Wednesday, April 16, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்ஓடும் ரயிலில் மோடி பக்தர்களை பணிய வைத்த மக்கள் !

ஓடும் ரயிலில் மோடி பக்தர்களை பணிய வைத்த மக்கள் !

-

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக, புதிய தொழிலாளி  பத்திரிக்கையை இரயிலில் (கடற்கரை – தாம்பரம் ) பிரச்சாரம் செய்து விற்பது வழக்கம்.

பத்திரிகை மட்டும் அல்ல, மக்கள் – தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க கூடிய அடக்கு முறை சட்டங்களை எதிர்த்தும், தனியார் மயம் – தாராள மயம் – உலகமயம் என்ற பெயரில் நாட்டையே சூறையாடும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கெதிராகவும் இரயில்களில் பிரச்சாரம் செய்கிறோம்.

மக்களும் இக்கருத்துக்களை ஆதரிக்கின்றனர். எமது பத்திரிக்கைகளை வாங்கி விழிப்படைந்து வருகின்றனர். நடப்பு உண்மைகளை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் துணிச்சலுடன் அம்பலப்படுத்தினால், மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்பதற்கு சான்றுதான் 4.11.17 அன்று இரயில் பிரச்சாரத்தில் நடந்த நிகழ்வு.

அன்று துரதிர்ஷ்ட வசமாக தோழர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாமல் போய் விட்டது. இருந்திருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மக்களிடம் வாங்கிய திட்டுக்களை படமெடுத்திருக்கலாம்.

சம்பவம் – 1

பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா மற்றும் மாவட்ட பொருளாளர் தோழர் ஆனந்தன் மா.வ.செயற்குழு உறுப்பினர் தோழர் எழில் ஆகியோர் மேற்படி புதிய தொழிலாளி (நவம்பர் -15 டிசம்பர் – 14 ) இதழை காட்டி மோடியின் புதிய இந்தியா யாருக்காக ? என பிரச்சாரம் செய்தனர். பேசியதின் விவரத்தை சுருக்கமாக பதிவு செய்கிறோம்.

  1. வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு தலைக்கு 15 லட்சம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் போடுவேன் !
  2. கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்கத்தான் பணமதிப்பழிப்பு !
  3.  ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் விலை வாசி குறைந்து விடும் என்றது !
  4. வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்பு !
  5. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா… மூலம் தொழில் பெருகும் என்றது !
  6. தமிழகத்தின் வாழ்வாதார உரிமையான காவிரியில் இழைத்த துரோகம் !

இவற்றில் எதை எடுத்துக் கொண்டாலும் நாட்டிற்கும் மக்களுக்கும் மோடி செய்தது துரோகம்தான். பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது மக்களுக்கு பணம் இல்லை. ஆனால் சேகர் ரெட்டி வீட்டில் எப்படி? ரூ 300 கோடிமதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு  கட்டு கட்டாக இருந்தது…?

இந்த நாட்டின் கோடான கோடி உழைக்கும் மக்கள் வாழ முடியாது அம்பானி, அதானி, மல்லைய்யா, சேகர் ரெட்டி போன்ற திருட்டு கும்பலுக்குதான் மோடியின் புதிய இந்தியா; இதை நாம் அனுமதிக்க போகுறோமா….? என தோழர் சிவா பேசினார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே 25 – 30 வயது மிக்க ஒருவர்  தனது கைப்பேசி மூலம் போட்டோ எடுத்தார். அவரை பார்த்து தோழர் ஆனந்தன் எதற்காக போட்டோ எடுக்கின்றீர்கள்…? என கேட்ட போது, மத்திய அரசுக்கு சொந்தமான இரயிலில் ஏறி, அரசை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது என்றார்.

இதற்க்குள் பேசி முடித்த தோழர் சிவா அதை நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… மக்கள் சொல்லட்டும் என சொல்லிவிட்டு மக்களிடம் பத்திரிக்கைக்கு ஆதரவு கேட்ட போது பலரும் வாங்கினார்கள்.

