மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 13
பாவெல் கீழே இறங்கிவந்து தன் தாயருகே நின்றான்.
கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொண்டார்கள். ஆவேசமாகக் கூச்சலிட்டுக்கொண்டார்கள்.

பாவெல் பதில் பேசவில்லை. அவனுக்கு முன்னால் திரண்டு நிற்கும் கரிய முகங்களின் பல ஜோடிக் கண்களும் அவனையே ஆழ்ந்து நோக்கி அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவனது இதயம் அதிர்ச்சியால் படபடத்தது. வறண்ட பூமியின் மீது விழுந்த சிறு தூற்றலைப் போல், தன்னுடைய பேச்சு எந்தவிதப் பலனும் இல்லாமல் எங்கோ காற்றோடு கரைந்து போய்விட்டது போல அவனுக்குத் தோன்றியது.
”இவனை மாதிரி ஆட்களெல்லாம் மனிதர்களே அல்ல; வெறும் மண்ணாங்கட்டிகள் பெயர்ந்து விழுந்த இடத்தை அடைக்கத்தான் உதவுவான்! பாவெல்! உன்னைத் தூதனுப்ப வேண்டும் என்று சொன்னவர்களைக் கவனித்தாயா! உன்னை சோஷலிஸ்ட் என்றும், கலாட்டாக்காரன் என்றும் வதந்திகளைப் பரப்பினார்களே, அவர்களேதான், அதே ஆசாமிகள்தான்!
அவன் களைத்துப்போய்த் தலையைத் தொங்கப் போட்டவாறே வீட்டுக்குத் திரும்பினான். அவனுக்குப் பின்னால், அவனது தாயும் சிஸோவும் வந்துகொண்டிருந்தார்கள், ரீபின் அவனுக்குப் பக்கமாக வந்து, அவனது காதில் ஏதோ குசுகுசுத்தான்.
”நீ நன்றாகத்தான் பேசுகிறாய், ஆனால் உன் பேச்சு இதயத்தைத் தொடவில்லை. ஆமாம், நீ அவர்களது இதயங்களைத் தொடுகிற மாதிரிப் பேச வேண்டும்! இதயத்தின் மத்தியிலேதான் தீப்பொறி விழவேண்டும். நீ மக்களை உன் அறிவைக் கொண்டு வசப்படுத்த முடியாது. காலுக்கேற்ற செருப்பல்ல இது.”
”பெலகேயா, நம்மாதிரிக் கிழடுகள் எல்லாம் சமாதியிலே இடம் தேடிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது” என்று தாயை நோக்கிப் பேச ஆரம்பித்தான் சிஸோவ். “ஒரு புதுத் தினுசான மக்கள் வளரத் தொடங்கிவிட்டார்கள். நீயும் நானும் எப்படி வாழ்ந்தோம்? முட்டும் முழங்காலும் தேய, மண்டையெல்லாம் தரையிலே முட்டி மோத, நமது முதலாளிக்குச் சலாம் போட்டுதானே வாழ்ந்தோம். ஆனால், இந்தக் காலத்திலோ? பிள்ளைகளுக்குப் புத்திதான் பெருத்துப்போயிற்றோ, தவறு தான் அதிகம் பண்ணுகிறார்களோ? எப்படியிருந்தாலும், இவர்கள் நம் மாதிரி இல்லை. இவர்களைப் பாரேன்! மானேஜரோடு, அவரோடு சம அந்தஸ்து உள்ளவர்கள் மாதிரி பேசுகிறார்கள், பார்த்தாயா?…… போகட்டும். போய் வா , பாவெல் மிகாய்லவிச்! நீ ஜனங்களுக்காகக் கச்சை கட்டிக்கொண்டு நிற்பது நல்லதுதான், தம்பி கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும்! ஒருவேளை இவர்கள் விமோசனத்துக்கு உனக்கு ஒரு வழி கிடைத்தாலும், கிடைக்கும்! கடவுள் உனக்கு உதவட்டும்!”
