சென்னை ஐ.ஐ.டி.யில் நீர்வழி போக்குவரத்து, கடல் மற்றும் துறைமுகங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடலான மஹாகணபதி பாடல் பாடப்பட்டது.
26.02.2018 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரியும், மற்றொரு அமைச்சரான பொன். இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.
தமிழக மக்களுக்கு விரோதமான ‘சாகர் மாலா’ திட்டத்தின் ஓர் அங்கமாக உருவாக்கப்படவுள்ள இந்த தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல்நாட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, கணபதி பாடல் சமஸ்கிருத மொழியில் பாடப்பட்டது.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்னர், ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பாஸ்கர் இராமமூர்த்தி விளக்கமளித்தார். அங்கு பாடிய மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடலைத்தான் பாடினார்கள். ஐ.ஐ.டியில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். நிர்வாகம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடலைப் பாடுவதில் தலையிடவில்லை என்று கூறியுள்ளார். இதே மாதிரி அல்லா பாடலையும், ஏசுவுக்கு தோத்திரம் பாடலையும் பாட வேறு மாணவர்கள் விரும்பியிருந்தால் என்ன நடக்கும்?
நடப்பது என்ன, மாணவர்களின் கலை விழாவா? இல்லை மத்திய அரசன் நிகழ்வா? மதச்சார்பற்ற அரசு என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவேயில்லையா?
இது குறித்து பேசிய திடீர்த் ‘திராவிடன்’ பொன். இராதாகிருஷ்ணன், தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடுவார்கள் என்று நினைத்துத்தான் தான் எழுந்து நின்றதாகக் கூறியுள்ளார். அறிவிப்பாளர் கடவுள் வாழ்த்து எனச் சொல்வதற்கும், தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொல்வதற்கும் வித்தியாசம் தெரியாதவரெல்லாம் தன்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்வது உண்மையிலேயே கொல்வதே!

பார்ப்பனக் கொழுப்பெடுத்த சுப்பிரமணியசாமியோ, மத்திய அரசால் நிறுவப்பட்ட ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை, என்று திமிராகப் பேட்டியளித்துள்ளார். ஆண்டாளைத் தனது தாயாராக வரித்துக் கொண்ட எச்.ராஜாவோ பெரும்பான்மை இந்துக்கள் உள்ள இந்த நாட்டில் ஐஐடியில் கடவுள் வாழ்த்து சமஸ்கிருதத்தில் பாடியதில் தவறு இல்லை என கொக்கரிக்கிறார்.
செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு ‘எம்பாமிங்’ செய்யும் வேலையை பாஜக கும்பல் செய்து வருகிறது. தனது முயற்சிகளைச் செயல்படுத்தும் கருவியாக, ஒரு சோதனைச் சாலையாக சென்னை ஐ.ஐ.டி-யை பாஜக – பார்ப்பனக் கும்பல் கையில் எடுத்திருக்கிறது.
அதனால்தான் ஐ.ஐ.டி என்னும் அக்கிரகாரத்திற்குள் உருவான அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பை பொறுத்துக் கொள்ள முடியாமல், எப்படியாவது முடித்துவிட வேண்டும் எனத் துடித்தது. ஆனால் சுயமரியாதைத் தமிழகம் அந்த முயற்சியை முறியடித்தது. அதன் பின்னர், மாட்டுக்கறி விவகாரத்தில் தமிழகத்தில் எப்பகுதியிலும் தனது வாலை நீட்ட முடியாத பாஜக கிரிமினல் கும்பல், மாட்டுக்கறி உணவுத்திருவிழா நடத்திய அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் சூரஜின் மீது தாக்குதலைத் தொடுத்தது. அதற்கும் தக்க வகையில் தமிழ் மக்களால் பதிலடி கொடுக்கப்பட்டது
அதன் பின்னர் ஐ.ஐ.டி.வளாகத்தில் சமஸ்கிருத இருக்கையை அறிமுகப்படுத்தியது. தற்போது, ஐஐடி-யின் அலுவலக நிகழ்ச்சி ஒன்றில், அதுவும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் மதம் சார்ந்த பாடலைப் பாடியிருப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்த்தாய் வாழ்த்தை முறைப்படி பாடாமல் புறக்கணித்திருக்கிறது பார்ப்பனக் கும்பல்.
அதிகார பலத்தை வைத்து ஐஐடி போன்ற அக்கிரகாரங்களில் இத்தகைய அயோக்கியத்தனங்கள் தொடர்கின்றன. முற்றுப்புள்ளி வைக்கப்போவது எப்போது?