சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் வாக்குப் பதிவின்போது, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் பாமக சாதி வெறி கும்பல், தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கியது.
இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து சாதிவெறியை தீர்த்துக்கொள்ளும் களமாக தேர்தல் பிரச்சினையை திட்டமிட்டு மாற்றினர். வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, குழந்தைகள், முதியவர்களை அடித்துள்ளது இந்த கும்பல். இந்த சம்பவம் குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகளின் தொகுப்பு இங்கே…
கலையரசன்
பொன்பரப்பி கிராமத்தில் சாதிவெறி வன்முறை : தமிழ்த் தேசியவாதிகள் கள்ள மௌனம்.
ஒரு காலத்தில் நக்சலைட்டுகளுடன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் தனித் தமிழ் நாடு காண்பதற்காக ஆயுதப்போராட்டம் நடத்திய பொன்பரப்பி கிராமத்தில், இந்த சாதிவெறிக் கலவரம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது, ஆளும் வர்க்கம் மக்களை பிரிப்பதற்கு, ஓட்டரசியல் எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.
இதற்காகத் தானே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன? சமுதாயத்தில் எந்த மாற்றமும் வந்து விடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள். இதற்குள் ஓட்டுப் போட்டு விட்டு “ஒரு விரல் புரட்சி” செய்து விட்டதாக கூறும் சிலரது அலப்பறைகள் எரிச்சல் ஊட்டுகின்றன.
தேர்தல் முடிந்த பின்னர், பாமக கட்சியை சேர்ந்த சாதிவெறிக் காடையர்கள் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களித்த மக்களின் வீடுகளை பார்த்து தாக்கியுள்ளனர். இது கட்சி அரசியலும் சாதியவாதமும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
தமிழின ஒற்றுமையைக் குலைக்கும் இது போன்ற சம்பவங்களை, நாம் தமிழர் போன்ற தீவிர தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகள் எதுவும் கண்டுகொள்ளவில்லை. இதற்குள் தாம் மட்டுமே தமிழரின் மானம் காப்பதாக அடிக்கும் வாய்ச் சவடால்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. தனக்குள்ளே ஒரு சமூகத்தை சாதியின் பெயரால் ஒடுக்கும் ஓர் இனம் எப்படி விடுதலை பெறும்?
இங்கே வேடிக்கை என்னவெனில், தாக்குதல் நடத்திய சமூகத்தின் கட்சித் தலைவரும், தாக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சித் தலைவரும், முன்னர் ஒரே மேடையில் தோன்றி தமிழ்த்தேசியம் பேசியவர்கள் தான். புலம்பெயர்ந்த தமிழர்களின் நாடுகளுக்கும் சென்று, பிரபாகரன் படத்தை ஏந்தி, புலிச் சின்னம் பொறித்த சால்வை போர்த்தி, தமிழீழத்தை ஆதரித்து அனல் பறக்க பேசியவர்கள்தான். அன்று அவர்களைக் கூப்பிட்டு பேச்சுக்களை கேட்டு மகிழ்ந்த ஈழத்து புலி ஆதரவாளர் ஒருவர் கூட இந்த சாதிவெறி வன்முறையைக் கண்டிக்கவில்லை.
தமிழினம் தனக்குள் இருக்கும் பிரிவினைகளை பூசி மெழுகி விட்டு, “தமிழர் ஒற்றுமை” பற்றிப் பேசுவதும் இன்னொரு அடக்குமுறைதான்.
படிக்க:
♦ பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்
மகிழ்நன் பா.ம
கம்யூனிஸ்டுகள் தங்களுடைய பல்வேறு தியாகத்தின் மூலம் சாதி கடந்து சாதித்து காட்டிய வர்க்க ஒற்றுமையை சிதைத்த ராமதாஸ் வகையறாக்களை “பிற்படுத்தப்பட்டவர்களின் காவலர்” என்று வரையறை செய்த சமூக நீதி புண்ணாக்குகள்…
பெரும் கதையாடல் எல்லாம் தவறு என்று சாதி, சாதியாக மக்களை மேலும், மேலும் பிளவுப்படுத்த ஆளும் வர்க்கத்திற்கு துணை போன அயோக்கியர்கள்… இவர்களைக் கண்டறிந்து அரசியல் தளத்தில் தனிமைப்படுத்துங்கள்…
இவனுக இன்னும், முற்போக்காளர்கள் கதாபாத்திரத்தை எந்த மன்னிப்பும் கேட்காம ஆத்த விடாம, அவனுக பர்னிச்சர உடைங்க. அதோடு, பொன் பரப்பியில் நடந்திருக்கும் சம்பவம், இந்து முன்னணி, பாமக கும்பல் பரப்பி வரும் விசத்தின் அடையாளம். அந்த கும்பல் முறியடிக்கப்பட வேண்டும்..
