பத்திரிகை செய்தி
பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பாணை, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தொடர்ந்த வழக்கால் திரும்ப பெறப்பட்டுள்ளது!
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசாமி திருக்கோயிலில் சமையல் பணியாளர் மற்றும் நைவேத்தியம் பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பாணை, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தொடர்ந்த வழக்கால் திரும்ப பெறப்பட்டுள்ளது!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்திருந்தும் கடந்த 14 வருடமாக 203 பார்ப்பனரல்லாத மாணவர்களாகிய நாங்கள் அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்காமல் காத்திருக்கிறோம். எமது பணி நியமனத்திற்காக போராடுவது மட்டுமின்றி திருக்கோயில் பணி நியமனங்களில் பார்ப்பனரல்லாதோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் போராடி வருகிறோம்.
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசாமி திருக்கோயிலில் சமையல் பணியாளர் (பரிச்சாகரர்) மற்றும் நைவேத்தியம் ஆகிய பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம்.
படிக்க :
♦ கருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் ! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் !
♦ பாஜக தலைவர் எல். முருகனுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கண்டனம் !
மார்ச் 4-ம் தேதி அன்று வழக்கானது தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எமது சார்பில் மூத்த வழக்குரைஞர் திரு. பிரபு ராஜதுரை அவர்கள் ஆஜரானார். திருக்கோயில் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் அந்த அறிவிப்பாணை திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவித்ததால் வழக்கானது முடித்து வைக்கப்பட்டது.
ஏற்கெனவே, இதே போன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பிராமணர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிப்பாணைகள் வெளிவந்த போதும் உயர்நீதிமன்றத்தினை நாடி இடைக்கால உத்தரவுகளை பெற்றோம். பின் எங்களது வழக்குகளின் காரணமாக அவை திரும்பப் பெறப்பட்டன.
திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் இவ்வாறு சட்டவிரோத பணிநியமன அறிவிப்பாணைகள் வெளியிடுவதும், நாங்கள் வழக்கு போட்டவுடன் திரும்ப பெறப்படுவதுமாக இது தொடர் நடவடிக்கையாக மாறியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும் அரசியலைமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பிராமணர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என சாதி அடிப்படையில் திருக்கோயில் பணி நியமனங்கள் செய்யப்படுவதை தடுத்திட வேண்டும். அவ்வாறு அறிவிப்பாணைகள் வெளியிடும் அறநிலையத்துறை அதிகாரிகளை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும். இது போன்ற ஒவ்வொரு அறிவிப்பாணையும் பார்ப்பனரல்லாத மக்களின் மீதான சாதிய இழிவை நிலைநிறுத்தும் செயல் என்பதால் தமிழகமும் விழிப்பாக இருந்து தடுத்திட வேண்டும் என உரிமையுடன் கோருகிறோம்.
வழக்கு போடும் போது சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனு (Affidavit)
வழக்கு முடித்து வைக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு
தரவிறக்கம் செய்ய மேலே உள்ள பட்டனை அழுத்தவும்.
தமிழக அரசே! இந்து அறநிலையத்துறையே!
♦ அரசியலைமைப்பு சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பிராமணர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என சாதி அடிப்படையில் திருக்கோயில் பணி நியமனங்களை அனுமதிக்காதே !
♦ பிராமணர்கள் மட்டுமே திருக்கோயில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பாணைகள் வெளியிடும் அறநிலையத்துறை அதிகாரிகளை உடனே பணிநீக்கம் செய் !
♦ தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு நியமனத்திற்காக காத்திருக்கும் பார்ப்பனரல்லாத 203 அர்ச்சக மாணவர்களுக்கும் அர்ச்சகர் பணி நியமனங்களை உடனே வழங்கு !
♦ அர்ச்சகர் உள்ளிட்ட திருக்கோயில்களின் அனைத்து நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு சட்டவிதிகளை பின்பற்று !
இப்படிக்கு
வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : 90474 00485