டுச்சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


மாருதி தொழிலாளர்கள் 13 பேருக்கு வாழ்நாள் தண்டனை !


கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாட்களே பேலீசும், நீதிமன்றமும் !

  • தினந்தோறும் தொழிலாளர் வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி வருகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் !
  • மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடுவோம் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க