ஒட்டு மொத்த வன்னியர்களே சாதி வெறியர்கள், அவர்களில் எவரொருவரும் திருமாவுக்கு வாக்களிக்கவில்லை என்ற முடிவுக்கு தள்ளும்படியாக எழுதும் கிறுக்கர்களை புறந்தள்ளுங்கள். எனக்குத் தெரிந்தே ஏராளமான வன்னியர்கள் திருமாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
ராமதாஸ் வகையறா பதவி வெறி பிடித்த தரகர்களை, ஜனநாயக பண்போடு இருக்கும் வன்னிய சாதி உழைக்கும் மக்களோடு சேர்ந்துதான் முறியடிக்க முடியும்.
ஒட்டுமொத்தமாக ஒரு சாதி முற்றாக வெறி பிடித்ததென்றும், மற்ற சாதியில் புனிதர்கள் இருப்பதாக கட்டமைப்பதையும் நிறுத்துங்கள்.
அதேபோல, வன்னியர் சாதியை சார்ந்த ஜனநாயக சக்திகள், பொத்தாம் பொதுவாக கண்டன குரல்களை எழுப்பாமல், நான் சாதியால் வன்னியர்தான்… ஆனால், எனக்கு சாதிவெறியாட்டத்திலோ, ராமதாஸ் குடும்பத்தின் பதவி வெறியாட்டத்திலோ உடன்பாடில்லை என்று வெளிப்படையாக பதிவிடுங்கள்.
அப்பொழுதுதான்… இந்த தரகர்களை தேர்தலுக்கு அப்பாலும் வீழ்த்த முடியும்.
பாரதி தம்பி
சாதி வெறியின் பொலிவு தென்படும் இந்த முகங்களில் பொருளாதார மினுக்குகள் எதையும் காண முடியவில்லை. கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் சாதிப் பெருமிதத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனா, தலைக்கு நாலு கேஸ் போட்டு நாலஞ்சு வருஷம் கோர்ட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் அலையவிட்டா, வக்காலத்து போடக்கூட சாதிக்காரன் வரமாட்டான். செத்தால் மாலையுடன் வரும் உன்னுடைய சாதி சங்கமும், கட்சியும், வாழ வழியில்லாமல் நடுரோட்டில் நிற்கும்போது பச்சைத் தண்ணீர் கூடத் தராது.
ஜீவகன்
பட்டியலினக் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு, குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூட தாக்கப்படுகையில் யார் பக்கம் நின்று பேசுவது என, ஜாதி இந்து முற்போக்குகள் தடுமாறிப் போகின்றனர்.
இவ்வளவுக்கும் ஊர்த்தெரு குடியிருப்பு சேதமாயிருக்காது. ஒருவர் கூட அடிபட்டிருக்க மாட்டார்கள். ஆனாலும், நட்ட நடுவில் நின்று கருத்துச் சொல்லி விட துடியாய்த் துடிப்பார்கள்.
ஊடகங்களுக்கு பிரச்சினையில்லை. இருதரப்பு மோதல் என்று தான் அவை முதலில் செய்தி போடும்.
ஆனால், இந்த நோஞ்சான் முற்போக்குகளின் நிலைமை பரிதாபமானது. தாம் பேசி வந்த ஜாதி/மத அடிப்படைவாத எதிர்ப்பின் வழி நின்று, இந்துத்துவா + பாமக அபாயகரக் கூட்டணியை இந்நேரத்தில் விமர்சிக்க முடியாது.
