மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 52 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
“ஓடு! ஓடு!” என்று காலைத் தரையில் உதைத்துக்கொண்டே மெதுவாகக் கத்தினாள் தாய்.

அவளது காதுகளில் கிண்ணென்று இரைந்தது. பலத்த கூச்சல்களை அவள் கேட்டாள். சுவரின் மீது மூன்றாவது தலையும் தோன்றியது. தாய் தனது நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு திக்குமுக்காடும் மூச்சோடு கவனித்துப் பார்த்தாள். தாடியில்லாத ஓர் இளைஞனின் வெளிர் முடித் தலை ஒரு குலுக்குக் குலுக்கியவாறே மேலெழுந்தது. ஆனால் மறுகணமே அது மீண்டும் உள்வாங்கிக்கொண்டது. கூச்சல்கள் உரத்தும் உத்வேகத்துடனும் ஓங்கி ஒலித்தன. விசில்களின் கீச்சுச் சப்தங்களைக் காற்று ஆகாயத்தில் பரப்பி ஒலிக்கச் செய்தது. மிகயில் சுவரை ஒட்டி நடந்தான். அவன் அதனைக் கடந்து சிறைச்சாலைக்கும், ஊரின் வீடுகளுக்கும் இடையேயுள்ள வெட்டவெளி மைதானத்தைக் கடந்து சென்றான். அவன் மிகவும் மெதுவாகவும் தலையை அதிகமாக நிமிர்ந்தும் நடப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனது முகத்தை அந்தச் சமயத்தில் ஒரு முறை பார்க்க நேர்ந்தவர்கள் அதை என்றென்றும் மறக்க மாட்டார்கள். அப்படி இருந்தது அந்த முகத்தோற்றம்.

“சீக்கிரம், சீக்கிரம்!” என்று முணுமுணுத்தாள் தாய். சிறைச்சாலைச் சுவருக்கு அப்பால் ஏதோ மோதியறையும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து கண்ணாடிச் சில்லுகள் நொறுங்கி விழும் சப்தத்தை அவள் கேட்டாள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் தனது காலைப் பூமியில் அழுத்தி ஊன்றியவாறே குதிரைக் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். அடுத்தவன் தன் முஷ்டியை வாயருகே கொண்டுபோய் சிறைச்சாலையை நோக்கிச் சத்தமிட்டான். அவன் சத்தமிட்டு முடிந்த பிறகு அதற்குப் பதில் எதிர்பார்த்துக் காதைத் திருப்பிச் சாய்த்துக் கேட்டான்

தாய் மிகுந்த சிரமத்தோடு நாலா திசைகளிலும் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே நின்றாள். அவளது கண்கள் எல்லாவற்றையும் பார்த்தன, ஆனால் எதையும் நம்ப மறுத்தன. எந்த ஒரு காரியம் மிகுந்த சிக்கலும் அபாயம் நேரக்கூடிய பயபீதியும் நிறைந்த எண்ணத்தை அவள் மனத்தில் ஏற்படுத்தியிருந்ததோ, அதே காரியம் மிகவும் சுளுவாக எளிதாக சீக்கிரமே நடந்து முடிந்துவிட்டது. அதனது துரித சக்தி தாயை ஆட்கொண்டு அவளது புலன்களை மரத்துப்போகச் செய்தது. பின் ஏற்கெனவே மறைந்து சென்றுவிட்டான். ஒரு நெட்டையான மனிதன் நீண்ட கோட்டை அணிந்து கொண்டு தெரு வழியாக நடந்து சென்றான், அவனுக்கு முன்னால் ஓர் இளம் யுவதி ஓடிக்கொண்டிருந்தாள். மூன்று சிறைக் காவலாளிகள் சிறைச்சாலை மூலையிலிருந்து தாவி ஓடி வந்தார்கள். மூன்று பேரும் தங்கள் வலது கைகளை நீட்டியவாறு ஒருவர் அருகில் ஒருவராக ஓடிவந்தார்கள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் அவர்களைச் சந்திப்பதற்காக ஓடினாள். அடுத்தவன் குதிரையைச் சுற்றிச் சுற்றி ஓடியவாறே அதன் முதுகில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்தான்.

