கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 02

3.பொதுவுடைமைவாத நடவடிக்கையின் கடமைகள் பற்றி

கட்சி உறுப்பினரின் கடமை

8. புரட்சிகர மார்க்சிய பயிற்சிப் பள்ளியாக பொதுவுடைமைக் கட்சி விளங்க வேண்டும். கட்சி நடவடிக்கைகளில் அன்றாட பொது வேலைகள் வாயிலாக கட்சி நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையிலும், கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் உயிரோட்டமுள்ள உறவுகள் நிறுவப்படுகின்றன.

கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்பது சட்டபூர்வ பொதுவுடைமைக் கட்சிகளில் இன்றும் கூட குறைவாக உள்ளது. இது இந்தக் கட்சிகளின் தலையாகக் குறைபாடாகும். அவற்றின் முன்னேற்றத்தில் தொடர்ச்சியான உத்திரவாதமின்மைக்கு அடித்தளமாக இக்குறைபாடு விளங்குகிறது.

9. பொதுவுடைமைவாதத்துக்கு மாறும் ஆரம்பக் கட்டங்களில் ஒவ்வொரு தொழிலாளர் கட்சியும் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பது, தனது பிரச்சாரத்தில் பழைய கோட்பாட்டுக்குப் பதில் பொதுவுடைமைவாத போதனைகளைக் கடைபிடிப்பது, எதிர் முகாமைச் சேர்ந்த நிர்வாகிகளிடமிருந்து பொதுவுடைமைவாத நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை மாற்றுவது ஆகியவற்றுடன் மனநிறைவு அடையக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது என்பது பொதுவுடைமைவாதியாவதற்கான விருப்பதைக் குறிப்பது மட்டுமேயாகும். பொதுவுடைமைவாத நடவடிக்கை இல்லாமலிருந்தால், பரந்துபட்ட கட்சி உறுப்பினர்கள் இன்னமும் செயலின்றி இருந்தால், பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் கட்சியானது ஒரு சிறு பகுதியைக் கூட நிறைவு செய்யவில்லை என்றே ஆகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.

பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது. மேலும், பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.

10. பொதுவுடைக் கட்சியானது, உண்மையிலேயே செயல் திறனுள்ளவர்களை மட்டுமே கொண்டிருக்க முயல வேண்டும். கட்சியின் தேவைக்கு உட்பட்டு தனது அணிவரிசையிலுள்ள கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது முழு பலத்தையும் காலத்தையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் அவர்களால் முடிந்தவரை கட்சி வேலைகளுக்காக ஒதுக்கி தன்னையே அர்ப்பணிக்க வேண்டும். தனது மிகச் சிறந்த சக்திகளை கட்சிப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் எனக் கோர வேண்டும்.

பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது இயல்பாகவே பொதுவுடைமைவாத நம்பிக்கைகளுடன் சேர்ந்து முதலில் தேர்வுநிலை உறுப்பினராகவும், பின்னர் உறுப்பினராகவும் அதிகார பூர்வமாகப் பதிவு செய்வது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முறையாகச் செலுத்துவது, கட்சிப் பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்துவது போன்றவற்றையும் கொண்டதாகும். ஆனால் மிகமிக முக்கியமானது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சியின் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதாகும்.

ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் ஒரு குழுவில் இருப்பது

11. கட்சி வேலைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக ஒரு விதி என்ற முறையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குழு, கமிட்டி, கமிஷன், பெரிய குழு, பிராக் ஷன் அல்லது கருக்குழு போன்று செயல்படும் குழு ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே கட்சி வேலைகளைச் சரியாகப் பகிர்ந்தளிக்க முடியும். வழிகாட்ட முடியும். நிறைவேற்ற முடியும்.

