இந்தியாவில் புரட்சி நடந்தால், அதை ஒடுக்கக் காத்திருக்கும் இராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்…
இருபது வருடங்களுக்கு முன்பு, நான் பெல்ஜிய கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சி ஒழுங்கு படுத்திய கோடை கால முகாமில் பங்குபற்றி இருந்தேன். அப்போது எமக்கு வகுப்பெடுத்த கட்சியின் பிரதான உறுப்பினர் ஒருவர் பின்வரும் தகவலை தெரிவித்தார்:
“பெல்ஜியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பெரும்பாலும் ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளை அண்டியே உள்ளன. இது ஒன்றும் தற்செயல் அல்ல. நாளை இங்கு ஒரு புரட்சி நடந்தால் அதை ஒடுக்குவதற்கு இராணுவம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது.
எதிரி நாட்டு படையெடுப்பை எதிர்நோக்குவதை விட, உள்நாட்டில் ஏற்படப் போகும் பாட்டாளிவர்க்க புரட்சியை நசுக்குவதற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவம் முக்கியமாகத் தேவைப்படுகிறது. உள்நாட்டில் புரட்சி நடப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லையென்ற காலங்களில் தான் எதிரி நாடுகளுடன் யுத்தம் செய்வார்கள்…”
படிக்க :
♦ CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !
♦ சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்
உண்மையில் இந்தத் தகவல் அன்று எனக்கு மட்டுமல்லாது, பல பெல்ஜிய தோழர்களுக்கும் நம்புவதற்கு கஷ்டமாக இருந்தது. எமது சந்தேகத்தை நேரடியாகக் கேட்டோம். அதற்கு அவர் பின்வரும் பதிலைக் கூறினார்:
“உதாரணத்திற்கு 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நடந்த பாரிஸ் கம்யூன் புரட்சியை எடுத்துப் பாருங்கள். அந்த நேரத்தில் “ஜென்ம விரோதிகளான” பிரெஞ்சு இராணுவமும், ஜெர்மன் இராணுவமும் விட்டுக்கொடாமல் கடும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.
பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்த அடுத்த நாளே அதுவரை ஒன்றையொன்று கொன்று குவித்துக் கொண்டிருந்த ஜெர்மன் இராணுவமும், பிரெஞ்சு இராணுவமும் தமது “ஆயிரம் வருட கால” பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து விட்டன.

அன்று “எதிரி” நாட்டுப் படைகளின் ஒத்துழைப்பு இருந்த படியால் தான், பிரெஞ்சு இராணுவம் இலகுவாக பாரிஸ் புரட்சியை நசுக்க முடிந்தது. அது முடிந்த பின்னர் இரண்டு நாட்டுப் படைகளும் வழமை போல மீண்டும் யுத்ததிற்கு திரும்பிச் சென்று விட்டன.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுள்ளது. இந்த முதலாளித்துவ தேசங்கள் ஒன்றையொன்று விழுங்கும் அளவு பகைமை பாராட்டினாலும் பாட்டாளிவர்க்க புரட்சி நடக்கும் போது ஒன்று சேர்ந்து விடுவார்கள்.”
இந்தியாவில் புதிதாக முப்படைத் தலைமைத் தளபதியாக பதவியேற்றுள்ள பிபின் ராவத் “இராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார். இதன் மூலம், எதிரி நாடான பாகிஸ்தானுடன் யுத்தம் செய்வதை விட, சொந்த நாட்டில் புரட்சி ஏற்பட விடாமல் தடுப்பது தான் இந்திய இராணுவத்தின் தலையாய பணி என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.