அவன் போய்விட்டான்.
“போ போ , சீக்கிரம் போ. போய்ச் செத்துத் தொலை” என்று முனகினான் ரீபின். ”இவனை மாதிரி ஆட்களெல்லாம் மனிதர்களே அல்ல; வெறும் மண்ணாங்கட்டிகள் பெயர்ந்து விழுந்த இடத்தை அடைக்கத்தான் உதவுவான்! பாவெல்! உன்னைத் தூதனுப்ப வேண்டும் என்று சொன்னவர்களைக் கவனித்தாயா! உன்னை சோஷலிஸ்ட் என்றும், கலாட்டாக்காரன் என்றும் வதந்திகளைப் பரப்பினார்களே, அவர்களேதான், அதே ஆசாமிகள்தான்! ‘பயலுக்கு வேலை போய்விடும்; அதுதான் அவனுக்கு வேண்டும்’ என்று அவர்கள் தமக்குள்ளாக நினைத்திருக்கிறார்கள் தெரிந்ததா?”
“அவர்கள் நினைக்கிறபடி பார்த்தால், அவர்கள் செய்தது சரிதான்’ என்றான் பாவெல்.
”ஆமாம். ஓநாய்கள் ஒன்றையொன்று கடித்துத் தின்பது அவைகளுக்குச் சரிதான்!”
ரீபினுடைய முகம் இருண்டது, அவனது குரலில் அசாதாரணமான உத்வேகம் தொனித்தது.
“மக்கள் வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்கமாட்டார்கள்; பட்டால்தான் தெரியும். உன் வார்த்தைகளை இரத்தத்தில் தோய்த்தெடுக்க வேண்டும். பாவெல்…”
அன்று முழுதும் பாவெல் களைப்போடும், சோர்வோடும் மனச்சஞ்சலத்தோடும் தான் உலவித் திரிந்தான், அவனது பிரகாசமான கண்கள் எதையோ தேடித் திரிவது போலத் தெரிந்தன. தாய் இதைக்கண்டு கொண்டாள்.
“என்ன விஷயம், பாஷா!” என்று ஜாக்கிரதையோடு கேட்டாள். ”தலை வலிக்கிறது” என்றான் பாவெல். ”படுத்துக்கொள். போய் வைத்தியரை அழைத்து வருகிறேன்.”
‘வேண்டாம், வீணாய்ச் சிரமப்படாதே” என்று அவன் அவசரப்பட்டுப் பதில் சொன்னான். பிறகு அவன் தாயிடம் அடி மூச்சுக் குரலில் சொல்ல ஆரம்பித்தான்.
”நான் மிகவும் இளையவன்: மிகவும் பலவீனமானவன். அது தானம்மா தொல்லை அவர்கள் என்னை நம்பவில்லை; என் கொள்கையை ஏற்கவில்லை – அதாவது – என் கொள்கையை அவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அம்மா, என் மனம் நொந்து போய்விட்டது. எனக்கு என்மீதே கசப்பேற்பட்டுவிட்டது.”
அவனது சிந்தனை தேங்கிய முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் அவள், பிறகு அவனைத் தேற்ற முனைந்தாள்:
”கொஞ்சம் பொறுத்திரு” என்று மெதுவாகச் சொன்னாள்; “இன்றைக்கு அவர்கள் தெரிந்து கொள்ளாது போனதை நாளைக்கு நிச்சயம் தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்.”
“அவர்களுக்குத் தெரிந்துதான் ஆகவேண்டும்!” என்றான் பாவெல்.
“நீ சொல்வதுதான் சரி என்பது எனக்குக் கூடத் தெரிகிறது.” பாவெல் தாயருகே நெருங்கிச் சென்றான்.
“அம்மா, நீ ஒரு அற்புதப்பிறவி….” என்று கூறிவிட்டுத் திரும்பி நடந்தான். அந்த மென்மையான வார்த்தைகளால் சூடுபட்டவள் போலத் துணுக்குற்ற அவள், கைகளால் இதயத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, அதனுடன் தன் மகனின் பரிவுணர்ச்சியையும் சுமந்துகொண்டு, அங்கிருந்து வெளியேறினாள்.