60 – 65 வயதுள்ள ஒரு பார்ப்பனர் ரூ 10 கொடுத்து முதலில் ஒரு பத்திரிக்கையை வாங்கினார். வாங்கிக் கொண்டு எப்படி மோடியை விமர்சிக்கலாம் என கத்தியபடியே இதழை நான்கு துண்டுகளாக கிழித்தெறிந்தார்…

இதனை பார்த்த அங்கிருந்த ஒரு பெரியவர் ஓடி வந்து எப்படி பத்திரிக்கையை கிழிக்கலாம்…? நீ எல்லாம் மனுஷனா… நாயே! என அந்த பார்ப்பனரைக் கண்டித்தார்.

உடனேஅந்த பார்ப்பனருடன் முன்னர் கண்ட இளம் வயது ஆர்.எஸ்.எஸ் அபிமானியும் கூட்டு சேர்ந்து கொண்டு இரயிலில் பேசக் கூடாது என்றனர்.

அப்போது 30 -35 வயதுமிக்க இளைஞர் ஒருவர் இரயிலில் பேசக் கூடாதுன்னு சொல்லறதுக்கு நீ யாரு…? அவங்க பேசுவாங்க என பதிலடி கொடுத்ததுடன், வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு தலைக்கு 15 லட்சம் போடுவேன் மோடி சொன்னாரே அதைப் பற்றி என்றைக்காவது பேசியிருக்கின்றார..? எனக் கேட்ட போது …

மோடி அப்படி சொல்லவேயில்லை என்றார் இளம் வயது சங்கி.

அப்போது ரயிலில் கூடியிருந்த மக்கள் அவர்கள் இருவரையும் எச்சரிக்கும் வகையில் ஒழுங்கா இறங்கி போய்டு என்றனர்.

இதற்கு இடையில் பத்திரிக்கையை கிழித்துப் போட்ட முதிய பார்ப்பனர் கத்திக் கொண்டிருந்தார்.அவரிடம் நீங்க பேசறத்துக்கு யாராவது உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களா… என அவரை எதிர்த்து பேசிய பெரியவர் கேட்ட போது அதற்கு பதில் சொல்லாமல் அரசிடம் புகார் கொடுப்பேன் நடவடிக்கை எடுக்க வைக்றேன் பார் ! என்றார்.

இதற்கு அருகில் இருந்த மற்றொருவர் தேவையில்லாமல் பிரச்சனை பன்னிகிட்டு இருக்காதிங்க… அவங்க உங்க வீட்டிற்குள் வந்து பேசலை இரயிலில் பேசக் கூடாதுன்னு சொல்லறதுக்கு நீங்க யாரு? என பதிலடி கொடுத்தார்.

அப்போது தோழர் சிவா இவர்கள் RSS கும்பல் இப்படித்தான் பேசுவார்கள், என்ற போது அந்த சங்கி ஆமாம் நாங்க இந்து – இந்தியன்! என்றவரிடம் சுற்றியிருந்தவர்கள் நாங்க என்ன பாகிஸ்தானா… எனக் கேள்வியெழுப்பி பதிலடி கொடுத்தனர் மக்கள்.

ஒரு கட்டத்தில் பெட்டியில் இருந்த பெரும்பாலோனர் எதிர்ப்பு தெரிவித்து பேசுவது உரிமை அதை யாரும் தடுக்க முடியாது என எச்சரித்த பிறகே அமைதியானர்கள் அந்த இரு பாஜக அபிமானிகள். உள்ளுக்குள்ளே கலியுகம் முத்திடுத்து என்று அவர் புலம்பியிருக்கலாம். அவர்கள் அமைதியானாலும் மக்கள் மோடி ஆட்சி குறித்து கடும் வெறுப்போடு பேசிக் கொண்டிருந்தனர்.

சம்பவம் – 2

இதற்கு பிறகு மற்றொரு பெட்டியில் மேற் குறிப்பிட்டபடி பேசி முடித்த பின் பத்திரிக்கையை காட்டி வாங்கி ஆதரவு தருமாறு கோரிய போது, இங்கேயும் ஒரு பாஜக அபிமானி 5 ரூபாய் பத்திரிக்கையிலே என்ன வேண்டுமானாலும் எழுதி மக்களிடம் பரப்புறிங்க… என்றும் மோடி இந்தளவிற்கு வர எவ்வளுவு கஷ்ட்டப் பட்டிருப்பார் என்றெல்லாம் பேசியவரிடம்… நாங்க சொன்ன கருத்துப் பற்றி சொல்லுங்க…. என்ற போது 5  ரூபா பத்திரிக்கையை பிரச்சாரம் பன்றீங்க நாளைக்கு கத்தியை காட்டி வாங்கனும் மிரட்டுவிங்க… என்றார்.

இதற்கு தோழர் சிவா பெட்டியில் இருந்த மக்களை பார்த்து “எமது அமைப்பு 25 ஆண்டுகளுக்கு மேலாக சமூக மற்றத்தை லட்சியமாக கொண்டு, அதாவது உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும், அதற்கான கருத்தை பத்திரிக்கையின் மூலமும், அரசியல் இயக்கங்கள் மூலமாகவும். மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றோம். இதுதான் எங்களின் நோக்கம்” ஆனால் இந்த நபர்  கத்தியை காட்டி மிரட்டுவதாக எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார், என்கிறார்.

அதற்கு அந்த பாஜக அபிமானி… “திமிராக இரயிலிலே வந்து இப்படியெல்லாம் பேசவே கூடாது .. எங்க அனுமதி வாங்கியிருக்கிறீங்க…” என சொல்லிக் கொண்டு இரயிலை விட்டு இறங்க முற்பட்ட போது அமர்ந்திருந்த பயணியொருவர் அவங்க என்ன சொல்றாங்க… நீ என்ன பேசிட்டு இருக்க… என சொல்லிக்கொண்டு அடிக்கவே சென்று விட்டார். தோழர்களும் பயணிகளும் தடுத்து அமைதிப்படுத்தினார்கள். அதற்குள் அந்த மோடி பக்தர் இரயிலை விட்டு இறங்கி விட்டார்.

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளிலும் பாஜக ஆதரவு கும்பல் வெறி கொண்டு பாய்வதை பார்க்க முடிகிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கேள்வியை திசை திருப்புவதும், சம்பந்தம் இல்லாமல் பேசி மடை மாற்றுவது என்ற பார்ப்பன சதித்தனம் மக்களிடம் எடுபடவில்லை. அறியாமையிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் மக்கள் விழிப்படைவதை முதலாளித்துவம் மட்டும் அல்ல பார்ப்பன இந்துமதவெறி அமைப்புகளும் விரும்புவதில்லை. அதனால்தான் மோடியின் ‘வளர்ச்சி’ புராணத்தையும் அதனின் நாயகனான மோடியை கேள்விக்குள்ளாக்கினால் ஆத்திரமடைகிறார்கள்.

பு.ஜ.தொ.மு -வோ மக்களின் துன்பத்திற்கான காரணத்தையும் எதிரிகளையும் மக்களுக்கு அடையாளம் காட்டுகின்றோம்.

அதனால்தான் முகம் தெரியாத தோழர்களையும் பு.ஜ.தொ.மு – வின் கருத்தையும் மக்கள் ஆதரிக்கிறார்கள். மத்தியில் நமது ஆட்சி, அதுவும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்கிறோம், நமது கட்டுப்பாட்டில் உள்ள இரயில்வே துறைக்கு சொந்தமான இரயிலில் ஏறி நம்மையே எதிர்ப்பதா..? என ஆர்.எஸ்.எஸ் கும்பல் சிந்திக்கின்றது.

ஆனால் அதிகாரம்  உங்களிடம் இருந்தாலும் மக்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதால், உழைக்கும் மக்களின் குரலை உங்களால் ஒடுக்க முடியாது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்  மாவட்டம் – 88075 32859.