நவீன இந்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட படுபயங்கரமான கூட்டு படுகொலை ஒன்றை பாஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன் வாலா பாக் சதுக்கத்தில் 1919 ஏப்ரல் 13-ஆம் தேதி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அரங்கேற்றியது. சீக்கிய புத்தாண்டைக் கொண்டாடக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை இரக்கமில்லாமல் சுட்டு வீழ்த்தியது பிரிட்டிஷ் படை. கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர்.
கொடூரமான இந்த படுகொலையின் நினைவு நூற்றாண்டு வரவிருக்கிற நிலையில், ‘தேசப்பற்று’க்கு முழு குத்தகைதாரர்கள் என முழுங்கிக் கொண்டிருக்கிற மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜாலியன் வாலாபாக் தியாகிகளை நினைவுகூர்வதற்கான நிகழ்வுகளுக்கு நிதி ஒதுக்கவில்லை.

அமிர்தசரசில் நிறுவப்பட்டுள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை ‘ஜாலியன் வாலாபாக் டிரஸ்ட்’ நிர்வகிக்கிறது. இது தனியார் நிர்வகிக்கும் டிரஸ்டும் அல்ல; மாநில அரசின் கீழ் உள்ள டிரஸ்டும் அல்ல. இதன் நிர்வாகம் முழுக்க முழுக்க மத்திய கலாச்சார அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. இந்த டிரஸ்டின் தலைவராக உள்ளவர் இந்த நாட்டின் தலைசிறந்த ‘தேசபக்தர்’ மோடி!
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஏ.கே. ஆண்டனி 2010-ம் ஆண்டு, இந்த நினைவிடத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை விவரிக்கும் 52 நிமிட ஒளி-ஒலி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 2014-ம் ஆண்டு வரை இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு காட்டப்பட்டு வந்தது.
‘தேசபக்தர்’ மோடி மத்தியில் ஏகபோகமாக அமர்ந்தபின், போதிய பணம் ஒதுக்கப்படாததால் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் மாநில கலாச்சார அமைச்சகம், நினைவிடத்தை பராமரிக்கவும் ஒளி-ஒலி நிகழ்ச்சியை தொடர்ந்து செயல்படுத்தவும் ரூ. 8 கோடி ஒதுக்கியது. பஞ்சாப் மாநில கலாச்சாரத் துறை அமைச்சரான நவ்ஜோத் சிங் சித்து, 2018 அக்டோபரில், மொத்தமாக ரூ. 20 கோடி ஒதுக்கி காட்சிக்கூடம், தோட்டம் ஆகியவற்றை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், டிரஸ்டின் தலைவராக உள்ள ‘தேசபக்தர்’ மோடி அதற்கு ‘ஆட்சேபனை இல்லை’ எனும் சான்றிதழை இன்னும் அளிக்காமல் இருப்பதால் நிதியை எடுத்து பயன்படுத்த முடியவில்லை.
படிக்க:
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
♦ ஆர்.எஸ்.எஸ். இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் !
கேரள மாநில சிபிஎம் கட்சி எம்.பி. ராஜேஷ், ஜாலியன் வாலாபாக் நினைவு நூற்றாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், நினைவிடத்தை பராமரிக்க ஒதுக்கியுள்ள நிதியை விடுவிக்கும்படி ‘தேசபக்தர்’ மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பட்டேல் சிலைக்கு ரூ. 3000 கோடி ஒதுக்கத் தெரிந்த மோடிக்கு, 3000 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கிற இந்த நினைவிடத்துக்கு 1 ரூபாய்க்கூட ஒதுக்க மோடிக்கு மனமில்லையா என அவர் கேட்கிறார்.
“ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்த இந்த வாழும் நினைவிடத்தை பராமரிக்க நிதி ஒதுக்காமல் இருப்பது மன்னிக்க முடியாதது” என்கிறார் ராஜேஷ்.
ஒரு திருவிழாவுக்காக கூடிய பஞ்சாப் மக்களை தமது சுரண்டல் நலனை தக்க வைத்துக் கொள்ள, சுட்டுக் கொன்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலை நக்கி வாழ்ந்தது இந்த ஆர்.எஸ்.எஸ். – காவி கும்பல். அதைப் போலவே இன்று வேதாந்தா எனும் கார்ப்பரேட் கொள்ளையனின் நலனுக்காக தூத்துக்குடி மக்களை குருவி போல சுட்டுக் கொன்ற கார்ப்பரேட் – காவிக் கும்பலின் தலைவரிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
அனிதா
செய்தி ஆதாரம்: தி வயர்