அன்றிரவு அவள் படுத்துத் தூங்கிய பிறகு, பாவெல் படுக்கையில் படுத்தவாறே ஏதோ படித்துக்கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில், போலீஸ்காரர்கள் வந்து சேர்ந்தார்கள். வீட்டிலுள்ள சகல சாமான்களையும் தாறுமாறாக இழுத்தெறிந்து சோதனை போட்டார்கள். கூரை மீதும், வெளி முற்றத்திலும் தேடினார்கள். அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரி முன்னொரு முறை வந்தது போலவே, இப்போதும் அவர்களது இருதயங்களைத் தொட்டுத் துன்புறுத்தும் குத்தலான கிண்டலும், குறும்புத்தனமான சிரிப்பும் வெடிக்க, வந்து சேர்ந்தான். தன் மகனது முகத்தின் மீது பதிந்த பார்வையை அகற்றாது. அமைதியாக ஒரு மூலையிலே முடங்கி உட்கார்ந்துவிட்டாள் தாய். அவனோ தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமலிருக்க முயன்றான். என்றாலும் அந்த அதிகாரி சிரிக்கும் போதெல்லாம் அவனது கை விரல்கள் அவனையும் அறியாமல் முறுக்கிப் பிசைந்து கொண்டன; அவன் எதிர்த்துப் பேசாமல் வாயை அடக்கிக்கொண்டிருப்பதற்கு எவ்வளவு சிரமப்படுகிறான் என்பதையும், அந்தப் போலீஸ்காரனின் கிண்டல்களைக் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பது அவனுக்கு எவ்வளவு வேதனை தருகிறது என்பதையும் தாய் உணர்ந்துகொண்டாள். முதல் தடவை பயந்தது போல் அவள் இப்போது அவ்வளவாக பயப்படவில்லை. இந்தக் கொடிய அர்த்த ராத்திரி விருந்தாளிகள் மீதுள்ள பகையுணர்ச்சிதான் அவள் உள்ளத்தில் வளர்ந்திருந்தது;
அவளது பயவுணர்ச்சியை அந்தப் பகையுணர்ச்சி விழுங்கிவிட்டது.
”அவர்கள் என்னைக் கொண்டுபோய் விடுவார்கள்” என்று அவளிடம் லேசாக முணுமுணுக்க முயன்றான் பாவெல்.
“எனக்குத் தெரியும்” என்று மெதுவாக, தலையைக் குனிந்து கொண்டே சொன்னாள் தாய்.
அன்று காலையில் அவன் தொழிலாளர்களிடம் பேசிய பேச்சுக்காக அவனை அவர்கள் சிறையில் போடத்தான் செய்வார்கள் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆனால், எல்லாரும் அவன் கூறியதை ஒப்புக்கொண்டார்கள்: எனவே எல்லாரும் அவனது விடுதலைக்காக விழித்தெழுந்து போராட வேண்டும். அப்படிச் செய்தால் அவனை அவர்கள் அதிகநாள் சிறையில் வைத்திருக்க முடியாது…
தன் கைகளால் அவனை அணைத்து வாய்விட்டு அழவேண்டும் என்று அவள் விரும்பினாள். ஆனால் அந்த அதிகாரியோ அவளுக்கு அருகில் வந்து நின்று ஓரக்கண்ணால் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். அவனுடைய மீசை துடித்தது. உதடுகள் நடுங்கின. அவன் நிற்கிற நிலையைப் பார்த்தால், கண்ணீரும் கம்பலையுமாகத் தான் கதறப்போவதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றே அவளுக்குத் தோன்றியது. அவள் தனது முழுப்பலத்தையும் சேகரித்துக்கொண்டு தன் மகனின் கரத்தைப் பற்றிப் பிடித்தாள்; மெதுவாகவும் அமைதியாகவும் திணறுகின்ற மூச்சோடும் பேசினாள்.
”போய்வா, பாஷா. உனக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டாயா?”
”ஆமாம், நீ தனியாயிருந்து கவலைப்படாதே!” ”கடவுள் உனக்கு அருள் செய்யட்டும்……..”
அந்த மானேஜர் கண்ணைக் காட்ட வேண்டியது, போலீஸ் தலையை ஆட்ட வேண்டியது. அப்புறம் ஒரு மனிதனைக் கொண்டு போய் விட வேண்டியது அவர்கள் இருவரும் அழகாகத்தான் ஒத்துழைக்கிறார்கள். ஒருவன் கொம்பைப் பிடித்துக்கொள்கிறான். மற்றவன் பால் கறக்கிறான். இவ்வாறு மக்களைக் கறந்து தீர்க்கிறார்கள்……..”
அவர்கள் அவனை அழைத்துச் சென்ற பின்னர், அவள் அப்படியே பெஞ்சின் மீது சரிந்து சாய்ந்து உட்கார்ந்தாள். அமைதியாகக் கண்ணீர் பெருக்கினாள். அவளது கணவன் வழக்கமாகச் சாய்ந்திருக்கும் நிலையிலேயே, அவளும் அந்தச் சுவரோடு சாய்ந்து, சோகம் நிறைந்த உள்ளத்தோடு, நிராதரவான தன் நிலையைப் பற்றிய பிரக்ஞை உணர்ச்சியின் வேதனையோடு அப்படியே இருந்தாள். தலையைப் பின்னால் பட்டென்று மோதிச் சாய்த்தவாறே அவள் அமுங்கிய, ஓய்வற்ற குரலில் அழுதாள். அந்த அழுகுரலில் அவளது புண்பட்ட இதயத்தின் வேதனை முழுவதும் பொங்கி வழிந்தது. ஆனால் அவளது மனக்கண் முன்னே அந்த அசைவற்ற மஞ்சள் மூச்சு அதிகாரியின் மெல்லிய மீசையும், களி துள்ளும் குறுகிய பார்வை கொண்ட கண்களுமே நிழலாடிக் கொண்டிருந்தன. நியாயத்துக்காகப் போராடும் ஒரே காரணத்துக்காகத் தாய்மார்களிடமிருந்து பிள்ளைகளைப் பறித்துச் செல்லும் அந்த மனிதர்களின் மீது ஏற்படும் கசப்புணர்ச்சியும் பகையுணர்ச்சியும் கார்மேகம்போல் கவிந்து படர்ந்தது.
நல்ல குளிர்; வெளியிலே பெய்யும் மழை ஜன்னல்களின் மீது படபடத்து விழுந்தது. நெடிய கைகளும் கண்களே இல்லாத சிவந்த முகங்களும் கொண்ட சாம்பல் நிற உருவங்கள் அந்த அர்த்த ஜாமத்தில் தன் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பாராக் கொடுப்பது போலவும், அவர்களது பூட்ஸ் லாடங்கள் மங்கி ஒலித்துக்கொண்டிருப்பது போலவும் அவளுக்குத் தோன்றியது.
”அவர்கள் என்னையும் கொண்டு போயிருந்தால்?” என்று நினைத்தாள் அவள்.
ஆலைச்சங்கு அலறி, தொழிலாளர்களை வேலைக்கு அழைத்தது. அந்த அதிகாலை வேளையில் அந்தச் சங்கு தாழ்ந்தும் கரகரத்தும் நிதானமற்று ஒலித்தது. கதவைத் திறந்து கொண்டு ரீபின் உள்ளே வந்தான். தாடியிலிருந்து வழிந்தொழுகும் மழை நீரைத் துடைத்துவிட்டுக்கொண்டு அவன் முன் வந்து நின்று கேட்டான்.
“அவர்கள் அவனைக் கொண்டுபோய் விட்டார்களா?”
