Saturday, April 19, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுஅண்ணா பல்கலை பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு | பு.மா.இ.மு. கண்டனம்

அண்ணா பல்கலை பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு | பு.மா.இ.மு. கண்டனம்

இன்று பகவத்கீதையையும், வேதத்தையும் பாடத்திட்டமாக வைப்பவர்கள், நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை வேலைக்கும் அமர்த்துவார்கள். அனுமதிக்கப் போகிறோமா?

-

அண்ணா பல்கலைக் கழகத்தில் தத்துவப்படிப்பு என்ற பெயரில் பகவத்கீதை திணிப்பு ! கிளர்ந்தெழட்டும் மாணவ சமூகம் !

டந்த 2018-ம் ஆண்டு ஏ.அய்.சி.டி.இ. எனும் அகில இந்திய தொழிற்நுட்பக் கல்விக் கழகம் நாடு முழுவதுமுள்ள பொறியியல் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும், பொறியியல் படிப்புகளுடன் Humanities, social science, management ஆகியவற்றில் 32 பாடங்களை பட்டியலிட்டு, அதில் 8 செமஸ்டர்களில் 4, 5 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் குறிப்பாக, தத்துவவியல் படிப்பில் பகவத்கீதை, வேதம், உபனிடதம் போன்றவற்றை ஆடிட்டிங் பாடங்களாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதனடிப்படையில் இக்கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள CEG, ACT, SAP மற்றும் குரோம்பேட்டையில் உள்ள MIT ஆகிய 4 கல்லூரிகளில் பி.டெக், எம்.டெக் படிப்புகளில் பகவத்கீதையை முழுவதுமாக பாடத்திட்டமாக சேர்த்துள்ளனர்.

கீழடி தொல்லியல் ஆய்வுகள் தமிழ் மொழிக்கும், தமிழர் நாகரிகத்திற்கும் வயது கி.மு 2600 ஆண்டுகள் என நிரூபித்துள்ளது. இதைக்கண்டு அரண்டுபோயுள்ள ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பல் மோடி அரசு மூலம் இந்துத்துவா கருத்துக்களை புகுத்துவதை தீவிரமாக்கி வருகிறது. இதனை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி எதிர்ப்பதோடு, அந்த பாடத்திட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

பொறியியல் கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் பகவத்கீதைக்கும் என்ன சம்மந்தம்? பகவத்கீதை அறிவியலுக்குப் புறம்பான புராண கட்டுக்கதை. கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு சொன்னதாக கூறும் கீதா உபதேசம் என்பது வன்முறையைத் தூண்டும் கொலைத் தத்துவம். ’’நான்கு வருணங்களை நானே படைத்தேன்’’ என்று சாதி வருணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பன சர்வாதிகாரம். இதை ஒரு பாடமாக படித்தால் மாணவர்கள் உருப்பட முடியுமா?

தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள 4-ம் தொழிற்நுட்பப் புரட்சிக்கு ஏற்ப இந்திய பொறியியல் கல்லூரிகளும், மாணவர்களும் தரமாக இல்லை என்று கார்ப்பரேட் முதலாளிகள் கூக்குரலிடுகிறார்கள். அதற்கு தலைவணங்கி மோடி அரசு தரத்தை உத்தரவாதப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அகில இந்திய அளவில் நீட் போன்ற கடுமையான நுழைவுத்தேர்வுகள், படிப்பை முடித்தபின் எக்ஸிட் எனும் தகுதி தேர்வுகள் போன்றவற்றை புகுத்தி, ஏ.அய்.சி.டி.இ, யூ,ஜி.சி போன்ற உயர்க்கல்வி அமைப்புகளை கலைக்கவும், புதிதாக உயர்க்கல்வி ஆணையத்தையும் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது..

இன்னொரு பக்கம் அறிவியலுக்கு புறம்பான வேதத்தையும், புராண கட்டுக் கதைகளையும் திணித்து வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கும், காவிகளுக்கும் நோக்கம் ஒன்றுதான் மாணவர்கள் அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவுடன் சிந்திக்கக் கூடாது. கேள்வி கேட்காமல் சொல்வதை செய்யும் அடிமைகளை உருவாக்கவே முனைகிறார்கள்.

ஏ.அய்.சி.டி.இ.-யின் சுற்றறிக்கையை மேலோட்டமாக பார்க்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய 2014-ம் ஆண்டு முதல் கல்வி, கலாச்சார துறையில் சமஸ்கிருதத்தையும், பார்ப்பனிய பண்பாட்டையும் புகுத்தவும், உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றவும் தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது.

2015-ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உத்தரவின் பேரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தலைமையில் ஒரு குழு அமைத்து சமஸ்கிருதத்தையும், வேதங்களையும் வளர்ப்பதற்கும், அதிலுள்ள அறிவியல் தொழிற்நுட்பம் சார்ந்த கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கும் 10 ஆண்டுகள் திட்டம் ஒன்றை தயாரித்தது. அதேபோல், 2016-ம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்துக்கொடுத்த டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் குழு பரிந்துரையில் இந்த விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழ துணைவேந்தர் சூரப்பா.

இப்படிப்பட்ட நீண்டகால திட்டத்தின் அடிப்படையில்தான் மத்திய மோடி அரசு ஐ.ஐ.டி, பொறியியல் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் சமஸ்கிருதத்தையும், வேத, புராணங்களையும் புகுத்தி வருகிறது. இவைகளை நிறைவேற்றத்தான் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா. அவர் வந்தது முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார்மய நடவடிக்கைகளும், காவிமய நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. இன்று பகவத் கீதையையும், வேதத்தையும் பாடத்திட்டமாக வைப்பவர்கள், நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை வேலைக்கும் அமர்த்துவார்கள். இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் நாளை மருத்துவம், கலை / அறிவியல் உள்ளிட்டவைகளிலும் இதையே அமல்படுத்துவார்கள்.

ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழகம் இதனை ஒரு போதும் ஏற்கக்கூடாது. தமிழக மாணவர் அமைப்புகளும், ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களுடன் இணைந்து பகவத்கீதை பாடத்திணிப்பை முறியடிக்க முன்வர வேண்டும் என கோருகிறோம்.

.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.


இதையும் பாருங்க :

கச்சம் வரிஞ்சிகட்டி…

நாமக்கட்டி ஆளப்போகுது … உசாரு …!

நெருங்குவது காவி இருளடா…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க