பார்ப்பனர்கள் இவ்வுலகின் தேவர்கள் – சைவ சித்தாந்தம்
நால்வருணக் கோட்பாடு நன்மைப் பயப்பதே – சைவ சித்தாந்தம்

நண்பர்களே….

பொ. வேல்சாமி
20 -ஆம் நூற்றாண்டில் கூட தமிழ் அறிஞர்களில் பலரும் கடந்த காலங்களில் “சைவ சித்தாந்தம்தான்” தமிழர்களுடைய “தனிபெரும் தத்துவம்” என்று எழுதியும் பேசியும் வந்துள்ளனர், வருகின்றனர். இத்தகைய கூற்றுக்கள் என்னை பல ஆண்டுகளுக்கு முன்பே சைவ சித்தாந்தத்தைப் பயிலும்படி தூண்டியது. அப்படி பல வருடங்களாக சித்தாந்த நூல்களைப் படித்தேன். அப்பொழுது இவர்களுடைய கூற்றுக்கள் உண்மையானவைகள் அல்ல என்பதையும் அரசியல்அதிகாரம் சார்ந்த முழக்கங்கள் என்பதையும் அந்த நூல்களில் உள்ள பல செய்திகள் எனக்கு புலப்படுத்தின. அத்தகைய செய்திகளை நீங்களும் பார்க்க வேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதை தூண்டுவதற்காக அவற்றுள் ஒரு முக்கிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சமஸ்கிருத நூல்களில் “பேரூரைகள்”(பாஷ்யங்கள்) பல உண்டு. ஆனால் தமிழ் நூல்களில் ஒரே ஒரு பேரூரைதான் காணப்படுகிறது. அதை எழுதியவர் 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த “சிவஞான முனிவர்” என்பவர். இவர் தொல்காப்பியம் தொடங்கி தமிழ் இலக்கண நூல்கள் அனைத்திலும் சங்க இலக்கியங்களிலும் தமிழ் காப்பியங்களிலும் சைவ சித்தாந்த நூல்களிலும் வடமொழி இலக்கணத்திலும் இந்திய தத்துவ நூல்களிலும் தர்க்க நூல்களிலும் பெரும் புலமைப் படைத்தவராக உள்ளார் என்பதை அவர் எழுதியுள்ள நூல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இத்தகைய பெரும் ஆற்றல் நிறைந்த சிவஞான முனிவர் எழுதிய “சிவஞானபோதப் பேரூரை”யில் உள்ள “சிறப்புப்பாயிரத்திற்கான” விளக்க உரை பகுதியில்,

“சூத்திரர் என்னும் பொதுப்பெயரே பற்றிச் சற்சூத்திரரையும் அசற்சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர்; மனிதர் என்னும் பொதுப்பெயரே பற்றி மறையோரையும் அவ்வாறு சூத்திரரோடு வைத்து எண்ணி இகழ்வர் போலும் என்று ஒழிக.” என்று எழுதுகின்றார்.

இதே பகுதியில் இவர் நால்வருணக் கோட்பாட்டில் சூத்திரர்கள் கீழானவர்கள் என்பதையும் ஒத்துக்கொள்கிறார். அதே நேரத்தில் தானும் சூத்திரராக இருப்பதால் சூத்திரர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்.
1.சற்சூத்திரர் 2.அசத்சூத்திரர்

அதாவது சற்சூத்திரர் என்பது தூய்மையான சூத்திரர். அசத்சூத்திரர் என்பது இழிவான சூத்திரர். இப்படி சொல்வதை அந்தக் காலத்திலேயே அறிவுள்ள சிலர் ஒப்புக் கொள்ள மறுத்துள்ளனர். அந்த மறுப்பாளர்களை நோக்கி இவர் கூறும் பதிலில் இவ்வுலகின் தேவர்களான பார்ப்பனர்கள் மனிதர்களாகிய உங்களை போன்றே வடிவத்தில் இருப்பதனால் பூதேவர்களான பார்ப்பனர்களையும் உங்களைப் போன்ற அற்ப மனிதர்கள் என்று கூறுவீர்களோ? என்று நகைத்து எழுதுகின்றார்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்