உத்தரப் பிரதேசத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட 120 வழக்குகளில், 94 வழக்குகளை அடிப்படையற்றதாகக் கூறி ரத்து செய்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரானப் பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பாஜக அரசு, சிறுபான்மையினர் செய்யும் சாதாரணக் குற்றங்களுக்கு எல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் மேற்கொண்ட ஆய்வில் அம்பலமாகி இருக்கிறது.
படிக்க :
♦ பிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்
♦ உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை
கடந்த ஜனவரி 2018-ஆம் ஆண்டு முதல், டிசம்பர் 2020-ஆம் ஆண்டு வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எதிரான 120 ஆட்கொணர்வு மனுக்களில் (Habeas Corpus) 94 தடுப்புக் காவல் கைதுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய 32 மாவட்ட ஆட்சியாளர்கள் கொடுத்த ஆணைகளைத்தான் அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பெரும்பான்மை தடுப்புக் காவல் கைதுகளை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அதற்கான காரணங்களாக, “ஒரே விசயத்தை பழையை முதல் தகவல் அறிக்கைகளில் இருந்து அப்படியே எடுத்து ஒட்டி பதிவு செய்திருப்பது”, “குற்றம் சாட்டப்பட்டவருக்கான உரிமைகளை வழங்க மறுப்பது”, “பிணைக் கிடைக்காத வகையில் பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்குத் தொடுப்பது” ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த கருப்புச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்ள தமது அதிகாரத்தை உத்தரப் பிரதேச அரசுப் பயன்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கிறது.
இவ்வாறு கடந்த மூன்றாண்டுகளில் தொடுக்கப்பட்ட 120 வழக்குகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு வழக்குகள் (41 வழக்குகள்) பசுவதைத் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 41 வழக்குகளில் 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை என்.எஸ்.ஏ-விலிருந்து விடுவிக்கையில் மாநில அரசுக்கு தமது கடுமையானக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
மீதமுள்ள 10 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.
இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளைப் பரிசீலித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம், தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டதற்கும், பிணையை மறுப்பதற்கும் வைக்கப்பட்ட காரணங்களாகக் கிட்டத்தட்ட அனைத்துப் பசுவதை வழக்குகளிலும் ஒரே விசயமே சொல்லப்பட்டிருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள், சமூகத்தை அச்சுறுத்தும் தன்மை கொண்டவர்கள் என்றும், அவர்கள் “மீண்டும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.
பசுவதைத் தொடர்பான வழக்குகளில் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், என்னென்னக் காரணங்களைக் கூறியிருக்கிறது என்று பார்ககலாம்.
11 வழக்குகளில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சுவதற்கு அனுமதி தருகையில் மாவட்ட ஆட்சியர்கள், “கவனத்தைச் செலுத்திப் பரிசீலிக்கவில்லை” என்று குறிப்பிட்டு ரத்து செய்துள்ளது.
13 வழக்குகளில், கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது தரப்பைப் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளனர் என்று கூறி ரத்து செய்திருக்கிறது.
7 வழக்குகளில், அவை சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் என்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் தேவையில்லை என்றும் கூறி ரத்து செய்தது.
6 வழக்குகளில், தனி சிறப்பான வழக்காக முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டிருப்பதையும், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எவ்வித மோசமான குற்ற வரலாறு இல்லாததையும் சுட்டிக் காட்டி ரத்து செய்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
இதுமட்டுமல்ல, எதன் அடிப்படையில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து அனைத்து முதல் தகவல் அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளக் காரணங்களும் ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன என்று குறிப்பிடுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம்.
இந்த 41 வழக்குகளில் 7 வழக்குகளில் பசு வெட்டியது, “அந்தப் பகுதியில் அச்சமிக்க சூழலை ஏற்படுத்தியதாகவும், மொத்த நிலைமையும் பயங்கரவாதம் கமிழ்ந்தச் சூழலாக இருந்ததாகவும்” தெரிவிக்கின்றன.
ஆறு வழக்குகளில் ஒரே மாதிரியான 6 சூழல்களைக் குறிப்பிட்டிருக்கிறது. “அடையாளம் தெரியாத நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்”, “சம்பவம் நடந்த சில நிமிடங்களில் போலீசார் தகக்கப்பட்டனர்”, “போலீசார் தாக்கப்பட்டதால், மக்கள் தாறுமாறாக ஓடத் துவங்கியதால் நிலைமை மிகவும் பதற்றமானதாக மாறியது”, “மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடத்துவங்கினர்”, “இச்சூழலால் மக்கள் தங்களது அன்றாடப் பணிகளைக் கூட செய்ய முடியவில்லை”. “குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கையால், அந்தப் பகுதியின் அமைதி, சட்டம், ஒழுங்கு நிலைமைகள் மிகவும் மோசமான வகையில் பாதிப்புக்குள்ளாகின” ஆகியவையே சூழல்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இரண்டு வழக்குகளில், “குறிப்பாக பெண்கள், வீட்டை விட்டு வெளியேப்போகவும், தங்களது வழக்கமான வேலையைச் செய்யவும் தயங்கினர்”, “வேகமான வாழ்க்கை தடைபட்டதுதோடு, பொது ஒழுங்குப் பாதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இரண்டு வழக்குகளில், “அச்சம் மிகுந்த சூழல் உருவானது, அருகில் உள்ள பெண்கள் பள்ளி மூடப்பட்டது, அருகாமை வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி மாடு வெட்டுபவரை கைது செய்த சூழல் பற்றி கூச்சமில்லாமல் போலீசு அளித்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில்தான் மாவட்ட ஆட்சியர் என்.எஸ்.ஏ-வின் கீழ் வழக்குத் தொடுக்க அனுமதியளித்தார் எனில், அந்த மாவட்ட ஆட்சியரின் அறிவும் நாணயமும் எந்த அளவிற்கு ‘சிறப்பானதாக’ இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இது குறித்து உ.பி. மாநில ஆதித்யநாத் அரசின் தலைமைச் செயலரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் கேட்டபோது அதற்குப் பதிலளிக்கவில்லை.
படிக்க :
♦ மாட்டை வெட்டிய குற்றச்சாட்டுக்கு NSA ! போலீசை கொன்ற காவிகளுக்கு பாராட்டு !
♦ யோகி என்ட்ரி : உ.பி. மாடல் ட்ரெய்லர் || கேலிச்சித்திரம்
ஒரு மாநிலத்தில் மக்களை, குறிப்பாக சிறுபான்மையினரை ஒடுக்குவதற்குக் கொடும் ஆள்தூக்கிச் சட்டமான என்.எஸ்.ஏ எவ்வாறுப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கானச் சான்று இது.
இதைப் போலவே ராஜ துரோகச் சட்டமும் (124A), சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமும் (UAPA) நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளுக்குப் பிறகு சமீபத்தில் இந்தச் சட்டத்தை சமூகச் செயற்பாட்டாளர்கள் மீது மீண்டும் ஏவத் துவங்கியது எடப்பாடி அரசு. இத்தகைய கருப்புச் சட்டங்களை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடினால்தான் விடிவு கிடைக்கும்.
கர்ணன்
செய்தி ஆதாரம் : The Indian Express