ஆனால், அந்தக் குதிரையோ முரட்டுத்தனமாக. மேல்நோக்கித் தாவிக்குதித்தது. அந்தக் குதிரை தாவிக் குதிக்கும்போது எல்லாமே தாவிக் குதிப்பது மாதிரி இருந்தது. விசில் சப்தங்கள் இடைவிடாது அழுத்தமாக ஒலித்தன. அவற்றின் கீச்சுக் குரல்கள் தாயின் உள்ளத்திலே அபாய உணர்ச்சியைக் கிளப்பிவிட்டன. அவள் நடுங்கினாள் இடுகாட்டின் வேலிப்புறமாக, அந்தக் காவலாளிகளின் மீது ஒரு கண் வைத்தவாறே நடந்தாள். ஆனால், அந்தக் காவலாளிகளும் சிப்பாய்களும் சிறைச்சாலையின் வேறொரு மூலையைக் கடந்து மறைந்து சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் பித்தானிடப்படாத கோட்டோடு ஒரு மனிதன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவன் தான் சிறைச்சாலை உபதலைவன் என்று அடையாளம் கண்டு கொண்டான். எங்கிருந்தோ போலீஸ்காரர்களும், பரபரக்கும் ஜனக்கூட்டமும் கூடி வந்தார்கள்.

குதூகலத்தோடு சுற்றியாடுவது போல் காற்று சுழன்று வீசியது. காற்று வாக்கில் தாயின் காதுகளில் உடைந்து கலகலக்கும் கூச்சல்களும், விசில் சப்தங்களும் ஒலித்தன. இந்தக் குழப்பத்தைக் கண்டு தாய் குதூகலமடைந்தாள். தனது நடையை எட்டிப் போட்டு நடந்தவாறே சிந்தித்தாள்.

”சமயங்களில், அவர்கள் பாஷாவிடம் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்குவார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. ‘ஏ முஜீக் உன்னைத்தான். முஜீக்குக்குப் பிறந்தவனே உனக்கென்னடா துர்ப்புத்தி?” என்று கேட்பார்களோ என்று பயம்.

“அவனும் கூட இப்படிச் சுலபமாய்த் தப்பி வந்திருக்கக்கூடும்!” திடீரென்று ஒரு மூலையிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் ஓடிவந்தார்கள்.

“நில்” என்று அவளை நோக்கி ஒருவன் மூச்சு வாங்கியவாறே கத்தினாள். ”தாடிக்கார மனுஷன் ஒருவனை நீ பார்த்தாயா?”

அவள் தோட்டமிருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினாள்.

”அவன் அந்தப் பக்கமாகத்தான் ஓடினான்” என்று அமைதியாகச் சொன்னாள் அவள். ”ஏன்?’

“இகோரவ்! விசிலை ஊது”

தாய் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் எதற்காகவோ வருத்தப்பட்டாள். அவளது மனத்தில் கசப்பும் வருத்தமும் கலந்த உணர்ச்சி தென்பட்டது. வெட்ட வெளியைக் கடந்து தெருவுக்குள் வந்தபோது அவளைக் கடந்து ஒரு வண்டி சென்றது. அந்த வண்டிக்குள் அவள் பார்த்தாள். அதற்குள் வெளிர் மீசையும், வெளுத்துச் சோர்ந்த முகமும் கொண்ட ஓர் இளைஞனைக் கண்டாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டான். அவன் பக்கவாட்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். எனவே அவனது இடது தோளைவிட வலது தோள் உயர்ந்து காணப்பட்டது.

நிகலாய் அவளை குதூகலத்தோடு வரவேற்றான். ”சரி, என்ன நடந்தது?” ”எல்லாம் சரிவர நடந்துவிட்டதாகவே தோன்றுகிறது.”

