Tuesday, April 15, 2025
முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

காஷ்மீர் : பத்திரிகையாளர்களை மிரட்டும் போலீசு !

காஷ்மீரில் கிரேட்டர் காஷ்மீர் ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த 26 வயது பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக். கடந்த 14-ம் தேதி நள்ளிரவு போலீசால் கைது செய்யப்பட்டார்.

-

காஷ்மீரில் பத்திரிகையாளர் ஒருவரை கடந்த 14-ம் தேதி கைது செய்த போலீசு, ஊடகங்களின் அழுத்தம் காரணமாக அவரை மறுநாள் இரவு விடுவித்தது.

காஷ்மீரில் கிரேட்டர் காஷ்மீர் ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த 26 வயது பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் என்னும் நகரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, கடந்த 14-ம் தேதி நள்ளிரவு போலீசால் கைது செய்யப்பட்டார்.

“ஆகஸ்ட் 14 அன்று இரவு 11.30 மணிக்கு படையினர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். இர்ஃபான் வெளியே வந்துபோது தங்களுடன் வரும்படி அவரை அழைத்தனர். பின்னர் அவர் நேரடியாக ட்ரால் நகர போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.”  என்று கூறுகிறார் இர்ஃபானின் தந்தை முகமது அமின் மாலிக். பின் தொடர்ந்து போலீசு நிலையம் சென்ற இர்ஃபானின் குடும்பத்தவர்களுக்கு இர்ஃபானை சந்திக்க அன்று இரவு அனுமதி மறுத்திருக்கிறது போலீசு.

இர்ஃபானின் குடும்பத்தினர் மறுநாள் காலையில் மீண்டும் போலீசு நிலையத்திற்கு சென்றனர். அன்று காலையில் இர்ஃபானைச் சந்திக்கையிலும் கூட அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் விசயம் குறித்து அவருக்குத் தெரியாது என்று கூறுகிறார், அவரது தாய் ஹசீனா.

ஒட்டுமொத்த காஷ்மீரிலும் தகவல் தொடர்பு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் சூழலில், இர்ஃபானின் குடும்பத்தினர் ஸ்ரீநகருக்குச் சென்று பிற ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இர்ஃபான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகம் மூடப்பட்டிருந்ததால், அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள ஊடக மையத்திற்குச் சென்று அங்கிருக்கும் ஊடகவியலாளர்களிடம் இச்சம்பவம் குறித்துத் தெரிவித்தனர்.

அதன் பின்னரே, இந்த விவகாரம் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்குத் தெரிய வந்தது.

படிக்க:
காஷ்மீர் : சங்கிகளின் புரட்டும் வல்லபாய் பட்டேலின் நிலைப்பாடும் !
♦ ” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !

வியாழன் அன்று காலையில் காஷ்மீர் எஸ்.பி தஹிர் சலீமிடம் முறையிட்டனர் இர்ஃபானின் பெற்றோர்கள். அதற்கு அவர், இர்ஃபான் ஏதாவது தவறான செய்திகளை வெளியிட்டாரா என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இர்ஃபான் பணியாற்றும் கிரேட்டர் காஷ்மீர் பத்திரிகை முந்தைய சில நாட்களாக மூடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனாலும் இர்ஃபானைக் கைது செய்ததற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை எஸ்.பி சலீமிடம் விவரங்களைக் கேட்டிருக்கிறது. அதற்கு இர்ஃபானின் குடும்பத்தினர் தன்னைப் பார்த்து முறையிட்டதை ஆமோதித்த எஸ்.பி, அவ்விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஊடகங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து கடந்த வியாழன் அன்று இரவு இர்ஃபானை விடுவித்தது காஷ்மீர் போலீசு. ஆனாலும் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் தரவில்லை.

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் பெற்றோர்கள், பிற பத்திரிகைகளைக் கண்டு தகவல் சொன்னதால் இர்ஃபான் விடுவிக்கப்பட்டிருக்கிறார். காஷ்மீரில் இன்னும் எத்தனை பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார்களோ ! அது அந்த மோடிக்குத்தான் வெளிச்சம் !


நந்தன்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்