
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 04
பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது?
நமது முதல் இடைவேளை பத்து நிமிடங்கள் நீடிக்கும். பின் 30 நிமிடங்கள், 10 நிமிடங்களுக்கு இன்னும் இரண்டு இடைவேளைகள் உண்டு. மொத்தம் 50 நிமிடங்கள்.
பாடங்களுக்கு இடையிலான இடைவேளை சம்பந்தமாக ஆசிரியரியலில் பிரச்சினை எதுவும் இருக்கிறதா? இல்லை, பிரச்சினை எதுவும் கிடையாது. பள்ளி நடைமுறையிலும் இப்படிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. பாடவேளைகளுக்கு இடையிலான இச்சிறு இடைவேளைகளை எப்படி ஒழுங்கமைப்பது என்பது பற்றி ஆசிரியர்கள் எந்த ஆசிரியர் ஆலோசனைக் கூட்டத்திலாவது தீவிரமாக விவாதித்ததாக நான் கேள்விப்பட்டதேயில்லை. இந்த இடைவேளைகளின் போது குழந்தைகள் அங்குமிங்கும் முரட்டுத்தனமாக ஓடிக் கை கால்களை உடைத்துக் கொள்ளாமலும், எதையும் பாழ்படுத்தாமலும், சண்டை போடாமலும், ஒருவர் காலை ஒருவர் வாரிவிடாமலும், சிறுவர்கள் சிறுமியரை கலாட்டா செய்யாமலும் பார்த்துக் கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்வது தவிர வேறெந்த பிரச்சினையும் இதில் இல்லாதது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பள்ளியின் சார்பாக ஒரு மேற்பார்வையாளர் கையில் சிவப்புப் பட்டையைக் கட்டிக் கொண்டு ஒழுங்கு முறையைக் கவனித்துக் கொள்கிறார். இவரைப் பார்த்ததும், குழந்தைகள் இடைவெளியில் கால்பந்தாட்டம் விளையாடுவதை நிறுத்திப் பேசாமல் செல்கின்றனர். பள்ளி இடைவெளிகளில் விதிமுறைகளை மீறுபவர்கள் வகுப்புப் பொறுப்பாசிரியரிடம், தலைமையாளரிடம் அல்லது பள்ளி இயக்குநரிடம் அனுப்பப்படுவார்கள். குழந்தைகளுக்கு இந்தப் பள்ளி விதிமுறைகள் தெரியும். எனவே, இவற்றை மீறி, பெரியவர்களின் கோபத்தையும் திட்டுக்களையும் பெற அவர்கள் துணிவதில்லை .
பள்ளியில் மிகச் சிறந்த ஒழுங்குமுறையும் கடுமையான கண்டிப்பும் நிலவுவதாகப் பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால் இவையனைத்தும் குழந்தை வளர்ப்பில் வெறும் சம்பிரதாயங்கள் மட்டுமே. சிவப்பு கைப்பட்டையை உடைய மேற்பார்வையாளர் மட்டும் இல்லாவிடில் குழந்தைகள் தம் சக்திகளை முற்றிலும் வேறுவிதமாக ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை மட்டும் இவர்கள் கூற மாட்டார்கள். என்றாலும்கூட கடும் கட்டுப்பாடு நிலவும் போதும், யாருக்கும் தெரியாமல் குறும்புகள் செய்யும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
”ஓ!” என்று கத்தியபடியே ஒரு சிறுமி மேற்பார்வையாளரிடம் ஓடி வருகிறாள். “நீனா பித்ரோவ்னா, குழாயிலிருந்து யாரோ என்னைச் சுட்டார்கள்” என்று தன் கன்னத்தில் விழுந்த, கசங்கிய காகிதத் துண்டைக் காட்டுகிறாள். கன்னம் வலிக்கிறது. மேற்பார்வையாளர் கவனமாக சுற்றும் முற்றும் பார்க்கிறார். சிறுவர் சிறுமியர் அடங்கிய குழு ஒன்று அவரைக் கடந்து செல்கிறது. அப்போது அதே போன்ற கசங்கிய காகிதத் துண்டு நீனா பித்ரோவ்னாவின் இடது கன்னத்தின் மீதே விழுகிறது. அவர் சிறுவர் சிறுமியரை நிறுத்திக் கேட்கிறார்: ”யார் இதைச் செய்தது? யார் எறிந்தது?” யாராவது பதில் சொல்வார்களா என்ன! இக்காரியத்தைச் செய்த குறும்புக்காரச் சிறுவனோ இன்று மட்டுமல்ல, நாளையும் கூட தன் ”வீரத்தைப்” பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வான்.
