இரண்டு மாதங்களாக சம்பளம் தரப்படாததை கண்டித்து உத்தரகாண்ட் போக்குவரத்து பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான எங்களுடைய சம்பளம் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, கைகளில் கருப்புப் பட்டை அணியும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தோம். வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை; கருப்புப் பட்டை அணிந்து எங்களுடைய எதிர்ப்பை காட்ட உள்ளோம்” என இந்தப் போராட்டம் குறித்து சங்கத்தின் தலைவர் கமல் பப்னாய் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 7,000 போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் நைனிதால் உயர்நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகும்கூட மாநிலத்தை ஆளும் பாஜக அரசாங்கம் சம்பளம் வழங்க எந்த நடவடிக்கையையும் வழங்கவில்லை.
“தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதும், அது நடக்கவில்லை. நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம். ஜூலை மற்றும் ஆகஸ்டு மாத சம்பளத்தையே உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால்தான் பெற்றோம்” என்கிறார் கமல் பப்னாய்.
படிக்க:
♦ டிக்கெட் எடுக்காதே – ஜப்பான் பேருந்து தொழிலாளர் போராட்டம் !
♦ தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் ஏன் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், உத்தரகாண்ட் போக்குவரத்து கழகம், ஒரு சிலருக்குத்தான் சம்பளம் வழங்கவில்லை என்கிறது.
“பணியாளர்களுக்கு ரூ. 68 கோடி தரவேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. ஓட்டுநர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கு சம்பளம் மட்டுமே அவர்களுடைய வருமானமாக உள்ளபோது, இரண்டு மாத சம்பளம் இல்லாமல் அவர்களால் எப்படி குடும்பத்தை நடத்த முடியும்?” என சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மட்டுமல்லாது, தெலுங்கானாவிலும் அரசு போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலும் போக்குவரத்து பணியாளர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடித்தது மாநில அரசாங்கம். நாடு முழுவதிலும் பொது போக்குவரத்து நிறுவனங்களை பலவீனமாக்கி தனியார்மயப்படுத்தும் முயற்சிகள் நடந்துவருவதையே இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன.
கலைமதி
நன்றி : தி வயர்.