PP Letter head

பத்திரிகைச் செய்தி

14.06.2021

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான
முயற்சிகளை முறியடிப்போம் ! தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம் !

பதினைந்து உயிர்களின் தியாகத்தை நெஞ்சில் ஏந்தி, கொலைகார ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

கொலைகார ஸ்டெர்லைட்டோ எப்படியாவது சதி செய்து ஆலையை திறந்து விடுவது என்ற நோக்கில் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

படிக்க :
♦ புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்
♦ ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஆலையைத் திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, அதை ஆமோதித்த ஆளுகின்ற தி.மு.க உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளின் முடிவை மிகச்சிறந்த வாய்ப்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.

மக்களின் துயரத்தைப் பொருட்படுத்தாமல், ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொண்டாட்டத்தோடு அதை விளம்பரப்படுத்தியது. அது குறித்து ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து செய்திகள் வரும்படி பார்த்துக் கொண்டது.

உண்மையில், வாக்குறுதி அளித்ததை விட குறைந்த அளவிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்ததையும், ஏறக்குறைய 1500 டன் வளிமண்டல ஆக்சிஜனை வீணடித்ததையும் நித்யானந்த்த ஜெயராமன் உள்ளிட்டோர் ஆதாரப்பூர்வமாக முன்வைத்துள்ளனர்.

அனைத்து செய்தித்தாள்களிலும் INDIAN MEDICAL ASSOCIATION உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்டெர்லைட்டை பாராட்டிய விளம்பரங்கள் வெளியானது. “உற்ற நேரத்தில் உயிர் காற்று !, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி !” என்று கொலைகாரனுக்கு புனிதர் பட்டம் கொடுத்திருந்தன அந்நிறுவனங்கள். அரசின் அங்கங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்-க்கு ஆதரவாகவும் இருப்பதையே இந்த விளம்பரம் எடுத்துக் காட்டுகிறது.

இதற்கு கடுமையான கண்டனங்கள் தமிழகமெங்கும் எழத் தொடங்கிய நிலையில், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அடுத்த கட்ட நடவடிக்கையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கட்டில்கள், மெத்தைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட்டின் விளம்பரம் மருத்துவமனை சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன.

கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு உதவி செய்வதைப் போல நடித்து, மரணித்த தியாகிகளையும், தூத்துக்குடி மக்களையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிற ஸ்டெர்லைட் நிறுவனம் செய்யும் இச்சதிவேலைகள் அரசின் ஒப்புதலோடுதான் அடுத்தடுத்து வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக திறப்பதற்கான முன்னேற்பாடுகளாகவே இதைக் கருத வேண்டியுள்ளது. ஸ்டெர்லைட்டின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்காமல் அதற்கு ஒத்துழைக்கும் வகையிலேயே தி.மு.க அரசின் போக்கு உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவதற்காக தனிச்சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். அதற்கான போராட்டங்களை தூத்துக்குடி மக்கள் முன்னெடுப்பார்கள். அதற்கு மக்கள் அதிகாரம் துணைநிற்கும்.


தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க