Thursday, April 17, 2025
முகப்புசெய்திஇந்தியாதிரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !

திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !

எவரும் தங்களை எதிர்க்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என பாஜக எதேச்சதிகாரிகள் கருதுகிறார்கள். எதிர்ப்போரை முடக்கி மற்றவர்களுக்கு பயத்தை தரவிரும்புகிறது காவி கும்பல்

-

பாஜக ஆட்சியாளர்களுக்கு நல்லது செய்தாலும் பிடிப்பதில்லை; கருத்து சொன்னாலும் பிடிப்பதில்லை. ‘ஜனநாயக’ப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் கொஞ்சம்கூட அதை மதிப்பதில்லை. மக்களுக்கு உதவிய மருத்துவரை, ஆசிரியரை பணிநீக்கி தன்னுடைய எதேச்சதிகாரத்தை காட்டினார் ரவுடி சாமியார் ஆதித்யநாத்.

அதே பாணியில், திரிபுராவின் ‘கருத்து’ புகழ் பாஜக முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப், தன்னைப் பற்றிய விமர்சன பதிவுக்காக மருத்துவர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்திருக்கிறார்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகராகவும் உள்ள குமார் தேவ், மகாபாரத காலத்திலேயே இணைய பயன்பாடு இருந்தது போன்ற  சங்க பரிவாரங்களின் புரட்டை வரலாறு – அறிவியல் என்ற பெயரில் பேசுவதுண்டு. இதுகுறித்து கடந்த ஆண்டு தனது முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார் அகர்தாலா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் கவுசிக் சக்ரவர்த்தி.

திரிபுராவின் ‘கருத்து’ புகழ் பாஜக முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப்.

‘அன்புள்ள பிப்லாப்தா, முட்டாள்தனமாக பேசுவதற்கு எவரும் நோபல் பரிசு தருவதில்லை! நீங்கள் ஒரு மதிப்பிற்குரிய இடத்தில் இருக்கிறீர்கள். மற்ற இந்திய பகுதியில் வசிப்பவர்களுக்கு நகைப்புக்குரியவராக மாறிவிடாதீர்கள். இந்த அரசாங்கம் ஏராளமான போராட்டத்துக்குப் பின் வந்துள்ளது. திரிபுரா மக்கள் ஏராளமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எங்கள் அனைவரையும் ஏமாற்றி விடாதீர்கள்’ என மருத்துவர் கவுசிக் அதில் தெரிவித்திருந்தார்.

மக்களவை தேர்தலுக்கு முன்பு, கடந்த பிப்ரவரியில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.  தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லாமல் சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அதை தான் எதிர்ப்பதாகவும் இந்த விசயத்தில் மாநில காங்கிரஸ் தலைவருடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட ‘ஜனநாயக’த்தின் முறையிலான எதிர்ப்புகள், விமர்சனங்களைக்கூட சகித்துக்கொள்ள முடியாத, ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதேச்சதிகாரிகளாக மாறும் பாஜக அரசாங்கம் மருத்துவருக்கு நோட்டீசு அனுப்பியிருக்கிறது.

படிக்க:
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?
கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !

ஆகஸ்டு 2-ம் தேதி அனுப்பப்பட்ட அந்த நோட்டீசில் ‘மரியாதைக்குரிய முதலமைச்சரை தரக்குறைவாக முகநூலில் எழுதியிருப்பது அரசு ஊழியருக்கு தகுதியில்லாதது’ எனவும் ‘மாநிலத்திலுள்ள மதப்பிரிவினருக்கிடையே மோதல் உருவாக்கும் வகையில் குடிமக்கள் மசோதா குறித்து ஆட்சேபணைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்’ எனவும் அரசாங்க அதிகாரியாக உள்ளவர் அரசியலமைப்பின் தலைவராக மாநில நிர்வாகத்தில் உள்ள ஒருவர் குறித்து கருத்து சொல்வது சிவில் சர்வீஸ் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியருக்கான தகுதியில்லாததாகும்’ எனவும் கூறுகிறது.

இதற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் அளிக்கும்படியும் அதில் கேட்கப்பட்டிருந்தது.  இதற்கு விளக்கம் அளித்த மருத்துவர், ‘ஒரு அரசு ஊழியராக இந்தக் கருத்துக்களை எழுதவில்லை. சுதந்திரமான நாட்டில் சுதந்திர குடிமகனாக இந்தக் கருத்துக்களை கூறினேன். மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்’ என தெரிவித்திருந்தார். இனி சமூக ஊடகங்களில் கருத்துக்களை எழுதும்போது கவனமாக இருப்பேன் என்றும் அவர் விளக்கமளித்திருந்தார்.

பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய சிலரை கைது செய்ததற்காக முதலமைச்சரை பாராட்டியும்கூட மருத்துவர் கவுசிக் சக்ரவர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

மருத்துவர் கவுசிக் சக்ரவர்த்தி.

ஆனால், இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் அக்டோபர் 21-ம் தேதி மருத்துவரை பணிநீக்கம் செய்துள்ளது பாஜக அரசாங்கம்.  அதோடு, முன் அனுமதியில்லாமல் அகர்தாலாவிலிருந்து வெளியேறக்கூடாது எனவும் கூறியுள்ளது.

மாநிலத்துக்கு வெளியே சிகிச்சை தேவைப்படும் நிலையில் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கச் செல்வதற்குக்கூட அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறார் ஒரு சுகாதாரத்துறை அதிகாரி.

மருத்துவரின் நீக்கத்தை எதிர்த்து இரண்டு மருத்துவர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நிபந்தனையில்லாமல் அவரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எவரும் தங்களை எதிர்க்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என பாஜக எதேச்சதிகாரிகள் கருதுகிறார்கள். மனிதாபிமானமற்ற வகையில் எதிர்ப்போரை முடக்குவதன் மூலம், மற்றவர்களுக்கு பயத்தை தரவிரும்புகிறது இந்தக் காவி கும்பல்.


அனிதா
நன்றி : தி வயர்