தமிழக அரசே ! உடனடியாக நிவாரணம் வழங்கு ! 100 நாள் வேலையை முறைப்படுத்தி கொடு! விளார் கிராம மக்கள் குமுறல் !
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீண்டு வராமல் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தஞ்சை மாநகரத்தையொட்டி உள்ள விளார் ஊராட்சி.
அரசு மற்ற கிராமங்களுக்கு பெயரளவுக்கு செய்த நிவாரணத்தைக் கூட இந்த ஊராட்சியில் மேற்கொள்ளவில்லை. அத்துடன் 100 நாள் வேலையிலும் மக்களை ஏமாற்றி அதிகாரிகள் பகல் கொள்ளையடித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் ஒட்டுமொத்த பெண்களும் மக்கள் அதிகார அமைப்பு தோழர்களிடம் ஒன்று திரண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆகவே முதல் கட்டமாக மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்கலாம், பிறகு அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்கலாம் என முடிவுசெய்து 75-க்கும் மேற்பட்ட பெண்கள் தஞ்சை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பச்சையப்பன் தலைமையில் 31.12.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்களை மனுவாக கொடுத்தனர்.

ஆட்சியரும் கோரிக்களை உடனடியாக தீர்த்துக் கொடுப்பதாக உறுதி கொடுத்தார். அந்த உ றுதி நிறைவேறாத பட்சத்தில் மக்கள் தங்களது அடுத்த கட்ட போரட்டத்தை எப்படி நடத்தலாம் என்று தயாராகி வருகின்றனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.
*****
தமிழக அரசே! நுண்கடனை கட்ட மக்களை மிரட்டும் வங்கிகள் மீது நடவடிக்கை எடு! முழு கடனையும் அரசே பொறுப்பேற்றுக்கொள்! திருவாரூர் மாவட்ட மக்கள் கொந்தளிப்பு!
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வாழ்வாதாரத்தை இழந்து இன்னும் சகஜநிலைமைக்கு திரும்ப இயலாமல் உள்ளது டெல்டா மாவட்டங்கள். அரசின் நிவாரணமோ கண்துடைப்பு நாடகமாக நடந்தது. இந்த நிலையில் நுண்கடனை கட்டியே ஆக வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் மக்களை மிரட்டி வருகின்றன.

நிவாரணத் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, 100 நாள் ஊதியம் ஆகிவற்றை மக்களிடம் அனுமதி கேட்காமல் சட்ட விரோதமாக பிடித்துக் கொள்கின்றன. கந்துவட்டியை மிஞ்சும் இந்த கொடூரம் சில பெண்களை தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளியுள்ளது. இதை எதிர்த்தும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் “நுண்கடன் வசூலை 6 மாதம் தள்ளி வைக்க” வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். அதையும் மீறி இந்த நிறுவனங்கள் மக்களை மிரட்டி வந்தன.
இதை அறிந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் “நுண்கடனை யாரும் கட்ட வேண்டாம்! மீறி கட்டாயப்படுத்தினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” என்று சுவரொட்டி அடித்து பரவலாக ஒட்டினர். இந்த சுவரொட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. மாவட்டம் முழுக்க இருந்து தொலைபேசி அழைப்புகள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் பல பெண்கள் தங்களது நிலையை சொல்லி கதறி அழுவதையே காணமுடிந்தது.

இவர்களை அழைத்து முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க திட்டமிடப்பட்டது. நேற்று (31.12.2018) இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் திருவாரூர் மக்கள் அதிகாரம் தோழர்கள் தலைமையில் திரண்டனர். ஒவ்வொருவரும் தனிதனியாக மனுவாக எழுதி தங்களது கோபங்களால் மாவட்ட ஆட்சியரை கேள்வி கணைகளாய் துளைத்தெடுத்தனர்.
உடனடியாக வங்கிகளை அழைத்து கண்டிப்பதாகவும், இனி இவ்வாறு நடக்காது என உறுதியளித்தார். ஆனால் மக்கள் தங்கள் அனுபவத்தின் மூலமாகவே இதெல்லாம் நடக்காது என்பதை உணர்ந்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைப்பு விட்டுள்ளனர், நுண்கடனை தமிழக அரசே முழுவதுமாக ஏற்கவைக்கும் வரை விடமாட்டோம் என எச்சரித்துச் சென்றனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர். தொடர்புக்கு : 96263 52829