உள்ளூர் அமைப்பின் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறவே வேண்டியதில்லை. சட்டபூர்வ சூழ்நிலைகள் நிலவும்போது, குறிப்பிட்ட காலக்கிரமத்தில் நடைபெறும் இக் கூட்டங்களுக்கு பதிலாக, உள்ளூர் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துவது உசிதமானதல்ல. அனைத்து உறுப்பினர்களும் இந்தக் கூட்டஙெகளில் முறையாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மட்டும் போதுமானதல்ல. இந்தக் கூட்டங்களுக்கான தயாரிப்பு என்பதே சிறு குழுக்களாக வேலையைப் பிரித்து செய்வது அல்லது குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய சில தோழர்கள் ஒதுக்கப்படுவது என்பதை முன் அனுமானமாகக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தியே தொழிலாளர்களின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள்திரள் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. இந்நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலதரப்பட்ட கடமைகளை சிறு குழுக்கள் மட்டுமே எச்சரிக்கையாக ஆய்வதும், ஆழமாக நடைமுறைப்படுத்துவதும் இயலும். உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும். இவ்வாறே ஒன்றுபட்ட திறன்மிக்க பொதுவுடைமைக் கட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள புரட்சி சக்திகள் அனைத்தையும் கொண்டுவந்து கெட்டிப்படுத்துவது இயலாது.

ஆலை செல்களின் (Factory Cells) முக்கியத்துவம்

12. கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அன்றாட வேலைகளைச் செய்ய பொதுவுடைமைக் கருக்குழுக்களை அமைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கிளர்ச்சிகளை நடத்துதல், கட்சி ஆய்வு, செய்திப் பத்திரிகை வேலை, கட்சி வெளியீடுகளை விநியோகித்தல், தகவல் சேகரிப்பு, தொடர்ச்சியான பணிகள் – இன்னும் இதுபோன்றவற்றைக் கருக்குழுக்கள் செய்யும்.

பொதுவுடைமைக் கட்சிக்கு ஒருசில உறுப்பினர்கள் அல்லது தேர்வுநிலை உறுப்பினர்கள் உள்ள இடங்களில் எல்லாம் தொழிற்சாலை மற்றும் பணிமனைகளில் உள்ள தொழிற்சங்கங்களில், பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இராணுவப் பிரிவுகளில், அன்றாட கட்சி வேலைகளைச் செய்வதற்கான சிறு குழுக்களே பொதுவுடைமைவாதக் கருக்குழுக்களாகும். ஒரே தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்கள் இருந்தால், கருக்குழுவானது பிராக் ஷனாக மாற்றப்பட்டு, அது சிறு குழுக்களின் வேலைகளை வழிநடத்தும்.

பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது.

பரந்த தன்மையுடைய எதிர்த்தரப்பு பிராக்ஷனை அமைப்பதோ, அல்லது ஏற்கெனவே உள்ளதில் பங்கேற்பதோ அவசியமாகும்போது சிறப்புக் கருக்குழுவின் வாயிலாக தொழிற்சங்கத் தலைமையைக் கைப்பற்ற அல்லது தலைமை ஏற்க பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும். தனது சொந்த சுற்றுச்சூழலைப் பொருத்து கருக்குழு வெளிப்படையாக வருவதா, அல்லது பொது மக்கள் மத்தியில் கூட வெளிப்படையாக வருவதா என்பது விசேட சூழ்நிலைகளைக் கணக்கிலெடுத்து அவ்வாறு வருவதன் அபாயங்கள் மற்றும் சாதகங்களை ஆழமாகப் பரிசீலிப்பதைச் சார்ந்திருக்கும்.

13. பொதுக் கடமையான வேலைகளைக் கட்சியில் அறிமுகப்படுத்துவதும், சிறு வேலைக் குழுக்களைக் கட்டியமைப்பதும் மக்கள்திரள் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு (மிகக் குறிப்பாக) கடினமான பணியாகும். இதை எடுத்த எடுப்பிலேயே சாதித்துவிட முடியாது. இதற்கு சலிப்பற்ற விடாமுயற்சி, முதிர்ச்சி பெற்ற அறிவு, மகத்தான ஆற்றல் ஆகியவை வேண்டும்.

