பெங்களூரிலிருந்து – விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பகுதிக்கு குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் போன்ற போதை வஸ்துக்கள் தொடர்ந்து கடத்தி வரப்படுகிறது.
இவை அனைத்தும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள். எனினும் இவை பெங்களூரிலிருந்து தினம்தோறும் சாதாரணமாக அரசு பேருந்திலேயே கடத்திவரப்படுகின்றன. இப்படி கடத்தி வரப்படுவது குறித்து பலமுறை போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பவ இடத்திற்குப் போலீசு வருவதும் இல்லை, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவுமில்லை.

ஆகையால் இரு மாதங்களுக்கு முன் நேரடியாக குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் போன்றவற்றைக் கொண்டுவந்த நபரை, மூட்டையுடன் பிடித்து வைத்து போலீசு நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் ‘காவலர்கள்’ யாரும் வரவில்லை.
பிறகு அந்த போதைப் பொருள் ஆசாமி, ஒரு ஆட்டோவை வரவைத்து ஏறிச் சென்றுவிட்டார். அவ்வாறு அவர் தப்பிச் சென்றவுடன், எந்த ஆட்டோவில் எடுத்து செல்கிறார்கள் என்பதையும், ஆட்டோ எண்ணுடன் போலீசு நிலையத்தில் தகவல் கொடுத்தும் ‘காவலர்கள்’ அந்த நபரைப் பிடிக்கவில்லை..
படிக்க:
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !
♦ மாணவர்களுக்கு உடனே லேப்டாப் வழங்கு ! விழுப்புரம் பு.மா.இ.மு கலெக்டர் அலுவலக முற்றுகை !
இந்த நிலையில் கடந்த ஞாயிறு (30.06.2019) அன்று இரண்டு மூட்டை குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் ஆகியவை பெங்களுரு பேருந்தில் கடத்திவரப்பட்டுள்ளது.
பேருந்து நிலையம் சென்ற மக்கள் அதிகாரம் தோழரக்ள், அம்மூட்டைகளை பேருந்து நிலையத்திலேயே பிரித்து, மக்கள் மத்தியில் கிழே கொட்டி அம்பலப்படுத்திவிட்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பிறகு இரண்டு போலிசார் அங்கு சென்று இரண்டு மூட்டை குட்கா, பான்மசாலா, போதை சாக்லேட் ஆகியவற்றைக் கைப்பற்றினர். பேருந்தில் யாருக்காக அந்த போதை வஸ்துக்கள் அனுப்பி வைக்கப்பட்டதோ, அந்த நபரைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

இதுபோன்று தொடர்ந்து கடத்திவரும் குட்கா, பான்மசாலா ,போதை சாக்லேட் போன்ற போதை பொருட்களால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், போதை பழக்கத்திற்கு தள்ளபடுகிறார்கள். இதனால் இந்த தலைமுறையே சீரழிக்கப்படுகிறது ஆகவே இந்த போதைபொருள் கடத்திவருவதை தடுக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதிகார வர்க்கம் இதைத் தடுக்கிறதோ இல்லையோ, அதிகாரவர்க்கத்துக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு இருக்கும் இரகசியக் கூட்டை மக்கள் அதிகாரம், மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தும்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.