ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சங்கம் விடுதி கட்டண உயர்வு மற்றும் மாணவர்களின் உயர்கல்வியைப் பாதிக்கும் இதர பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பகுதியாக இன்று (18.011.2019) பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லவிருக்கின்றனர். இந்தப் பேரணியில் தங்களையும், இணைத்துக் கொள்ளுமாறு பிற பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
“நாடு முழுவதும் கல்விக் கட்டண உயர்வு அதிகரித்து வரும் இந்த சூழலில், அனைவரையும் உள்ளடக்கிய கல்வியைக் காக்க மாணவர்கள் முன் வரிசையில் களமிரங்கியிருக்கிறோம். டில்லியைச் சேர்ந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் பாராளுமன்றத்தை நோக்கிய எங்களது நடை பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என தங்களது வேண்டுகோளில் மாணவர் சங்கத்தினர் கேட்டுள்ளனர்.
டில்லிக்கு வெளியே நாட்டின் பிற பகுதியில் உள்ள மாணவர் அமைப்பினரையும் அவர்களது பகுதிகளில் நவம்பர் 18 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். கல்வியை ஒரு உரிமையாகப் பாதுகாக்கவும், கல்வியை சரக்காக மாற்றும் முயற்சிகளை எதிர்ப்பதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் இன்று காலை முதல் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் சூழலில், இந்தப் பேரணியைத் தடுத்து நிறுத்த பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசுப் படை குவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு முன்னதாக நவம்பர் 17 அன்று மாணவர் கூட்டம் வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ள முன்னாள், இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனை அறிந்த மாணவர்களுக்காக பல்கலைக்கழக டீன், அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் வளாகத்திற்குள் நடைபெறும் மாணவர் கூட்டத்தை தவிர்க்குமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஆனாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான மொகம்மது சலிம் மற்றும் கே.கே. ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். “உங்கள் கோபம் நியாயமானது. பொதுக் கல்வி நிறுவனங்கள் நாட்டில் இல்லையெனில், நம்மைப் போன்றவர்கள் படிக்க வந்திருக்கவே முடியாது” என்றார் முகம்மது சலிம். கே.கே. ராகேஷ் பேசுகையில், “வளாகத்திற்குள் வருகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.” என்றார் .
இப்படி ஜனநாயகப் பூர்வமாக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு பிறர் வருவதைத் தடுக்க எத்தனித்த நிர்வாகமும், அரசும் இன்று நடக்கவிருக்கும் பேரணியை மட்டும் சும்மாவிட்டுவிடுமா என்ன ?
படிக்க :
♦ விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !
♦ மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
இன்று காலை 10:30 மணியளவில் சுமார் 800-க்கும் அதிகமான போலிசுப் படையினர் பல்கலைக் கழகத்துக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக வாயிலில் பல்வேறு தடுப்பரண்களைப் போட்டு முடக்கியது போலீசு. அதனையும் தாண்டி மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
நாடாளுமன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. மாணவர்களை முடக்க தண்ணீர் பீரங்கிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் மிக அதிகமான தடுப்பரண்களைப் போட்டு வைத்திருந்தது போலீசு.
இரண்டாம் கட்ட தடுப்பரண்களையும் தாண்டி தற்போது மாணவர்கள் முன்னேறிச் சென்றுள்ளனர். மாணவர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது போலீசு.
கல்வியைத் தனியார்மயமாக்கும் காவி பாஜக அரசின் சதியை முறியடிப்போம். கல்வி நமது பிறப்புரிமை என்பதை உரக்கச் சொல்வோம் ! ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம் !
நந்தன்
செய்தி ஆதாரம் :
♦ JNU protests LIVE updates: Students break second set of barriers to march towards Parliament
♦ JNUSU appeals to students of other universities to join its protest march to Parliament