இடைவேளைகளின்போது பெரிய, சிறிய குழந்தைகள் அனைவருக்கும் வெறுமனே இடைவெளிகளில் நடப்பது மட்டும் போதாது, வேறு ஏதாவது செய்யவும் வேண்டும். குழந்தைகள் தமது உடல் பலத்தையும் மூளையையும் சுவாரசியமாகப் பயன்படுத்தி தம் அறிதல் ஆர்வங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவல்ல எதுவும் சுற்றிலும் இல்லாவிடில் என்ன செய்வது? ஏதோ முழு ஒழுங்கு நிலவுவதாக பாவனை செய்தபடியே குழந்தைகள் தம் குறும்புகளை இவ்வளவு திறமையாக மூடி மறைப்பதைக் கண்டு கோபம் கொள்ளாதீர்கள். உங்களை நோக்கி எறியப்பட்ட காகிதத் துண்டுகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் யார் இதைச் செய்தது என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.
குறும்புக்காரக் குழந்தைகள் உற்சாகமானவர்கள்; சோம்பலற்றவர்கள், ஒளிவுமறைவற்றவர்கள், இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. பின்னவர்கள் உற்சாகமாக ஓடியாட, தற்காப்பில் ஈடுபட குறும்புக்காரக் குழந்தைகள் உதவுகின்றனர்.
“உணர்வுப் பூர்வமான கட்டுப்பாடு” என்று சொல்ல நாம் விரும்புகின்றோம். இதற்கு என்ன பொருள்? குழந்தைகள், சமூகக் கோரிக்கைகளை முழுமையாகப் புரிந்து கொண்டு தம் சக்தியை அடக்க வேண்டுமா என்ன? அதுவும் அவர்கள் நமது அறிவுரைகளின் மூலம் இதை கிரகிக்கின்றனர் – எது நல்லது? எது தவறானது? குறும்புகள் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதைக் குழந்தைகள் நன்கு உணர்ந்து இதற்காக அஞ்ச வேண்டுமா? இத்தகைய உணர்வுப் “பாலங்கள்” உண்மையிலேயே குழந்தைகளைத் தவிர்க்க இயலாத தோல்விகளிலிருந்து காப்பாற்றுகின்றன. கண்டிப்பான தடைகள் அவசியம் தேவைப்படும் சந்தர்ப்பங்களும் நிச்சயமாக இருக்கின்றன. தேவையானது உணர்வை விட வலிமையானதாக இருந்தால், அமைதியாக இருக்கக் குழந்தையால் முடியாவிடில், குழந்தைக்கு இதில் விருப்பம் இல்லாவிடில், குறும்பு செய்யாமல் இருக்க முடியாவிடில் என்ன செய்வது?
இப்படிப்பட்ட அமைதியான, எல்லாவற்றிலும் சாந்தமான, என் கண்களைப் பார்த்ததும் எதை செய்யக் கூடாதோ அதைச் செய்ய அஞ்சும் குழந்தைகளுடன் கலந்து பழக எனக்கு விருப்பமில்லை. குழந்தைகளின் குறும்புகளும் சேட்டை செய்யும் குழந்தைகளும் இல்லாமல் உண்மையான ஆசிரியரியலை உருவாக்க முடியாது. இவை ஆசிரியரியலின் சிந்தனையை முன்னுக்குத் தள்ளுகின்றன, ஆசிரியர்கள் ஆக்கப் பூர்வமாக சிந்தித்து, புதிய அம்சங்களையும் ஆசிரியரியலின் துணிவையும் வெளிப்படுத்துமாறு செய்கின்றன. சுய உணர்வுள்ள, முதிர்ச்சியடைந்த குழந்தைகளுடன் கலந்து பழகுவது எவ்வளவு சலிப்பைத் தரும் தெரியுமா? நான் முதலில் இப்படிப்பட்ட குழந்தைகளை குறும்பு செய்யுமாறு, அங்குமிங்கும் ஓடித் திரியுமாறு தூண்டி விட்டுப் பின்னர் அவர்களைப் பயிற்றுவிக்கும் வழிகளைத் தேடுவேன்.
படிக்க:
♦ சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்
♦ பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா ?
