பத்திரிக்கைச் செய்தி !
05.05.2021
கொரோனா : மக்கள் கொத்துக் கொத்தாக செத்து கொண்டிருக்கிறார்கள்
மூடு டாஸ்மாக்கை!
கொரோனா பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு மருத்துவமனையின் வாசலில் நோயாளிகள் மூச்சிரைக்க வென்டிலேட்டருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பெருந்தொற்றில் ஓராண்டு அனுபவம் இருந்த போதிலும் அதைக் கையாளுவதற்கு உரிய எந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் போதிய அளவில் செய்யாமல் மத்திய, மாநில அரசுகள் மக்களை அல்லல் பட செய்திருக்கின்றன .
நாளை முதல் 20-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியக் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்திருக்கிறது அரசு. மேலும், பேருந்துகளில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு தடையும் விதித்து இருக்கிறது. இவ்வளவு கட்டுப்பாடுகளும் எதற்கு என்றால் கொரோனாவை ஒழிப்பதற்காக என்று சொல்லுகின்ற இந்த அரசு, பெருந்தொற்றைப் பரப்பும் டாஸ்மாக்கை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்து வைக்க அனுமதி அளித்திருக்கிறது.
தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள இந்த கடும் கட்டுப்பாடுகள் பலரின் வேலையைப் பறிப்பதற்கு அடிப்படையாக இருக்கப் போகின்றது. இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பணத்தையும் டாஸ்மாக்குக்கு செலவு செய்வதற்குதான் இந்த கட்டுப்பாடுகள் பயன்படப் போகின்றன.
அரசுக்கு உண்மையாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முதலில் செய்ய வேண்டியது டாஸ்மாக்கை மூடுவதைத் தான் ! அக்கோரிக்கை மறுக்கப்படும் பொழுது அதற்கு எதிரானப் போராட்டங்களையும் தடுக்க முடியாது. ஆகவே, பதவியேற்கவுள்ள தி.மு.க தலைமையிலான அரசாங்கம் டாஸ்மாக்கை உடனே மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.