காரணம், தம் அமைப்புகளில் உள்ள ஜாதி இந்துக்களின் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வதில் அத்தனை கவனம். அவர்களுடன் முரண்பட்டால் பிழைப்புச் சிக்கல் வந்து விடும். அதே வேளை, முற்போக்கு அடையாள இமேஜையும் விட்டுக் கொடுக்க முடியாது. எனவே, விசிக-வும் பாமக-வும் ஒன்றுதான் என, நட்டநடுவில் நின்று நிறுவிட முயற்சிக்கின்றனர்.
இவர்கள்தான் தேர்தலில் அமமுக, மநீம, நாதக போன்றவற்றை ஆதரிப்போர் ஒருவகையில் பாஜக வெற்றிக்குத் துணை போவதாக எழுதியவர்கள்.
இப்போது, பொன்பரப்பியை வெறும் கட்சித் தகராறு என்று சுருக்குகையில், அது சனாதனத்திற்குச் சாதகமாவதை அறியாதவர்கள் போல காட்சி தருகின்றனர். இப்படி திருகுதாளம் அடிப்பவர்களிடம்… குறிப்பாக இடதுசாரி முகமூடிகளிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது. மூடிக்கொண்டு அமரவும்.
இரண்டாயிரம் ஆண்டுகள் பார்ப்பன அடிமையாய், சத்திரியன் என்கிற போர்வையில் சூத்திரனாய் இருப்பது கூடத் தெரிந்துகொள்ளாமல், ‘பறப்பயலுகளா’ என்பதில் இருக்கிற சாதி வெறி வன்மம் ஒழியாமல் இந்த சமூகத்தில் வன்னியர்களுக்கு சாதி வெறியர்கள் என்கிற பட்டம் ஒழியப் போவதே இல்லை.
சுடரொளி வேல்
பொன்பரப்பி சாதியத் தாக்குதலில் சிறுவர்களும் கூட ஈடுபட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. வெறியர்களாகவும் மடையர்களாகவும் மூடர்களாகவும் ஒரு கூட்டத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது சாதி. ஒருபுறம் சாதிய உணர்வோடு ஒரு அறிவற்ற சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் சாதியற்ற அறிவார்ந்த சமூகத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
மகேந்திரன் கீழாமத்தூர்
சமூகத்தின் ஒழிக்கப்படவேண்டிய விஷம் டாக்டர் ராமதாசும், அவர் வளர்த்து வைத்திருக்கும் சாதி வெறி பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும். வளர்ந்து வரும் தமிழக ஆர்.எஸ்.எஸ் வன்னியர் சங்கம். பாட்டாளி மக்கள் கட்சி.
இரா. முருகவேள்
“வன்னிய இளைஞர்கள் நக்ஸலைட்டுகள் ஆகாமல் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம்” என்று காடுவெட்டி குரு ஒருமுறை கூறினார். தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் நக்ஸலைட் வேட்டை நடைபெற்ற போது போலீஸ் கிராமத்து இளைஞர்களிடம் வன்னிய இளைஞர் சங்கத்தில் சேரும்படி அறிவுறுத்தியது என்று Mohanasundara kali போன்ற மூத்த தோழர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தமிழரசன் கொல்லப்பட்ட பின்பு அந்த இயக்கத்தை முன்னெடுத்த தோழர்களுடன் காடுவெட்டி குருவுக்கு இருந்த பகைமை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அடிப்படையில் அனைத்து பொதுவுடமை இயக்கங்களுக்கும் எதிரானது பாமக. பாமகவின் அடிப்படையே உழைக்கும் மக்கள் இணைந்து நிற்பதையும், போராடுவதையும் தடுப்பதுதான்.
பாமக-வுக்கும் பாஜகவுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் பாரதிய ஜனதா கட்சி எல்லாவிதமான முற்போக்கு, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய இயக்கங்களின் மீதான தனது விரோதத்தை ஒருபோதும் மறைப்பதில்லை. ஆனால் டாக்டர் ராமதாஸ் “நானும் ஒரு நக்சலைட்தான்” என்று கட்டுரை எழுதுவார்.
