தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வேரூன்றச் செய்வதற்கு அதன் நிறுவனத் தலைவர் ஹெட்கேவர், மராத்திய சித்பவனப் பார்ப்பன கும்பல் ஒன்றை அனுப்பி வைத்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொருத்தவரை,
“1980-இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்தது. ஆனால் இன்று, சங்கம் மிக வேகமாக வளரும் பிராந்தியங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அதோடு சங்கத்தின் சகோதர அமைப்புகள் அனைத்தினது வேலையும் நல்ல முன்னேற்றகரமானதாக உள்ளது. எங்கும் இந்து வேட்கை பற்றிக் கொண்டு வருகிறது. உண்மையில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கிறது.” (தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து எழுச்சியின் கதை, ஆர்.எஸ்.எஸ். வெளியீடு, பக். 4-5).
“உடைப்பதற்குக் கடினமான ஒரு கொட்டையாகத் தமிழ்நாடு உள்ளது” என்று ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளராக இருந்த தேவராஸ் சித்தரித்தார்; அந்தக் கொட்டை உடைபட உடன்பாடுவதாகத் தெரிந்தது. 1980-81-ல் ஏராளமான புதிய குழுக்கள் பல புதிய இடங்களில் செயல்படத் தொடங்கின, அப்போதுதான் சங்கத்தின் வேலையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது” என்று ஆர்.எஸ்.எஸ். கூறிக் கொள்கிறது. (நூலிலிருந்து பக்.3)
ஒரு 40 ஆண்டு காலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தத் தமிழ் மண்ணில் வேரூன்ற முடியாமல் தடுமாறி இருக்கிறது. அதன் பின்னர் சில திருப்பு முனைகள் ஏற்பட்டு வேகமான வளர்ச்சி கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுடன் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டதுதான் என்று பார்ப்பது மேலோட்டமான பார்வை. அதே போல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர்கள் இந்த மண்ணில் தவமிருந்ததன் பலன் என்று கூறுவது ஒரு புனிதப் போர்வை போர்த்தும் செயல்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு உண்மை நன்றாகவே தெரியும். பெரியார் தலைமையிலான பகுத்தறிவு – சுயமரியாதை இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். இந்த மண்ணில் வேரூன்றித் தழைப்பதற்கு பெருந்தடையாக இருந்தது என்பதை அறிவார்கள். இதை இந்து, சடங்கு – சாத்திரங்கள், இந்தி, பார்ப்பனியம், சமசுக்கிருதம், இதிகாசம் – புராணங்கள் ஆகிய வடக்கிலிருந்து வந்தவை அனைத்தையும் புறக்கணிக்கும்படி நடத்தப்பட்ட வெறுப்பு இயக்கம் என்று அவர்கள் சித்தரிக்கிறார்கள்.( நூலிலிருந்து பக்.6)
”பித்தலாட்டக்காரர்களின் கடைசிப் புகலிடம் தேச பக்தி” என்று முதலாளிய அறிஞர் ஜான்சன் கூறினார். ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச – பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு இது முழுமையாகப் பொருந்தும். பார்ப்பன மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நாட்டிற்கு – தேசத்திற்கு எதிரான துரோகம் என்று சித்தரிப்பதன் மூலம் நாட்டுப்பற்று – தேசப்பற்று என்பதைக் கேடாகப் பயன்படுத்துவதைத் தமது மூல உத்தியாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தேசதுரோக முத்திரை குத்தி தனது எதிராளிகளை ஒழிப்பது எளிய வழி என்று கண்டுள்ளனர். இதோடு கூடவே தனக்கு எதிரானவற்றை அந்நிய ஊடுருவல், அந்நிய ஆக்கிரமிப்பு, அந்நிய சதி என்று முத்திரை குத்தி தேசியவெறியூட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். (நூலிலிருந்து பக்.7-8)
படிக்க:
♦ காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னை ஒரு தேசியவாதப் பண்பாட்டு, சமூக இயக்கம் என்று கூறிக்கொள்கிறது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி தான் ஒரு சுயேட்சையான அரசியல் கட்சி என்று கூறிக்கொள்கிறது. இந்த இரண்டு கூற்றுமே உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு அரசியல் பிரிவுதான் பாரதீய ஜனதா கட்சி. இரண்டுக்குமே இந்து மதவெறி பாசிசக் கொள்கையான “இந்துத்துவம்” தான் வழிகாட்டும் சித்தாந்தம், இந்து ராஷ்டிரம்தான் இலட்சியம்.