அவள் தப்பி வந்ததைப்பற்றி சாங்கோபாங்கமாக விரிவாகச் சொல்லத் தொடங்கினாள். எனினும் அவள் வேறு யாரோ சொன்ன விஷயத்தைத் திருப்பிச் சொல்வது மாதிரிப் பேசினாள். நான் கண்ணால் கண்டதையே அவள் நம்ப மறுத்துச் சந்தேகிப்பது போலிருந்தது.

”அதிருஷ்டம் நம் பக்கம் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே கைகளைத் தேய்த்துக் கொண்டான் நிகலாய். “உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடக்கூடுமே என்று நான் பயந்த பயம் சைத்தானுக்குத்தான் தெரியும். நீலவ்னா, நான் சொல்வதைக் கேளுங்கள். விசாரணையை எண்ணிப் பயந்து கொண்டிருக்காதீர்கள். எவ்வளவு சீக்கிரம் விசாரணை முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் பாவெல் சுதந்திரம் அடைவான். நாடு கடத்துவதற்காகக் கொண்டு செல்லும்போதே, அவன் தப்பி வந்துவிடக்கூடும். விசாரணையைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடக்கப்போகிறது…..”

படிக்க:
நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

”அவன் கோர்ட்டு நடவடிக்கைகளை விவரித்துக் கூறினான். அவன் அவளை எவ்வளவுதான் தேற்றினாலும் கூட, தான் எதையோ கண்டு தனக்குள் தானே அஞ்சிக் கொண்டிருப்பதாக அவனது பேச்சிலிருந்து உணர்ந்து கொண்டாள் தாய்.

”கோர்ட்டில் நான் ஏதாவது தப்புத் தண்டாவாகப் பேசிவிடுவேன் என்றோ, அல்லது நீதிபதிகளிடம் எதையாவது கேட்டுவிடுவேன் என்றோ பயப்படுகிறீர்களா?” என்று திடீரெனக் கேட்டாள் அவள்.

அவன் துள்ளியெழுந்து கைகளை எரிச்சலோடு ஆட்டிக்கொண்டான்.

“இல்லவே இல்லை” என்று புண்பட்ட குரலில் சொன்னான் அவன்.

”நான் பயந்துவிட்டேன். அதுதான் உண்மை. ஆனால் நான் எதைக் கண்டு பயப்படுகிறேன் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.” அவள் பேசுவதை நிறுத்தினாள். அவளது கண்கள் அறையைச் சுற்றி வட்டமிட்டன.

”சமயங்களில், அவர்கள் பாஷாவிடம் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்குவார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. ‘ஏ முஜீக் உன்னைத்தான். முஜீக்குக்குப் பிறந்தவனே உனக்கென்னடா துர்ப்புத்தி?” என்று கேட்பார்களோ என்று பயம். பாவெல் கர்வம் நிறைந்தவன். அப்படித்தான் பதிலும் சொல்லுவான். அல்லது அந்திரேய் அவர்களைக் கிண்டல் செய்து எதையாவது சொல்வான். எல்லோருமே சூடானவர்கள். எனவே, அந்த மாதிரி விசாரித்து இனி நாம் அவர்களைக் காண முடியாதபடி செய்துவிடுவார்கள்!”

நிகலாய் பதில் பேசாமலே முகத்தைச் சுழித்தான்: தாடியை இழுத்துவிட்டுக் கொண்டான்.

”இந்த மாதிரி எண்ணங்களை என்னால் ஒதுக்கித்தள்ளவே முடியவில்லை ” என்று அமைதியாகச் சொன்னாள் தாய். “எனவேதான் இந்த விசாரணை எனக்கு அத்தனை பயங்கரமாய்த் தோன்றுகிறது ! அவர்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து அலசி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கிவிட்டால்! அதுதான் பயங்கரமாயிருக்கிறது எனக்குத் தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை. விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது. அதை எப்படிச் சொல்வது என்பதும் தெரியவில்லை …”

தான் சொல்வதை நிகலாய் புரிந்துகொள்ளவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அந்த உணர்ச்சியால் தனது எண்ணங்களை வெளியிட்டுச் சொல்வது கூட அவளுக்குச் சிரமமாயிருந்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க