குழந்தைகளின் குறும்புகளுக்கு நாம் ஏன் எதிர்ப்பாய் இருக்கின்றோம்? பெரியவர்கள் ஏன் இவற்றை ஏதோ குற்றங்களாக, உணர்வுப்பூர்வமான கட்டுப்பாடு மீறப்பட்டதாகப் பார்க்கின்றனர்? குறும்பு என்றால் என்ன, இந்தக் குறும்புக்காரர்கள் யார் என்று நமக்கு நன்றாகத் தெரியாததுதான் இதற்குக் காரணமென எனக்குத் தோன்றுகிறது. குறும்புகள் மற்றும் குறும்புக்காரர்களின் மனநிலை சம்பந்தமான நூல்களை நான் எவ்வளவு விருப்பத்தோடு படிப்பேன் தெரியுமா! ஆனால் இப்படிப்பட்ட நூல்கள் இல்லையே!
குழந்தைகளின் குறும்பு நமது அமைதியைக் குலைக்கிறது, குழந்தை வளர்ப்பில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, ஆசிரியரியல் வழிகளால் இவற்றைப் பல நேரங்களில் தீர்க்க முடியாது, நாம் தடைகளை, கட்டுப்பாடுகளை நாடுகின்றோம்.
குறும்புக்காரக் குழந்தைகள் உற்சாகமானவர்கள்; சோம்பலற்றவர்கள், ஒளிவுமறைவற்றவர்கள், இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. பின்னவர்கள் உற்சாகமாக ஓடியாட, தற்காப்பில் ஈடுபட குறும்புக்காரக் குழந்தைகள் உதவுகின்றனர்.
குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக் கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்ந்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.
குறும்புக்காரக் குழந்தைகளிடம் சுய வளர்ச்சி, சுய இயக்க உணர்வுகள் அதிகமாக இருக்கும்; தம் தனிப்பட்ட திறமைகளின் வளர்ச்சி பற்றிய ஆசிரியர்களின் தவறான கணிப்புகளை இவர்கள் தம்முள்ளேயே ஈடு கட்டிக் கொள்கின்றனர்.
குறும்புக்காரக் குழந்தைகள் நகைச்சுவையுணர்வு மிக்கவர்கள், விளையாட்டுத்தனமற்றதில் இவர்கள் சிரிப்பைப் பார்ப்பார்கள், கவனக் குறைவானவர்களை அசாதாரணமான ஒரு நிலைக்குத் தள்ளி வேடிக்கை பார்ப்பார்கள்; இவர்கள் தமக்கு மட்டுமின்றி, தம்மைச் சுற்றியுள்ளவர்களின் மத்தியில் நகைச்சுவையுணர்வு மிக்கவர்களுக்கும் நல்ல மன நிலையையும் சிரிப்பையும் தருவார்கள்.
குறும்புக்காரக் குழந்தைகள் நன்கு கலந்து பழகக் கூடியவர்கள், ஏனெனில் தம் குறும்புகளில் யாரையெல்லாம் ஈடுபடுத்த முடியுமோ அவர்களுடன் கலந்து பழகும் போது தான் குறும்புகள் பிறக்கின்றன.
குறும்புக்காரக் குழந்தைகள் அறிவுக் கூர்மை உடையவர்கள், நுண்ணறிவு வாய்ந்தவர்கள், எந்த ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்திலும் இவர்கள் தம் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் நிலவரத்தையும் உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யும் அவசியத்திற்குப் பெரியவர்களை ஆளாக்குவார்கள்.
குறும்புக்காரக் குழந்தைகள் செயல் முனைப்பான கற்பனையாளர்கள், இவர்கள் சுற்றியுள்ளவற்றை சுயமாக அறியவும் மாற்றியமைக்கவும் விழைகின்றனர்.
குழந்தைகளின் குறும்புகள்-வாழ்க்கையின் மீது இவர்களுக்குள்ள நேயத்தின் வெளிப்பாடு, மகிழ்ச்சியின் பாலுள்ள நாட்டம், இவர்களுடைய மூளைத் திறமைகள் மற்றும் உடல் பலத்தின் இணைப்பு.
குறும்புக்காரக் குழந்தைகள் உண்மையான குழந்தைகள், இவர்கள் ஆசிரியர்களின் சிந்தனை, ஆசிரியரியலின் ஆராய்ச்சிப் பொருள்.
குறும்புக்காரர்களைத் தண்டிக்கலாம், ஆனால் ஊக்குவிக்க வேண்டியதும் அவசியம்.
எனவே தான் குறும்புக்காரர்களை நான் விரும்புகிறேன். இவர்கள் என்னுடைய ஆசிரியர் திறமையை இடையறாது வளர்க்கின்றனர், சுய வளர்ச்சிக்கு வழிகோலுகின்றனர்.
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!