பா.ஜ.க. வைப் போல வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் ஆர்.எஸ்.எஸ். போன்றதொரு பாசிச அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்டு, பின்னால் இருந்து இயக்கப்படும் உயர்மட்டத் தலைவர்களில் இருந்து உள்ளூர் பிரமுகர்களையும் அணிகளையும் கொண்டிருக்கவில்லை. சங்கப்பரிவாரங்கள் அதாவது சங்கக் குடும்பம் என்று கூறிக் கொள்ளும் பல்வேறு பிரிவு இந்துமதவெறி அமைப்புகளும் இப்படிப்பட்டவைதான்.
ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளின் பின்புலமோ, வேறு பிற ஆளும் வர்க்க அரசியல் அமைப்புகளைப் போல ”லேசு”’ப்பட்டவை அல்ல. முன்னாள் – இன்னாள் அரசு உயர் அதிகாரிகள், பார்ப்பன – பனியா தரகு அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு பெற்றவர்கள் பிற ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால், மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது இவர்களை விட இந்து மதவெறி பார்ப்பன பாசிச குருமார்கள், ஆச்சாரியர்கள், சந்நியாசிகள், சாமியார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள் என்று ஒரு பெரும் கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மட்டுமே திரட்டிவைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கும்பலின் அரசியல் – பாசிசப் பேராசைகளுக்கு மூடுதிரையாகவும் கவசமாகவும் அவர்கள் விளங்குகிறார்கள். (நூலிலிருந்து பக்.39)
இந்திய நாட்டின் தலைசிறந்த சீர்திருத்தவாதியாகிய பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் முன்பு ஒருமுறை சொன்னார்: ”வெள்ளைக்காரன் ஒரு நல்ல காரியம் செய்தான். நெடுஞ்சாலைகளில் மைல் கல்லை நட்ட வெள்ளைக்காரன் அதில் வெள்ளையடித்து ஊர், பேர், தூரத்தை எழுதி வைத்தான். இல்லையானால் நம்ம ஜனங்க அதற்குப் போய்ப் பொட்டு வைத்து, மாலை போட்டு மைல்சாமி ஆக்கி இருப்பான்.” நமது பாமர மக்களின் பக்தி எத்தகையது என்பது குறித்து கிண்டலாகப் பேசிய ஈ.வெ.ரா.தான் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு, நாத்திகப் பிரச்சாரம் செய்து அந்த மூட நம்பிக்கையை ஒழிக்க அரும் பாடுபட்டார்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பலோ அந்தப் பாமரப் பக்தர்களிடையே நிலவும் பக்தி உணர்வை மேலும் ஆழப்படுத்தி, பரவச்செய்து தமது பாசிச அரசியல் பேராசைகளை ஈடேற்றிக் கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆகிய வகுப்புவாத மதவெறி சக்திகளை முறியடிப்பதே தமது நோக்கமென்று கூறிக் கொள்ளும் மதச் சார்பற்ற அல்லது மத நல்லிணக்க அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் பாமர மக்களிடையே நிலவும் மதம், கடவுள், பக்தி உணர்வுகளை பாதித்து விடாமல் – வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற அணுகுமுறையின் மூலம் அதைச் சாதித்துவிட எத்தணிக்கிறார்கள்.
ஆனால், தேவையானது ஊசி – வாழைப்பழ அணுகுமுறை அல்ல; அறுவைச் சிகிச்சை, அதாவது பாமர மக்களிடையே நிலவும் மதம், கடவுள், பக்தி உணர்வை வேரோடு பிடுங்கி எறிந்து விடவேண்டும். பகுத்தறிவு சுயமரியாதை, நாத்திகம் என்கிற விதையை பாமர மக்களிடையேயும் விதைக்க வேண்டும். (நூலிலிருந்து பக்.40)
நூல்: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?
(புதிய ஜனநாயகம் 2003 ஜூலை முதல் நவம்பர் வரையிலான இதழ்களில் (தொகுதி: 18, இதழ் எண்: 9 முதல் தொகுதி: 19, இதழ் எண்: 1 வரை) வெளியான தொடர் கட்டுரையின் மறுமதிப்பு.)
வெளியீடு: கீழைக்காற்று வெளியீட்டகம்,
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
தொலைபேசி: 99623 90277
பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00
வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க
இணையத்தில் வாங்க: commonfolks | marinabooks
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277