
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து 2.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பாஜகவின் அடிமையான டெட்பாடி அரசின் முதல் எபிசோட்! சட்டப்பேரவையில் 19-ம் தேதி நேற்று பொதுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாண்டி, எம்எல்ஏக்களின் மாத சம்பளத்தை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். எம்எல்ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.2 கோடி வழங்கப்படுகிறது. அதை ரூ.6 கோடியாக உயர்த்த வேண்டும். “சட்டமன்ற உறுப்பினர்கள், வேலையே இல்லாமல் தற்போது சும்மாதான்” இருக்கிறோம். அதனால், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.6 கோடியாக உயர்த்தினால், நாங்களே இறங்கி வேலை செய்ய முடியும். அதே போன்று எம்எல்ஏக்கள் ஓய்வூதிய தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
உடனடியாக முதல்வர் எடப்பாடி (டெட்பாடி) பழனிச்சாமி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாத சம்பளம் ரூ.8,000- லிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாதாந்திர ஈட்டுப்படி ரூ.7,000 லிருந்து 10,000 ரூபாயாகவும், தொலைப்பேசி படி 5,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும், தொகுதிப்படி ரூ.10,000 லிருந்து 25,000 ரூபாயாகவும், தொகுப்புப்படி 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், வாகனப்படி ரூ.20,000 லிருந்து 25,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். அஞ்சல்படி ரூ.2,500 தொடர்ந்து வழங்கப்படும். இதன் மூலம், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் மற்றும் இதர படிகள் என மொத்தமாக ரூ.1,05,000 வழங்கப்படும் என்றும், முதலமைச்சர், அமைச்சர்கள், பேரவை தலைவர் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி 15,000 ரூபாயாகவும், சில்லரை செலவினப்படி 10,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 25,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்றார்.
மேலும், பேரவை துணைத்தலைவர், எதிர்கட்சி தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோர்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி 15,000 ரூபாயாகவும், சில்லரை செலவினப்படி 7,500 ரூபாயாகவும், தொகுதிப்படி 25,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்,
ஓய்வு பெற்ற எம்எல்ஏ, மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு 12,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியமும், எம்எல்ஏக்கள் பெறுகின்ற ஓய்வூதியத்தின் 50 சதவிகிதம் என்கிற அடிப்படையில் 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், ஓய்வூதியம் பெறுகின்ற முன்னாள் எம்எல்ஏ, மேலவை உறுப்பினர்களின் வயதை கருத்தில் கொண்டு, மருத்துவ சிகிச்சைகளுக்காக வழங்கப்படும் தொகை ஆண்டிற்கு 12,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். உயர்த்தப்பட்ட சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர படிகள் 1.7.2017 முதல் வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் முதல்வர் எடப்பாடி குறிப்பிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, 2017-18ம் ஆண்டு முதல் தற்போது வழங்கப்படும் ரூ.2 கோடியில் இருந்து, ரூ.2.50 கோடியாக உயர்த்தி வழங்கப்படுவதாகவும், சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் பேரவை காவலருக்கு வழங்கப்படும் தினப்படி ரூ.50ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தி வழங்கப்படும். துணை ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் தினப்படியானது ரூ.55ல் இருந்து ரூ.110 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அன்றாடம் தங்கள் உயிரை பணயம் வைத்து வைத்து சென்னை முழுவதும் சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி கடந்து ஜூன் 14-ம் தேதி ரிப்பன் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழு வெறும் 28 ரூபாய் மட்டும் உயர்த்துவதாக கூறி அவர்களை வீட்டிற்கனுப்பியது. தமிழகத்தில் மாணவர்கள் முதல் தொழிலாளர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கு எந்த முயற்சியும் இல்லை. ஆனால், “எந்த வேலையும் இல்லாமல் சும்மா தான் இருக்கிறோம்” என்று தன் வாயாலேயே ஒத்துக்கொண்டிருக்கிறார் காங்கிரசு உறுப்பினர். சட்ட மன்றத்தை தங்களின் பொழுதுபோக்கு இடமாக தான் இவர்கள் அனுதினமும் அணுகுகிறார்கள் என்பது பத்திரிகைகளில் வந்து சந்தி சிரிக்கின்றது. இந்த கேலிக்கூத்திற்கு இவர்களுக்கு வழங்கப்பட்டவிருக்கும் மாதசம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்.
அது சரி, கூவத்தூரில் அதிமுக அடிமைகள் நடத்திய குத்தாட்டத்திற்கு வழங்கப்பட்ட தொகையை ஒப்பிடும் போது இது கொஞ்சம் குறைவு தான்…!
_____________
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி