திருவள்ளுவர் பல்கலைகழகம் திடீரென அறிவித்த தேர்வு கட்டண உயர்வை கண்டித்து பல்கலை கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் நாளாக அவர்களது போராட்டத்தை நேற்று நடத்தினர். அதன் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது நிர்வாகம்.
அதே போல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் பு.மா.இ.மு ஒருங்கிணைப்பில் கட்டண உயர்வைக் கண்டித்து போராடுவது என முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் 19.09.2019 அன்று கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தபட்டது. கல்லூரி, நிர்வாக ரீதியாக எந்த பேச்சுவார்த்தைக்கும் வராததால் மாணவர்கள் அவர்களது கோரிக்கையை மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் திருவெண்ணெய் நல்லூர் – திருகோவிலூர் சாலையில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசு ஆய்வாளர் ஜெயலஷ்மி மாணவர்களின் கோரிக்கை என்ன என்பதை கேட்காமல், போராடுவதற்காக அங்கு கூடிய மாணவர்களை மிரட்ட ஆரம்பித்தார். “அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும்..” என்று கூறினார். முன்னணியாக இருக்கக் கூடிய மாணவர்களை தனித்தனியாக புகைப்படம் எடுத்து “உங்கள் வாழ்க்கை வீணாகி விடும்.. உங்கள் மீது வழக்கு போடுவேன்..” என்று மிரட்டுவதன் மூலம் போலீஸ் தனது சதித்தனத்தை அரங்கேற்றத் தொடங்கியது.
போலீசின் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாமல், போர்க்குணத்தோடு மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் வெறுப்பான அதிரடிப் படையை சேர்ந்த புஷ்பராஜ் என்ற காவலர், போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் விலங்கியல் மூன்றாம் ஆண்டு மாணவர் கவி நிலவனின் சட்டையை பிடித்து கிழித்த புஷ்பராஜ், ஒரு ரவுடியாகவே மாறி, மாணவர் கவி நிலவனைக் கீழே தள்ளி தாக்க ஆரம்பித்தார்.

இதனை பார்த்த சக மாணவர்கள் ஆத்திரம் கொண்டு அந்தக் காவலரைக் கண்டித்து முழக்கம் எழுப்ப ஆரம்பித்தனர். “முதலில் மாணவன் மீது கை வைத்த காவலர் மன்னிப்பு கேட்க வேண்டும்…” அதன் பிறகுதான் களைந்து செல்வோம் என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
என்ன செய்வதென தெரியாமல் திக்குமுக்காடிய போலீசு அதன் பிறகு கல்லூரி முதல்வர் சுரேஷ் அவர்களை வரவழைத்து மாணவர்கள் மத்தியில் பேச வைத்தனர். கல்லூரி முதல்வர், “வரும் 20.09.2019 வெள்ளிக்கிழமை மாலை 5:00 வரைக்கும் கால அவகாசம் கொடுங்கள்.. பல்கலைகழக நிர்வாகத்திடம் பேசி, கட்டணக் குறைப்பு குறித்து ஒரு தீர்வை சொல்கிறேன்…” என கூறினார்.
கல்லூரி முதல்வரின் வேண்டுகோளைத் தொடர்ந்து “கட்டணக் குறைப்பு செய்யவில்லை என்றால், தொடர் போராட்டத்தை நடத்துவோம்.” என்று மாணவர்கள் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டமானது தற்காலிகமாக முடித்துக் கொள்ளப்பட்டது.
மேலும் போராடும் மாணவர்களை சட்ட விரோதமாகத் தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பு.மா.இ.மு சார்பில் அரசுக்கும் போலீசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு : 91593 51158.
படிக்க :
♦ 5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி ! கரூர் புமாஇமு ஆர்ப்பாட்டம்
♦ பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் போராட்டம் !
***
திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு ! விருத்தாசலம் கல்லூரி மாணவர்களின் மூன்றாம் நாள் போராட்டம் !
விருத்தாச்சலம் அரசுக் கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக கட்டண உயர்வை கண்டித்து, அதனை திரும்பப் பெறக் கோரி போராடி வருகின்றனர். இப்போராட்டத்தை மூன்றாம் நாளாக நேற்றும் (19.09.2019) தொடர்ந்தனர்.
அப்போது மாணவர் ஒருவர் “ஏற்கெனவே ஒரு பேப்பருக்கு முப்பது ரூபாய் இருந்த கட்டணத்தை 68 ரூபாய் என மாற்றினார்கள். இப்போது மீண்டும் 100 ரூபயாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர்.
இது போன்ற நடவடிக்கையை இனியும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனிமதித்தால் நாம் அரசு கல்லூரிகளில் படிக்க முடியாது. படிப்படியாக தனியார் கல்லூரிகளைப் போன்று மாறிவிடும்.. அதனால் இப்போதே இக்கட்டண உயர்வை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.” என பேசினார்.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் கட்டண உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர். போராட்டமானது காலை, மாலை என இரு பாடவேளைகளிலும் நடத்தப்பட்டது. மேலும் கட்டண உயர்வை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு: 97888 08110