இந்தப் புதிய வடிவிலான நிறுவனத்தைத் துவக்கத்திலிருந்தே எச்சரிக்கையுடனும் முதிர்ச்சியான அறிவுடனும் கட்டியமைப்பது குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் பெயரளவிலான திட்டத்தின்படி கருக்குழுக்களாகவும், சிறு சிறு குழுக்களாகவும் பிரித்து உடனடியாகக் கட்சியின் அன்றாட பொது வேலைகளைச் செய்யுமாறு அவற்றை அறைகூவி அழைப்பது என்பது மிகச் சுலபமான வேலையாகும். ஆனால், இத்தகைய தொடக்கம் என்பது தொடங்காமல் இருப்பதைவிட மோசமானது. இந்த மகத்தான கண்டுபிடிப்புகளின்பால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மன நிறைவின்மையும் வெறுப்பையுமே இது தூண்டிவிடும்.

பொதுவுடைமைவாத செல்களை (Cell) எப்படிக் கட்டியமைப்பது?

உறுதியான நம்பிக்கையும் ஊக்கமும் உடைய பொதுவுடைமைவாதிகளான செயல்திறனுள்ள பல அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து – நாட்டின் பல்வேறு மையங்களில் உள்ள இயக்கத்தின் நிலைமையை அறிந்தவர்களைக் கலந்தாலோசித்து இந்தப் புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவதற்கான விவரமான அடிப்படைகளை விரிவாக வகுக்க வேண்டும் என்பதை நாம் சிபாரிசு செய்கிறோம். இதன்பின்னர், பயிற்றுவிக்கப்பட்ட அமைப்பாளர்கள் அல்லது அமைப்புக் கமிட்டிகள், களத்தில் வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழுக்களின் முதல்தரமான தலைவர்களைத் தெரிவு செய்து கொண்டு ஆரம்ப வேலைகளைத் துவக்க வேண்டும். அதன்பின்னர் கட்சி நிறுவனங்கள், வேலைக்கான குழுக்கள், கருக்குழுக்கள், தனிப்பட்ட உறுப்பினர்கள் அனைத்துக்கும் பருண்மையான, குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகள் முன்வைக்கப்பட வேண்டும். இவற்றை முன்வைக்கும்போது, அவை அவர்களுக்குப் பயனுள்ளவையாகவும், விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் அமல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியமான இடங்களில் இக்கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்போது தவிர்க்கப்பட வேண்டிய தவறான நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.

14. இந்த மறு ஒழுங்கமைப்பு வேலைகள் நடைமுறையில் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆரம்பத்தில் எண்ணற்ற கருக்குழுக்கள் அல்லது வேலைக்கான குழுக்களை உள்ளூர் நிறுவனங்களில் அமைக்கக் கூடாது. தனியாகப் பிரிக்கப்பட்ட முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்களில் அமைக்கப்பட்ட சில கருக் குழுக்கள் சரியாக இயங்குவதையும், கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அவசியமான அளவு அவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் (எடுத்துக்காட்டாக, தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு, மகளிர் இயக்கம், கிளர்ச்சித்துறை, பத்திரிகை வேலை, வேலையின்மை எதிர்ப்பு இயக்கம் போன்றவை) நிரூபணமாக்க வேண்டும். புதிய நிறுவன எந்திரம் குறிப்பிடத்தக்க நடைமுறை அனுபவம் பெறும்வரை பழைய நிறுவனக் கட்டமைப்பு அவசர கோலமாகக் கலைக்கப்படக் கூடாது. அதேவேளையில், கட்சி நிறுவன வேலைகளின் இந்த அடிப்படைக் கடமைகள் ஒவ்வொரு இடத்திலும் மீமிகு ஆற்றலுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இவை சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகளுக்கும் மகத்தான கடமைகளை சுமத்துகின்றன.

பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.

பாட்டாளி வர்க்கப் போராட்ட மையங்கள் அனைத்திலும் பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்ஷன், தொழிலாளர் குழுக்கள் பரந்துவிரிந்து வலைப்பின்னல் ஆக அமைக்கப்பட்டு இயங்கும் வரையில், கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் அன்றாட புரட்சி வேலையில் தனது பங்கைச் செய்யும் வரையில் இவ்வாறு செய்வது உறுப்பினர்களுக்கு இயல்பானதாகவும் வழமையானதாகவும் ஆகும் வரையில் இக்கடமைகளை நிறைவேற்றுவதில் கடின உழைப்பைச் செலுத்துவதிலிருந்து கட்சியானது ஓய்வாக இருக்க தன்னைத்தானே அனுமதிக்கக் கூடாது.

சோதித்தறிவது

15. இந்த அடிப்படையிலான நிறுவனக் கடமையானது கட்சித் தலைமை உறுப்புகளின் மீது ஒரு கடப்பாட்டைச் சுமத்துகின்றது. கட்சி வேலைகளின் மீது முறையான, தொடர்ச்சியான, செல்வாக்கு செலுத்தும்படியான முறையில் இடையறாது வழிகாட்டுவதும் தனது கட்டுப்பாட்டை செலுத்துவதுமே அக்கடப்பாடு. கட்சி நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் செயலூக்கமிக்கத் தோழர்கள் தமது பங்குக்கு பன்முக செல்வாக்கு செலுத்துவதானது இதற்குத் தேவைப்படுகிறது. பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

மேலிருந்து அறிவிப்பதும் கீழிருந்து அறிக்கை பெறுவதும் – தலைமையின் மையக் கடமை

16. நமது கட்சி வேலைகள் முழுவதும் சித்தாந்த அல்லது நடைமுறைப் போராட்டங்களாகவோ அல்லது போராட்டத்துக்கான தயாரிப்பு வேலையாகவோ இருக்கின்றன. இதுவரையில் இப்பணியில் தேர்ச்சி என்பது மிகவும் குறைபாடுள்ளதாகவே இருந்து வருகிறது. கட்சி நடவடிக்கைகள் அரிதாகவே இருப்பது என்பது மிக முக்கிய துறைகளில் கூட காணப்படுகின்றன. உதாரணமாக, இரகசிய உளவாளிகளை எதிர்ப்பது என்ற விசயத்தில் சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகள் மிகச் சிறிய அளவு பணிகளையே செய்துள்ளன. நமது கட்சித் தோழர்களுக்கு ஒரு விதி என்ற முறையில் செய்ய வேண்டிய அறிவுறுத்தும் (Instruct) வேலை எப்போதாவது செய்யப்படுகிறது – அல்லது இரண்டாம் பட்சமாக செய்யப்படுவதாக இருக்கிறது. இது எந்த அளவு மேலோட்டமாகச் செய்யப்படுகிறது என்றால், கட்சியின் தீர்மானங்களும் ஏன் கட்சித் திட்டமும் பொதுவுடைமை அகிலத்தின் தீர்மானங்களும்கூட மிகப் பெருமளவில், மிகப் பரவலான பிரிவினரான கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. மிக உயர்ந்த அளவில் தேர்ச்சி பெறுவதற்காக கட்சி நிறுவனக் கட்டமைவு முழுவதிலும் கட்சியின் செயல்பாட்டுக் கமிட்டிகள் அனைத்திலும் முறையாகவும், இடையறாதும் அறிவுறுத்தும் வேலை செய்யப்பட்டாக வேண்டும்.

17. (கீழிருந்து) அறிக்கைகள் சமர்ப்பிப்பது என்பதும் பொதுவுடைமைவாத நடவடிக்கையில் கடமைகளைச் சேர்ந்ததாகும். இது, கட்சியின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உறுப்புகளின், இதுபோலவே ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரின் கடமையாகும். குறுகிய காலத்துக்கான பொது அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்சியின் விசேடமான கமிட்டிகளின் வேலைகளைப் பற்றி விசேடமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முறையாகவும் தொடர்ச்சியாகவும் அறிக்கை சமர்ப்பிப்பது என்பதை எந்த அளவு அவசியமானதாக செய்ய வேண்டும் என்றால், இது ஒரு நிரந்தரமாக நிறுவப்பட்ட வழிமுறை என்ற அளவுக்கு, பொதுவுடைமை இயக்கத்தின் மிகச் சிறந்த பாரம்பரியம் என்ற அளவுக்கு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் தனது மேல்மட்ட கமிட்டிக்கு வேலை அறிக்கை சமர்ப்பிப்பது

18. ஒவ்வொரு கட்சியும் தனது காலாண்டு வேலை அறிக்கையை பொதுவுடைமை அகிலத்தின் தலைமை உறுப்புக்குத் தருதல் வேண்டும். கட்சி நிறுவனம் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்த மேல் கமிட்டிக்கு (எடுத்துக்காட்டாக, பகுதி அடிப்படையிலான ஒவ்வொரு கிளையும் தனக்கு மேலான கட்சிக் கமிட்டிக்கு) மாதாந்திர வேலை அறிக்கையை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக் கருக்குழுவும், பிராக்ஷனும், தொழிலாளர் குழுவும் எந்தக் கட்சி உறுப்பின் பொறுப்பில் இருக்கின்றனவோ, அவற்றுக்குத் தமது அறிக்கையை அனுப்புதல் வேண்டும். தனி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாம் அங்கம் வகிக்கும் கருக்குழு அல்லது தொழிலாளர் குழுவுக்கு (முறையே அவற்றின் தலைவருக்கு) அறிக்கை அளிக்க வேண்டும். இதுபோலவே குறிப்பிட்ட விசேட பொறுப்பை நிறைவேற்றியது பற்றி எந்தக் கட்சி உறுப்பு அந்த வேலையை ஒப்படைத்ததோ, அதற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இந்த அறிக்கையானது எப்போது சாத்தியப்பட்ட அளவுக்கு முதல் சந்தர்ப்பத்திலேயே அளிக்கப்பட வேண்டும். வேலையைச் செய்யுமாறு பணித்த கட்சி உறுப்பு அல்லது தோழர் எழுத்து பூர்வமான அறிக்கை வேண்டுமெனக் கோரினால் ஒழிய, அறிக்கை வாய் மூலமாகவே இருக்க வேண்டும். அறிக்கைகள் குறிப்பாகவும் விசயத்தை விட்டு விலகாமலும் இருக்க வேண்டும். வெளியிடப்படக் கூடாத அறிக்கைகளைப் பத்திரமாக வைத்திருக்கவும், முக்கியமான அறிக்கைகளைக் காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட கட்சி அங்கங்களுக்கு அனுப்புவதும் அறிக்கைகளைப் பெறுபவரின் பொறுப்பாகும்.

வேலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?

19. இந்த அறிக்கைகள் அனைத்தும் இயல்பாகவே, அறிக்கை அளிப்பவரின் வேலைகளைப் பற்றிய விவரங்களுடன் வரம்பிட்டுக் கொள்பவையாக இருக்க வேண்டும். நமது வேலையின்போது கவனத்துக்கு வந்த, நமது எதிர்காலப் போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவமுடைய விசேட சூழ்நிலைகள், நமது எதிர்கால வேலைகளில் மாற்றம் அல்லது முன்னேற்றத்தைக் கொண்டுவரத்தக்கதான குறிப்பான பரிசீலனைகள், வேலையை நிறைவேற்றும்போது உணரப்பட்ட முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவை அனைத்தும் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கைகள் இருக்க வேண்டும்.

பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்ஷன், தொழிலாளர் குழுக்கள் அனைத்திலும் எல்லா வேலை அறிக்கைகளும் – அவை பெறுகின்றவையும், அதுபோலவே அவை அனுப்புபவையும் – முற்று முழுதாக விவாதிக்கப்பட வேண்டும். இத்தகைய விவாதங்களை நடத்துவது ஒரு முறையான பழக்கமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான நிறுவனங்களின் குறிப்பாக குட்டி முதலாளித்துவ தொழிலாளர் நிறுவனங்களின் அதிலும் முக்கியமாக சோசலிஸ்டு கட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி கண்காணிப்பதையும், அவை பற்ற அறிக்கை செய்வதையும் கருக்குழுக்களிலும் தொழிலாளர் குழுக்களிலும் உள்ள தனிப்பட்ட கட்சி உறுப்பினர்களும் அல்லது குழுவாக உள்ள கட்சி உறுப்பினர்களும் கவனமாகச் செய்ய வேண்டும்.

(தொடரும்)

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க