Monday, April 21, 2025
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

-

உஷா தம்பதியினர்.
கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்ற காவல் ஆய்வாளர் காமராஜ்

திருச்சி தெருவெறும்பூரில், ஒரு பெண்ணை கொடூரமாகக் கொன்றிருக்கிறது போலீசு. புதன்கிழமை 07-03-2018 அன்று திருச்சி திருவெறும்பூர் பகுதியில் போக்குவரத்து போலீசு ஆய்வாளர் காமராஜ் தனது பரிவாரங்களோடு வாகன சோதனை என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இரவு 7.30 மணியளவில் தஞ்சை மாவட்டம் பாபனாசம், சூலமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராஜா (தர்மராஜ்) உஷா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

ஹெல்மெட் போடாமல் வந்த ராஜா வண்டியை திருவெறும்பூர் அருகேயே நிறுத்தியுள்ளார் காமராஜ். வண்டியை நிறுத்தி நின்று கொண்டிருந்த ராஜா மனைவியுடன் வந்திருந்ததால், மற்றொரு காவலர் அவரைக் கிளம்பச் சொல்லி இருக்கிறார். அதனை ஒட்டி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் ராஜா. பிற வாகனங்களில் வசூலை முடித்துவிட்டு வந்த காமராஜ், ராஜா இல்லாததைக் கண்டு உடனடியாக போலீசு ஜீப்பை எடுத்துக் கொண்டு ராஜாவைப் பிடிக்க கிளம்பினார். தனது மனைவி உஷாவுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜாவை வாகனத்தோடு எட்டி உதைத்துள்ளார். இதில் நிலைகுலைந்து ராஜா, உஷா இருவரும் கீழே விழுந்தனர். இதில் கர்ப்பிணிப் பெண் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ராஜா பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவத்தை விபத்து போல காட்டுவதற்காகவே ஊடகங்களுக்கு போலீசு தெரிவித்த செய்தியில் வேன் ஏறி உஷா இறந்ததாக செய்தி வெளியிட்டது.
நடந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் சுமார் 3000-க்கும் அதிகமானோர் சாலையில் குவிந்தனர்.

வசூல் ஆய்வாளர் காமராஜைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசு மக்களைக் கலைந்து போகுமாறு எச்சரித்துள்ளது. போக மறுத்த மக்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தியிருக்கிறது கிரிமினல் போலீசு. இத்தாக்குதலை ஏவிவிட்ட திருச்சி போலீசு கமிஷனர் அமல்ராஜ், யார் என்று நினைவிருக்கிறதா ?

திருச்சி போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ்

கோவையில் கடந்த 2016-ம் ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ரவுடி சசிக்குமாரின் மரணத்தையொட்டி இந்து முன்னணிக் கும்பலுக்கு கலவரம் நடத்த ஏதுவாக பேரணிக்கு அனுமதி கொடுத்தவர்தான் இந்த அமல்ராஜ். அது  மட்டுமல்லாது கலவரம் நடத்தப்பட்டபோதும், பிரியாணி அண்டாக்கள் திருடப்பட்ட போதும், போலீசை வேடிக்கை பார்க்க வைத்தவர். கலவரப் பிரியரான அமல்ராஜிற்கு மக்களிடம் பேசப் பொறுமை இருக்குமா என்ன? அதன் காரணமாகவே தடியடி நடத்தி மக்களைக் கலைத்திருக்கிறது போலீசு.

இச்சம்பவம் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக பரவிய பின்னர் வேறு வழியின்றி ஆய்வாளர் காமராஜைக் கைது செய்திருக்கிறது போலீசு. இது திருச்சிக்கோ, தமிழகத்துக்கோ முதல் சம்பவம் அல்ல.

சிறிது நாட்களுக்கு முன்னர், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் வாகனச் சோதனையில் இலஞ்சம் வாங்கிக் கொண்டிருந்த போலீசுக் கிரிமினல்களை வீடியோ எடுத்தவரை மிகவும் மோசமாகப் பேசி அவரி தனியாக இழுத்துச் சென்று இரும்புப் பைப் வைத்து அடித்திருக்கிறது போலீசு. இதனால் மனமுடைந்த அந்த டிரைவர், அதே இடத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சிறைக்கு ஒய்யாரமாகப் போகும் கொலைகார காவல் ஆய்வாளர் காமராஜ்

திருச்சி, சென்னை கே.கே. நகர் என பல்வேறு சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இது போன்று போலீசு இலஞ்சம் வாங்கிப் பொறுக்கித் தின்ன ஏற்பாடு செய்து கொடுக்கும் வேலையைதான் கிருபாகரன் போன்ற நீதிபதிகள் செய்து வருகின்றனர். அவரவர் நிலைமையைப் பொறுத்து அல்லாமல் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், ஒரிஜினல் லைசன்ஸ் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற புதுப்புது உத்தரவுகளைத் தலைமயிரை உதிர்ப்பது போல அவ்வப்போது உதிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த உத்தரவுகளை வைத்துக் கொண்டு போலீசு கும்பல் எந்த வண்டியை நிறுத்தினாலும், பணம் பிடுங்கித் தின்னலாம் என்ற நிலையில் நடுரோட்டில் நின்று அராஜகம் செய்கிறது. பணம் கொடுக்காதவனையும், நிற்காமல் செல்பவர்களையும், இரையை நோக்கிப் பாயும் ஓநாய் போல கொலைவெறியோடு அணுகுகிறது கிரிமினல் போலீசு.

கட்டற்ற அதிகாரம் கைகளில் இருக்கும் திமிரில்தான் இந்த போலீசு கும்பல், மக்களின் உயிரை மயிரினும் கீழாக மதிக்கிறது. போலீசின் கட்டற்ற அதிகாரத்தைப் பறித்து மக்கள் கையில் அதிகாரத்தைக் அளிக்கும் போதுதான் ஜனநாயக முறையில் மக்கள் தாங்களாகவே விதிகளைப் பின்பற்றுவார்கள். அங்கிருந்துதான் சமூக ஒழுக்கம் பிறக்க முடியுமேயன்றி போலீசு கையிலிருக்கும் லத்திக் கம்பிலிருந்து ஒரு போதும் பிறக்க முடியாது.

********

திருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை ! எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் !

மக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.

__________

லஞ்சம் – வழிப்பறி – படுகொலை… நேற்று… எடத்தெரு சரஸ்வதி… இன்று தஞ்சை உஷா…

கிரிமினல் மயமாகிவரும் போலீசுக்கு எதிராக தமிழக மக்களே அணிதிரள்வோம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.