மனநல மருத்துவர் ஷாலினி
நான் ஒரு மருத்துவராய் இருப்பதில் எனக்கு எந்த பெருமையும் எப்போதும் இருந்ததில்லை. மருத்துவம் என்பது அதிலும் குறிப்பாக மனநல மருத்துவம் என்பது நிறைய சோகம் நிறைந்த பணி. இந்த நோய்களே இல்லாமல் இருந்திருக்க கூடாதா?! என்று எண்ணும் அளவிற்கு பல விதமான மனித துயரங்களை தினமும் பார்க்க வேண்டிய பணி. இதில் பெருமை எங்கிருந்து வரும்?!
ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மருத்துவராய் இருப்பதில் எனக்கு பெருமை வந்து சேர்ந்தது….. நீதி கட்சியை துவக்கிய நடேசனாரும், டி .எம். நாயர் அவர்களும் மருத்துவர்கள் என்று அறிந்த அன்றிலிருந்து நானும் அவர்கள் வகையறா, அதே கல்லூரி என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஆனால், என் கல்லூரியில் தான் மரு. அன்புமணி ராமதாஸும் படித்தார். அவர் மட்டும் ஏன் இப்படி ஜாதி வெறியர்களை இன்னும் அடக்காமல் இருக்கிறார் என்று நினைக்கும் போது, கல்லூரி அல்ல, முக்கியம். கற்றவைதான் முக்கியம் என்றே தோன்றுகிறது.
படிக்க:
♦ தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
♦ பாமக – வை ஏத்தி விட்ட பின் நவீனத்துவ பச்சோந்திகள் !
ராஜ் தேவ்
தமிழக அரசாங்கம் சாதி/மத வெறியர்களுக்கு வழங்கும் தைரியம் அசாத்தியமானது. தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன; கும்பல் வன்முறைக்கு தலித் மக்கள் இலக்காகின்றனர். இந்த தேர்தலை முன்னிட்டு சாதி/மத வெறி கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு இந்த தாக்குதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
தந்தை பெரியார் சிலைகள் குறைந்த கால இடைவெளியில் இரண்டு இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது பொன்பரப்பியில் தலித் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுடன் சாதி/மத வெறிக் கட்சிகளான பா.ஜ.கவும், பா.ம.கவும் வெளிப்படையான கூட்டு சேர்ந்திருப்பது புது வகை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்த அபாய நிலையை புரிந்து கொண்டு நாமும் கூட்டு சேர்ந்து இயங்க வேண்டும். ஆனால் இதற்கு ஊறு விளைவிக்கும் ரஞ்சித்ஸ்ட்களின் பதிவுகள் கவலை ஊட்டுகின்றன. வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்று பொதுவாக பேசுவதிலும் பயனில்லை.
சாதி/மத உணர்வு என்பது மக்களின் மனங்களில் காய்ந்த சருகுகளாக எப்போதுமிருப்பது. அதை பற்ற வைக்கும் அயோக்கியத்தனத்துக்கு எதிராக ஒன்றிணைவதே நம் முன் உள்ள பெருங்கடமை. அதன் மூலம் சாதி/மத வெறியாட்டங்களுக்கெதிராக பூஜ்ய சகிப்பை கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசின் பண்புநலனாக மாற்றும் போராட்டங்கள் வேண்டும்.
வேந்தன். இல
முற்போக்கு சிந்தனை புரிதல் உள்ள மக்களைக் கூட ஜாதிவெறி கட்சி தன் சுயலாபத்துக்காக ஜாதிவெறியை கிளப்பி பிளவை கூர்மைபடுத்துகிறது. தலித் மக்களின் மீது வன்முறையை ஏவுகிறது.
அன்று தோழர் அப்பு – பாலனின் நாயக்கன் கொட்டாய்.. இன்று தோழர் தமிழரசனின் பொன்பரப்பி.
