Tuesday, April 22, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்டெங்கு : விழுப்புரம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம்

டெங்கு : விழுப்புரம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம்

-

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளையும் மக்கள் அதிகாரம் அமைப்பு ஆய்வு செய்தது. வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள  அடைப்புகள், உடைப்புகள், தண்ணீர் குழாய் இணைப்புகள் உடைந்து சாக்கடை நீருடன் குடிநீரும் கலந்து வருவது, சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர் மற்றும் குப்பைகள், அரசு மருத்துவமனைகள், அலுவகங்கள் வளாகத்தில்  புதர் மண்டிக் கிடப்பது, மருத்துவ கழிவுகள் முறையின்றியும், பாதுகாப்புமின்றியும் கொட்டப்படுவதும் சாதாரணமாக இருக்கிறது.

போதிய மருத்துவர்கள் இல்லாதது. 100, 150 பேருக்கு ஒரு மருத்துவர், 32 படுக்கை வசதி கொண்ட வார்டுகளில் 60, 80 நோயாளிகளை சேர்ப்பது, போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாதது, நோய் கருவிகள், சுத்தப்படுத்துவதற்க்கான பொருட்கள், உபகரணங்கள் பற்றாக்குறை என தமிழக அரசும், மாவட்ட, நகராட்சி நிர்வாகமும் செயலற்று, மக்களை பாதுக்காக்க துப்பில்லாமல் தகுதிழந்து நிற்பது தெரிய வந்தது.

ஏடிஎஸ் கொசுக்களுக்கு போட்டியாக மக்களை காவு வாங்க இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், ஊடகங்கள், டெங்கு சம்மந்தப் பட்ட மருந்துக்கு 16 கோடி நிதி, சிறப்பு மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ ஊர்திகள், அரசு சுனாமி வேகத்தில் வேலை செய்து வருகிறது என்ற வெற்றுப் பீற்றல்கள், மக்கள் தான் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று பாதிக்கப் பட்ட மக்களையே குற்றவாளியாக்குவது என்று தினம் தினம் ஒரு பொய்யை மக்கள் மத்தியில் பேசி வருகிறார்கள்.

இதை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக 12.10.2017 அன்று மக்கள் அதிகாரம்  தோழர்கள்  விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் தலைமையில் புகைப்பட ஆதாரங்களோடு இந்த அரசையும், நகராட்சியையும் கண்டித்து முழக்கமிட்டவாறு நகராட்சி ஆணையரை நோக்கி சென்று முற்றுகையிட்டனர்.

முழக்கத்தை கேட்டவுடன் அருகில் இருந்த மக்கள் குவிய தொடங்கினர். நகராட்சி  ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். பின் நகராட்சி ஆணையர் தோழர்களை உள்ளே அழைத்தார். பின் தோழர்கள் ஆய்வின் விவரங்களையும், புகைப்படங்களையும் ஆணையரிடம் காண்பித்து கேள்விகளை எழுப்பினர்.

தண்ணீர் தேங்கினால் மக்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் என்றால் இதோ, உங்கள் அலுவலகத்தை பாருங்கள், மாவட்ட ஆட்சி அலுவலகத்தை பாருங்கள், வட்டாச்சியர் அலுவலகத்தை பாருங்கள். நீங்கள் மக்களுக்கு அறிவுரை கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கு? என்று கேட்டதற்கு  ஆணையர்  “எங்களால் முடிந்த வரை நாங்கள் செய்து வருகிறோம். ஆனால் அரசு மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எங்கள் அதிகாரத்தில் இல்லை, அதை அவர்கள் தான் செய்ய வேண்டும்” என்றார்.

இப்படி அரசு நிர்வாகமானது தங்களுக்குள்ளாகவே முரண்பட்டுக்கொண்டு தன் பொறுப்புகளை துறப்பதும், மக்களை காக்க எந்த திட்டம் இல்லாமல் தோல்வி அடைவதுமான நிலையை நகராட்சி ஆணையரின் பதில்கள் உணர்த்தின. இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே விழுப்புரம் நகர காவல் நிலையத்திலிருந்து 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4-காவலர்கள், 4- உளவு பிரிவு போலீசு வந்து சேர்ந்தனர். பின் நகராட்சி ஆணையர் உங்கள் குறைகளைக் எழுதி கொடுங்கள் இரண்டு நாட்களில் கட்டாயம் சரிசெய்கிறோம் என்றார். தோழர்களும் அந்தக் கெடுவை ஏற்றுக் கொண்டு அவை நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டம் தொடருமென்று கூறிவிட்டு வந்தனர்.

  • அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவ வசதிகளை எற்படுத்து!
  • டெங்குவை கண்டறியும் மருத்துவ கருவியை வாங்கு!
  • ஆய்வகத்தை உடனே ஏற்படுத்து!
  • தற்காலிக நடமாடும் மருத்துவமனைகளை உடனே உருவாக்கு!
  • சுகாதாரம் பராமரிப்பு, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் செய்!”
  • “மக்கள் அதிகாரத்தை” கையிலெடுப்போம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி