மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 51
”வருகிறேன்” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள்.
மீண்டும் ஒரு முறை அவளது மகன் தன் கரத்தை நீட்டினான்; அவனது முகத்தில் அன்பின் சாயை படர்ந்தோடியது.
”போய்வா. அம்மா.”
அவள் அவனைப் போகவிடாமல் அப்படியே நின்றாள். ”கவலைப்படாதே. கோபமும் படாதே” என்றான் அவன்.
இந்த வார்த்தைகளும் அவனது நெற்றியிலே அழுந்தித் தோன்றிய உறுதியான ரேகையுமே அவளுக்குப் பதிலளித்தன.
“அட, கண்ணு” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டே சொன்னாள். “நீ என்ன சொல்கிறாய்.
அவனை மீண்டும் ஒரு முறை நிமிர்ந்து பார்க்காமலேயே அவள் வெளியே வந்தாள். தனது கண்களில் பொங்கும் கண்ணீரையும் நடுங்கும் உதடுகளையும் தன் மகன் பார்த்துவிடக்கூடாதே என்ற தவிப்பில் விருட்டென் வெளிவந்துவிட்டாள். வீட்டுக்கு வந்து சேருகிறவரையிலும், அந்தக் காகித உருண்டையை வாங்கிய கரம் கனத்துத் தொங்குவது போலவும், தோளில் ஓங்கி அறை வாங்கியது போலவும், அதனால் அது வலியெடுத்து வேதனைப்படுவது போலவும் அவளுக்குத் தோன்றியது. விட்டுக்கு வந்த மாத்திரத்தில் அவள் அந்தக் காகிதத்தை நிகலாய் இவானவிச்சிடம் கொடுத்தாள். கொடுத்துவிட்டு. அவன் அந்தக் காகிதத்தை விரித்துப் பிரித்துப் படிக்கத் தொடங்கும் வரையிலும். இதயத்திலே நம்பிக்கை படபடத்துத் துடித்துக்கொண்டிருக்க, அப்படியே காத்து நின்றாள். ஆனால் நிகலாயோ அவற்றைக் கவனிக்கவில்லை.
”ஆமாம். அவன் இதைத்தான் எழுதியிருக்கிறான்’ என்று கூறிவிட்டு அதை வாசிக்கத் தொடங்கினான். ‘தோழர்களே. நாங்கள் தப்பி வருவதற்கு முயலமாட்டோம். எங்களால் முடியாது. எங்களில் எவராலும் முடியாது. அப்படிச் செய்தால் நாங்கள் எங்கள் சுயமரியாதையையே இழந்து விடுவோம். ஆனால் சமீபத்தில் கைதான அந்த விவசாயிக்கு நீங்கள் உதவ முயலுங்கள். அவனுக்கு உங்கள் கவனிப்புத் தேவை. நீங்கள் உங்களால் முடிந்ததையெல்லாம் அவனுக்காகச் செய்யுங்கள்; அவன் அதற்குத் தகுதியானவன். அவனுக்கு இங்கு பொழுது போவதே பெரும்பாடாய் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அவன் அதிகாரிகளோடு சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறான். ஏற்கெனவே அவன் இருள் கொட்டடியில் இருபத்து நாலுமணி நேரமாய்க் கிடந்து வருகிறான். அவர்கள் அவனை சித்திரவதை செய்தே கொன்றுவிடுவார்கள். நாங்கள் அனைவரும் அவன் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். அம்மாவுக்கு ஆறுதல் சொல்லுங்கள். அவளுக்கு எல்லாவற்றையும் சொல்லுங்கள், அவள் புரிந்துகொள்வாள்!”
தாய் தன் தலையை உயர்த்தி அமைதியோடு நடுநடுங்கும் குரலில் சொன்னாள்:
”சொல்வதற்கு என்ன இருக்கிறது? எனக்குப் புரிகிறது.”
நிகலாய் வேறொரு பக்கமாகத் திரும்பிக்கொண்டு, மூக்கைப் பலமாகச் சிந்தினான்.
”எனக்கு என்னவோ சளிதான் பிடித்திருக்கிறது போலிருக்கிறது…..” என்று முணுமுணுத்தான்.
அவன் கைகளை உயர்த்தி, தன் மூக்குக் கண்ணாடியைச் சீர்படுத்திக்கொண்டே மேலும் கீழும் நடந்தான்.
“உண்மை இதுதான். எப்படியானாலும் நமக்கு இனிமேல் நேரமே இல்லாது போயிற்று.’
”அது சரிதான். விசாரணையாவது நடக்கட்டும்” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு இதயத்திலே மூட்டமாய்ப் படிந்த சோகத்தோடு சொன்னாள் அவள்.
“இதோ. இப்போதுதான் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஒரு தோழரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது…..”
”எப்படியும் அவன் சைபீரியாவிலிருந்து தப்பி வந்துவிடலாம். இல்லையா?”
“நிச்சயமாய், விசாரணை சீக்கிரமே நடைபெறப் போகிறதென்றும், ஆனால் தீர்ப்பு—அவர்கள் அனைவரையும் நாடு கடத்துவதென்று தீர்ப்பு — செய்துவிட்டதாகவும் அவர் எழுதியிருக்கிறார். இந்த ஏமாற்றுக்காரர்கள் தங்களது சொந்த நீதிமன்றங்களைக்கூட ஓர் ஆபாசக் கேலிக்கூத்தாக மாற்றிவிடுகிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். விசாரணை ஆரம்பமாவதற்கு முன்பே, பீட்டர்ஸ்பர்க்கில் தீர்ப்பு நிச்சயமாகிவிடுகிறது!
“கவலைப்படாதே நிகலாய் இவானவிச்” என்று உறுதியுடன் கூறினாள் தாய். “நீங்கள் எனக்கு இதை விளக்கவும் வேண்டாம். ஆறுதல் கூறவும் வேண்டாம். பாவெல் சரியான காரியத்தைத்தான் செய்வான். எந்தவிதக் காரணமுமின்றி அவன் தன்னையும் தன் தோழர்களையும் கஷ்டத்துக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டான். அவன் என்னை நேசிக்கிறான். அவன் என்னைப்பற்றி எவ்வளவு கவலைப்படுகிறான் . என்பதை நீங்களே அறிவீர்கள். அவளுக்கு விளக்கிச் சொல்லுங்கள்’ என்று சொல்கிறான் அவன். ‘ஆறுதல் கூறுங்கள்’ என்கிறான்…”
அவளது இதயம் மூர்க்கமாகப் படபடத்தது. உணர்ச்சி வேகத்தால் அவள் கண்கள் இருண்டு மயங்கின.
“உங்கள் மகன் அருமையான பேர்வழி” என்று இயற்கைக்கு மீறிய உரத்த குரலில் சொன்னான் அவன். “அவன் மீது எனக்கு அபார மதிப்பு”.
“ரீபினுக்கு உதவுவதற்கு நாம் வேறொரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று சொன்னாள் தாய்.
அவள் உடனடியாக ஏதாவது செய்ய விரும்பினால், எங்காவது போக, களைத்துப் போய்க் கீழே சாய்கிறவரையிலும் நடந்தே போக விரும்பினாள்.
‘நல்லது என்று கூறிக்கொண்டே அறைக்குள் நடந்தான் நிகலாய். ”இப்போது சாஷா நமக்குத் தேவை…”
‘அவள் வந்துவிடுவாள். நான் என்றென்றெல்லாம் பாவெலைப் பார்த்துவிட்டு வருகிறேனோ, அன்றெல்லாம் அவள் வந்துவிடுவாள்.”
படிக்க:
♦ சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !
♦ மார்கழி கச்சேரி ஸ்பெஷல் : கரகரப்பிரியா ராகமா ? தர்பூசணி ரசமா ?
”நிகலாய் சோபாவில் தாய்க்கு அருகே உட்கார்ந்தான். அவன் சிந்தனை வயப்பட்டவனாய்த் தலையைக் குனிந்து உதட்டைக் கடித்து, தாடியைத் திருகிக்கொண்டிருந்தான்.
“இந்தச் சமயத்திலே என் அக்காவும் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம் தான்…”
“பாவெல் அங்கிருக்கும் போதே நாம் இந்தக் காரியத்தைச் செய்து முடித்துவிட்டால் நல்லது. அவனும் அதைக் கண்டு சந்தோஷப்படுவான்’ என்றாள் தாய்.
அவர்கள் இருவரும் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள்.
”அவனுக்கு ஏன் இதில் விருப்பமில்லை என்பது எனக்குப் புரியவே இல்லை …’ என்றாள் தாய்.
நிகலாய் துள்ளியெழுந்தான். அதற்குள் வாசலில் மணியடித்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“சாஷாவாய்த்தான் இருக்கும்” என்று மெதுவாகச் சொன்னான் நிகலாய்.
“அவளிடம் இதை எப்படிச் சொல்வது?” என்று தானும் மெதுவாகக் கேட்டாள் தாய்.
”ஹம் — ஆமாம்.” ”அவளை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது.”
மீண்டும் மணியடித்தது. ஆனால் இந்தத் தடவை உரத்து ஒலிக்கவில்லை. வாசலில் நிற்கும் ஆசாமி உள்ளே வருவதற்குத் துணியாதது மாதிரி தோன்றியது. நிகலாயும் தாயும் கதவினருகே சென்றார்கள். சமையல் கட்டுக்குள் சென்றவுடன் நிகலாய் ஒருபுறமாக நின்று கொண்டு சொன்னான்.
“நீங்கள் மட்டும் போவதுதான் நல்லது…”
”அவன் மறுத்துவிட்டானா?” என்று கதவைத் திறந்து விட்டவுடனேயே தாயிடம் தைரியமாகக் கேட்டாள் அந்தப் பெண்.
“ஆமாம்.”
”அவன் இப்படிச் செய்வான் என்று எனக்குத் தெரியும் என்று வெறுமனே சொன்னாள் சாஷா . எனினும் அவளது முகம் வெளுத்து விட்டது. அவள் தனது கோட்டுப் பித்தான்களைக் கழற்றினாள்; மீண்டும் அதை மாட்டினாள். அந்தக் கோட்டைத் தன் தோளில் சிறிது நழுவிக்கிடக்குமாறு செய்ய முயன்றாள்.
“மழையும் காற்றும் — பொல்லாத பருவம்!” என்று சொன்னாள் அவள். ”அவன் சௌக்கியமா?”
“ஆமாம்.”
”செளக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறான்” என்று மெதுவாகக் கூறிவிட்டு, தன் கையையே பார்த்துக் கொண்டு நின்றாள் சாஷா .
”நாம் ரீபினை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவன் எழுதியிருக்கிறான்’ என்று அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்க்காமலேயே கூறினாள் தாய்.
“அப்படியா? நாம் அதற்கேனும் நமது திட்டத்தை உபயோகித்துப் பார்க்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்று மெதுவாகச் சொன்னாள் அந்த யுவதி.
”நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்று கூறிக்கொண்டே வாசல்நடைக்கு வந்தான் நிகலாய் ”வணக்கம், சாஷா.”
அந்த யுவதி தன் கரத்தை நீட்டியவாறே கேட்டாள்:
“ஏன் கூடாது? எல்லோரும் இது ஒரு நல்ல திட்டம் என்றுதான் கூறுகிறார்கள்.”
“ஆனால், இதை நிறைவேற்றி வைப்பது யார்? நமக்கெல்லாம் ஒரே வேலையாயிருக்கிறதே.”
”நான் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டே எழுந்தாள் சாஷா . “எனக்கு அவகாசம் இருக்கிறது.”
“ரொம்ப சரி. ஆனால் மற்றவர்களைக் கேட்டுக் கலந்து கொள்ள வேண்டும்…”
”நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போதே போகிறேன்.”
மீண்டும் அவள் தனது மெல்லிய விரல்களால் தனது கோட்டுப் பித்தான்களை அவசர அவசரமாக மாட்ட முயன்றாள்.
“முதலில் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள் தாய்
”எனக்கு ஒன்றும் களைப்பாயில்லை” என்று அமைதியான புன்னகையோடு கூறினாள் அந்தப் பெண்.
வாய் பேசாது அவர்களோடு கை குலுக்கிவிட்டு அவள் மீண்டும் பழைய விறைப்போடும் கடுமையோடும் வெளியில் சென்றாள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
முந்தைய பகுதிகள்:
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்