“ஆமாம். அவர்கள் நாசமாய்ப் போக” என்று பெருமூச்சுடன் பதில் சொன்னாள் அவள்.
”எதிர்பார்த்த விஷயம்தான்” என்று கூறி லேசாகச் சிரித்தான் ”அவர்கள் என் வீட்டையும் தான் சோதனை போட்டார்கள். ஒன்றும் பாக்கியில்லை. எல்லாவற்றையும் உருட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். என்னை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். ஆனால், எனக்கு அவை ஒன்றும் உறைக்கவே இல்லை. அவர்கள் பாவெலைக் கொண்டுபோய் விட்டார்கள். இல்லையா? அந்த மானேஜர் கண்ணைக் காட்ட வேண்டியது, போலீஸ் தலையை ஆட்ட வேண்டியது. அப்புறம் ஒரு மனிதனைக் கொண்டு போய் விட வேண்டியது அவர்கள் இருவரும் அழகாகத்தான் ஒத்துழைக்கிறார்கள். ஒருவன் கொம்பைப் பிடித்துக்கொள்கிறான். மற்றவன் பால் கறக்கிறான். இவ்வாறு மக்களைக் கறந்து தீர்க்கிறார்கள்……..”
”பாவெலுக்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும்” என்று எழுந்து நின்று சத்தமிட்டாள் தாய், “எல்லாருக்காகவும் தானே அவன் வேலை செய்தான்.”
“யார் செய்கிறது?”
”ஒவ்வொருவரும்!”
“ஹூம். நீ அப்படியா நினைக்கிறாய்? உஹூம் அது மட்டும் நடக்காத காரியம்!”
சிரித்துக்கொண்டே அவன் வெளியே நழுவிவிட்டான். அவனது நம்பிக்கையற்ற வார்த்தைகள் அவளது பரிதாப நிலையை மேலும் மோசமாக்கியது.
”அவனை அவர்கள் அடித்தால், சித்ரவதை செய்தால்…..”
தன் மகனது உடம்பெல்லாம் அடிபட்டுப் பிரிந்து போய் இரத்தம் ஒழுகிக்கொண்டிருக்கும் காட்சியைக் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அதை நினைத்தவுடனேயே அவளது உள்ளத்தில் ஒரு நடுக்கமும் பயமும் குளிர்ந்தோடிக் குத்தியது. அவளது கண்கள் குத்தலெடுத்தன.
அன்று முழுதும் அவள் அடுப்பு மூட்டவில்லை; சாப்பிடவுமில்லை. தேநீர்கூட அருந்தவில்லை. இருட்டி வெகுநேரம் கழிந்த பிறகுதான் ஒரு துண்டு ரொட்டியைக் கடித்துத் தின்றாள். அன்றிரவு அவள் படுக்கச் சென்றபோது அவளது வாழ்க்கையில் இதுவரை இந்தமாதிரியான சூனிய உணர்ச்சியும் தனிமை உணர்ச்சியும் என்றுமே இருந்ததில்லை என்பதை அவள் உணர்ந்தாள். கடந்த சில வருஷங்களாகவே அவள் ஏதோ ஒரு முக்கியமான, நன்மை தரும் விஷயத்தையே எப்போதும் எதிர்பார்த்து எதிர்பார்த்துப் பழகிப்போய்விட்டாள். அவளைச் சுற்றிலும் உற்சாகமும் உவகையும் நிறைந்த இளைஞர்களின் கலகலப்பு நிறைந்திருந்தது. அந்த நன்மைக்கெல்லாம், எனினும் ஆபத்தான வாழ்க்கைக் கெல்லாம் தூண்டுகோலாயிருந்த தன் மகனது முகத்தையே அவளுக்குப் பார்த்துப் பார்த்துப் பழக்கமாகியிருந்தது. இன்றோ, அவன் போய்விட்டான் அவன் மட்டுமா? எல்லாமே போய்விட்டன!
(தொடரும்)
அடிக் குறிப்புகள்:
(1)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முந்தைய பகுதிகள்: