கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 03

முதல் பாகம்

பொதுவுடைமைவாத செல்(Cell) களை எப்படிக் கட்டியமைப்பது?

உறுதியான நம்பிக்கையும் ஊக்கமும் உடைய பொதுவுடைமைவாதிகளான செயல்திறனுள்ள பல அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து – நாட்டின் பல்வேறு மையங்களில் உள்ள இயக்கத்தின் நிலைமையை அறிந்தவர்களைக் கலந்தாலோசித்து இந்தப் புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவதற்கான விவரமான அடிப்படைகளை விரிவாக வகுக்க வேண்டும் என்பதை நாம் சிபாரிசு செய்கிறோம். இதன்பின்னர், பயிற்றுவிக்கப்பட்ட அமைப்பாளர்கள் அல்லது அமைப்புக் கமிட்டிகள், களத்தில் வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழுக்களின் முதல்தரமான தலைவர்களைத் தெரிவு செய்து கொண்டு ஆரம்ப வேலைகளைத் துவக்க வேண்டும். அதன்பின்னர் கட்சி நிறுவனங்கள், வேலைக்கான குழுக்கள், கருக்குழுக்கள், தனிப்பட்ட உறுப்பினர்கள் அனைத்துக்கும் பருண்மையான, குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகள் முன்வைக்கப்பட வேண்டும். இவற்றை முன்வைக்கும்போது, அவை அவர்களுக்குப் பயனுள்ளவையாகவும், விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் அமல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியமான இடங்களில் இக்கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்போது தவிர்க்கப்பட வேண்டிய தவறான நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.

பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

14. இந்த மறு ஒழுங்கமைப்பு வேலைகள் நடைமுறையில் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆரம்பத்தில் எண்ணற்ற கருக்குழுக்கள் அல்லது வேலைக்கான குழுக்களை உள்ளூர் நிறுவனங்களில் அமைக்கக் கூடாது. தனியாகப் பிரிக்கப்பட்ட முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்களில் அமைக்கப்பட்ட சில கருக்குழுக்கள் சரியாக இயங்குவதையும், கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அவசியமான அளவு அவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் (எடுத்துக்காட்டாக, தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு, மகளிர் இயக்கம், கிளர்ச்சித்துறை, பத்திரிகை வேலை, வேலையின்மை எதிர்ப்பு இயக்கம் போன்றவை) நிரூபணமாக்க வேண்டும். புதிய நிறுவன எந்திரம் குறிப்பிடத்தக்க நடைமுறை அனுபவம் பெறும்வரை பழைய நிறுவனக் கட்டமைப்பு அவசர கோலமாகக் கலைக்கப்படக் கூடாது. அதேவேளையில், கட்சி நிறுவன வேலைகளின் இந்த அடிப்படைக் கடமைகள் ஒவ்வொரு இடத்திலும் மீமிகு ஆற்றலுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இவை சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகளுக்கும் மகத்தான கடமைகளை சுமத்துகின்றன.

பாட்டாளி வர்க்கப் போராட்ட மையங்கள் அனைத்திலும் பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்சன், தொழிலாளர் குழுக்கள் பரந்துவிரிந்து வலைப்பின்னல் ஆக அமைக்கப்பட்டு இயங்கும் வரையில், கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் அன்றாட புரட்சி வேலையில் தனது பங்கைச் செய்யும் வரையில் இவ்வாறு செய்வது உறுப்பினர்களுக்கு இயல்பானதாகவும் வழமையானதாகவும் ஆகும் வரையில் இக்கடமைகளை நிறைவேற்றுவதில் கடின உழைப்பைச் செலுத்துவதிலிருந்து கட்சியானது ஓய்வாக இருக்க தன்னைத்தானே அனுமதிக்கக் கூடாது.

சோதித்தறிவது

15. இந்த அடிப்படையிலான நிறுவனக் கடமையானது கட்சித் தலைமை உறுப்புகளின் மீது ஒரு கடப்பாட்டைச் சுமத்துகின்றது. கட்சி வேலைகளின் மீது முறையான, தொடர்ச்சியான, செல்வாக்கு செலுத்தும்படியான முறையில் இடையறாது வழிகாட்டுவதும் தனது கட்டுப்பாட்டை செலுத்துவதுமே அக்கடப்பாடு. கட்சி நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் செயலூக்கமிக்கத் தோழர்கள் தமது பங்குக்கு பன்முக செல்வாக்கு செலுத்துவதானது இதற்குத் தேவைப்படுகிறது. பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

 

மேலிருந்து அறிவிப்பதும் கீழிருந்து அறிக்கை பெறுவதும்
– தலைமையின் மையக் கடமை

16. நமது கட்சி வேலைகள் முழுவதும் சித்தாந்த அல்லது நடைமுறைப் போராட்டங்களாகவோ அல்லது போராட்டத்துக்கான தயாரிப்பு வேலையாகவோ இருக்கின்றன. இதுவரையில் இப்பணியில் தேர்ச்சி என்பது மிகவும் குறைபாடுள்ளதாகவே இருந்து வருகிறது. கட்சி நடவடிக்கைகள் அரிதாகவே இருப்பது என்பது மிக முக்கிய துறைகளில் கூட காணப்படுகின்றன. உதாரணமாக, இரகசிய உளவாளிகளை எதிர்ப்பது என்ற விசயத்தில் சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகள் மிகச் சிறிய அளவு பணிகளையே செய்துள்ளன. நமது கட்சித் தோழர்களுக்கு ஒரு விதி என்ற முறையில் செய்ய வேண்டிய அறிவுறுத்தும் (Instruct) வேலை எப்போதாவது செய்யப்படுகிறது – அல்லது இரண்டாம் பட்சமாக செய்யப்படுவதாக இருக்கிறது. இது எந்த அளவு மேலோட்டமாகச் செய்யப்படுகிறது என்றால், கட்சியின் தீர்மானங்களும் ஏன் கட்சித் திட்டமும் பொதுவுடைமை அகிலத்தின் தீர்மானங்களும்கூட மிகப் பெருமளவில், மிகப் பரவலான பிரிவினரான கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. மிக உயர்ந்த அளவில் தேர்ச்சி பெறுவதற்காக கட்சி நிறுவனக் கட்டமைவு முழுவதிலும் கட்சியின் செயல்பாட்டுக் கமிட்டிகள் அனைத்திலும் முறையாகவும், இடையறாதும் அறிவுறுத்தும் வேலை செய்யப்பட்டாக வேண்டும்.

17. (கீழிருந்து) அறிக்கைகள் சமர்ப்பிப்பது என்பதும் பொதுவுடைமைவாத நடவடிக்கையில் கடமைகளைச் சேர்ந்ததாகும். இது, கட்சியின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உறுப்புகளின், இதுபோலவே ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரின் கடமையாகும். குறுகிய காலத்துக்கான பொது அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்சியின் விசேடமான கமிட்டிகளின் வேலைகளைப் பற்றி விசேடமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முறையாகவும் தொடர்ச்சியாகவும் அறிக்கை சமர்ப்பிப்பது என்பதை எந்த அளவு அவசியமானதாக செய்ய வேண்டும் என்றால், இது ஒரு நிரந்தரமாக நிறுவப்பட்ட வழிமுறை என்ற அளவுக்கு, பொதுவுடைமை இயக்கத்தின் மிகச் சிறந்த பாரம்பரியம் என்ற அளவுக்கு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் தனது மேல்மட்ட கமிட்டிக்கு வேலை அறிக்கை சமர்ப்பிப்பது

18. ஒவ்வொரு கட்சியும் தனது காலாண்டு வேலை அறிக்கையை பொதுவுடைமை அகிலத்தின் தலைமை உறுப்புக்குத் தருதல் வேண்டும். கட்சி நிறுவனம் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்த மேல் கமிட்டிக்கு (எடுத்துக்காட்டாக, பகுதி அடிப்படையிலான ஒவ்வொரு கிளையும் தனக்கு மேலான கட்சிக் கமிட்டிக்கு) மாதாந்திர வேலை அறிக்கையை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக் கருக்குழுவும், பிராக்சனும், தொழிலாளர் குழுவும் எந்தக் கட்சி உறுப்பின் பொறுப்பில் இருக்கின்றனவோ, அவற்றுக்குத் தமது அறிக்கையை அனுப்புதல் வேண்டும். தனி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாம் அங்கம் வகிக்கும் கருக்குழு அல்லது தொழிலாளர் குழுவுக்கு (முறையே அவற்றின் தலைவருக்கு) அறிக்கை அளிக்க வேண்டும். இதுபோலவே குறிப்பிட்ட விசேட பொறுப்பை நிறைவேற்றியது பற்றி எந்தக் கட்சி உறுப்பு அந்த வேலையை ஒப்படைத்ததோ, அதற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

படிக்க:
முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை!
♦ காஷ்மீர் பிரிவு 370 ரத்து: ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

இந்த அறிக்கையானது எப்போது சாத்தியப்பட்ட அளவுக்கு முதல் சந்தர்ப்பத்திலேயே அளிக்கப்பட வேண்டும். வேலையைச் செய்யுமாறு பணித்த கட்சி உறுப்பு அல்லது தோழர் எழுத்து பூர்வமான அறிக்கை வேண்டுமெனக் கோரினால் ஒழிய, அறிக்கை வாய் மூலமாகவே இருக்க வேண்டும். அறிக்கைகள் குறிப்பாகவும் விசயத்தை விட்டு விலகாமலும் இருக்க வேண்டும். வெளியிடப்படக் கூடாத அறிக்கைகளைப் பத்திரமாக வைத்திருக்கவும், முக்கியமான அறிக்கைகளைக் காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட கட்சி அங்கங்களுக்கு அனுப்புவதும் அறிக்கைகளைப் பெறுபவரின் பொறுப்பாகும்.

வேலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?

19. இந்த அறிக்கைகள் அனைத்தும் இயல்பாகவே, அறிக்கை அளிப்பவரின் வேலைகளைப் பற்றிய விவரங்களுடன் வரம்பிட்டுக் கொள்பவையாக இருக்க வேண்டும். நமது வேலையின்போது கவனத்துக்கு வந்த, நமது எதிர்காலப் போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவமுடைய விசேட சூழ்நிலைகள், நமது எதிர்கால வேலைகளில் மாற்றம் அல்லது முன்னேற்றத்தைக் கொண்டுவரத்தக்கதான குறிப்பான பரிசீலனைகள், வேலையை நிறைவேற்றும்போது உணரப்பட்ட முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவை அனைத்தும் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கைகள் இருக்க வேண்டும்.

பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்சன், தொழிலாளர் குழுக்கள் அனைத்திலும் எல்லா வேலை அறிக்கைகளும் – அவை பெறுகின்றவையும், அதுபோலவே அவை அனுப்புபவையும் – முற்று முழுதாக விவாதிக்கப்பட வேண்டும். இத்தகைய விவாதங்களை நடத்துவது ஒரு முறையான பழக்கமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான நிறுவனங்களின் குறிப்பாக குட்டி முதலாளித்துவ தொழிலாஈளர் நிறுவனங்களின் அதிலும் முக்கியமாக சோசலிஸ்டு கட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி கண்காணிப்பதையும், அவை பற்றி அறிக்கை செய்வதையும் கருக்குழுக்களிலும் தொழிலாளர் குழுக்களிலும் உள்ள தனிப்பட்ட கட்சி உறுப்பினர்களும் அல்லது குழுவாக உள்ள கட்சி உறுப்பினர்களும் கவனமாகச் செய்ய வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க