பொன்பரப்பி மீதான தாக்குதல் காணொளி அங்குள்ள பெண்கள் குழந்தைகள், முதியோர் ஆகியோரின் மீதான பதற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாதுகாப்பு தரவேண்டிய அரசு பாமக-வின் இந்த செயலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதின் மூலம்தான் ஒரு ஜாதிவெறியை ஊக்குவிக்கும் அரசு என்று நமக்கு உணர்த்துகிறது. பானையை உடைத்தால் பாமகவுக்கு லாபம்.. வன்னிய சொந்தங்களே பாமகவின் ஜாதிவெறிக்கு பலியாகாதீர்கள். காடுவெட்டி குருவுக்கே அந்த நிலையென்றால் நீங்கள் எம்மாத்திரம்?
கருப்பு நீலகண்டன்
வலுத்த இடத்தில் தாக்குதலை நடத்தும் ராமதாஸ் அன்புமணி போன்ற ஜாதிவெறியன்களை இனி எங்கு பார்த்தாலும் கேரோ செய்து வெளியேற்றும் போராட்டங்களை நாம் கையில் எடுத்தால் என்ன?
ஜாதிவெறியோடு உலாவும் எந்த விலங்கும் இனி பொதுவில் இயங்கவோ புழங்கவோ முழங்கவோ முடியாது என்கிற போராட்டங்களையும் நிர்பந்தங்களை நாம் முன்னெடுத்தால் நமது சமூகத்திற்கு நல்லது.
ஆனால் கண்டிப்பாக இதில் தலித்துகளை முன்னே தள்ளிவிடாது முற்றமுழுக்க ஜனநாயக சக்திகள் முன்னின்று நடத்தவேண்டிய போராட்டம்.
நறுமுகை தேவி
இந்தப் புகைப்படம் நெஞ்சை அறுக்கிறது.அந்தப் பாட்டி கையெடுத்துக் கும்பிட்டு விட்டு விடச் சொல்வது போல் இருக்கிறது. வாசல் முழுக்க உடைந்த மண்பானை ஓடுகளின் சில்லுகள்.
பக்கத்தில் சுவரில் ஒரு மனிதரின் நிழல் தெரிகிறது.அந்த நிழல் தாக்க வருவது போலொரு உடல்மொழியைக் கொண்டிருக்கிறது. அந்த நிழல் மனிதனிடம்தான் பாட்டி இறைஞ்சுகிறாரா?
படிக்க:
♦ மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
♦ ‘நல்ல’ மாற்றம்! ‘நல்ல’ முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்!
கொண்டல்சாமி
தோழர் திருமாவளவன் அவர்களின் முக்கியமான பேட்டியை ஏனோ பெரும்பாலான ஊடகங்கள் வெளியிடவில்லை.
அந்த பேட்டியில் அவர் தெளிவாக சில விசயங்களை சொல்லுகிறார். பொன்பரப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக வன்னியர்களுக்குள் இந்து முன்னணி புகுந்து கொண்டு சாதிவெறியை மேலும் தீவிரமாக்குகிறது. இப்போது நடந்த தாக்குதலை நடத்தியதும் இந்து முன்னணிதான். ஆகவே இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டுமென்று பேட்டி கொடுத்திருந்தார்.
தென்மாவட்டங்களை குட்டிசுவராக்கிய இந்த இந்துத்துவ கும்பல்கள் இப்போது வட மாவட்டங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்து விட்டது. அதுவும் தமிழரசன் மண்ணிலிருந்து என்பதுதான் பெருத்த சோகம்.
இராமதாஸ் அவர்களே உங்களின் சுயநலத்திற்காக நீங்கள் ஊட்டி வளர்த்த சாதிவெறி இன்று உங்களை தாண்டி மதவெறி கும்பலிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அது உங்களையும் ஒரு நாள் பதம் பார்க்கும் அப்போது உங்களை சுற்றி ஒருவரும் இருக்கமாட்டார்கள்/ இருக்கவும் கூடாது.
என் கவலையெல்லாம் இதையெல்லாம் தாண்டி அப்பாவி வன்னிய மக்களை நினைத்துதான். இத்தனை காலமும் இராமதாஸ் அவர்களின் சுயநலத்திற்காக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த அந்த சமூகம், இனி இராமதாசை விட நூறு மடங்கு கொடிய பாசிசவாதிகளான இந்துத்துவ கும்பல்களிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடப்போகிறதோ தெரியவில்லை?
தொகுப்பு :
